Sunday, April 19, 2015

சாக்ரடீஸ் - ப்ளேட்டோவின் அரசியல் வழி.....! - 4

வாசிப்பின் பதிவு 4

குழந்தைகளுக்கு எவ்வகை கதைகளைச் சொல்லிகொடுத்தால் அவர்களது மன வளர்ச்சிகு அது உதவும் எனக் குறிப்பிடும் சாக்ரடீஸ், இளைஞர்களைப் பற்றியும் சிந்திப்பதை விட்டு வைக்கவில்லை. இளைஞர்களைப் பற்றி பேசும் போது கதைகளைச் சொல்லுதல் என்பதை விட வரலாற்றைச் சொல்லுதல் இளைஞர்களின் சிந்தனை அமைப்பு நேர்பட அமைதலுக்குச் சரியானதாக அமையும் எனக் குறிப்பிடுகின்றார்.

இந்த வகையில் முதலில் அவர் தொட்டுப் பேசும் விசயம் தைரியமாயிருத்தல் என்பது பற்றியது. அடிப்படையில் மரணத்தைப் பற்றிய பயமே ஏனைய எல்லா வகை பயங்களையும் விட ஆழமானது அழுத்தமானது என்பதால் இந்த மரணபயத்தை இளைஞர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருக்க வேண்டும், தைரியமாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடுகின்றார். இறந்து போனோர் இப்படி இருப்பர் அப்படி இருப்பர் .. நரகத்தில் இப்படி வாழ்வர், சுவர்க்கத்தில் இப்படி வாழ்வர் என்பன போன்ற சிந்தனைகள் தேவையற்றன.

பயத்தை எப்படி விலக்கித் தள்ள வேண்டுமோ அதே போல எப்போதும் அழுது கொண்டே இருக்கும் வகையிலான கதைகளையும் இளைஞர்களுக்குச் சொல்லக்கூடாது என்றும் குறிப்பிடுகின்றார். சோகத்தைச் சொல்லி அழவைக்கும் கதைகள் மனத்தின் தைரியத்தை அழிக்கச் செய்வன. இவற்றினால் வாழ்க்கையினை தைரியமாக நேர்கொள்ளும் மன அமைப்பு இளைஞர்களுக்கு இல்லாமல் போய்விடும். எப்போதும் அழுகை தன்மை நிறைந்த கதைகள் கெட்ட பெண்களுக்கும் கோழைகளுக்கும் மட்டுமே பொருந்தும். நல்ல பெண்மணிகளும் நல்ல ஆடவரும் தைரியமான கதைகளை அதிலும் வரலாற்றுக் கதைகளைக் கேட்க வேண்டும் எனக் குறிப்பிடுகின்றார்.

தமிழ் நாட்டு தொலைகாட்சி சீரியல்களைப் பார்த்தால் அவர்கள் தயாரிக்கும் எந்த நாடகமும் இந்த வரையரைக்குள் வராது என்று தைரியமாகச் சொல்லிவிடலாம். அழவைத்து அதில் பணம் சம்பாதிக்கும் ஊடகங்கள் தான் தமிழ்ச்சமூகத்தைச் சுற்றிலும் சூழ்ந்திருக்கின்றன. மெண்மையான உணர்வுகளைத் தொட்டு உணர்ச்சி வசப்பட்டு அழுவதும், பச்சாதாபத்தை எதிர்பார்ப்பதுவும், நேரடியாக பிரச்சனைகளை எதிர்நோக்கும் பண்பினை இழக்கச் செய்பவை.

உடலிலோ உள்ளத்திலோ பலவீனமாக தன்னைக் காட்டிக் கொண்டு பச்சாதாபத்தை எதிர்பார்க்கும் சமூகமாக நமது சமூகத்தில் பலர் உருவாகிவிட்டனர் என்பதைக் காண்கின்றேன். தைரியமாக இருக்க உண்மையான உலக நிலவரத்தைக் கண்கொண்டு காண வேண்டும்.  அப்படிக் காணும் பார்வையில் எவ்வித திரையும் இன்றி நேரடியாக ஒரு பிரச்சனையை,   உள்ளவற்றை உள்ளனவாக காணும் மனப்பக்குவத்தைப் பெண்களும் ஆண்களும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இத்தகைய கருத்துக்களோடு வருகின்ற உரையாடலின் ஒரு பகுதி - ப்ளேட்டோவின் அரசியல் - சாக்ரடீஸின் மூன்றாவது பகுதி.

ஸாக்: நமது இளைஞர்கள் தைரியமாயிருக்க வேண்டுமானால்  அவர்களுக்கு மரண பயம் இருக்கக் கூடாது.  அந்தப் பயம் உண்டாகாதிருக்கக்கூடிய கதைகளை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும். எவனொருவனுக்கு மரணபயம் இருக்கின்றதோ அவன் தைரியமுடையவனாயிருக்க முடியுமென்று நீ கருதுகிறாயா?

அடீ: முடியாதுதான்
..
சாக்: எனவே நமது நூலாசிரியர்கள் பிதிருலோகத்தை நித்தியாமல் அதனைப் பாராட்டுகின்ற விதமாகவே வரலாறுகளை எழுத வேண்டும். அப்படித்தான் எழுதவேண்டுமென்று அவர்களைக் கட்டாயப்படுத்த வேண்டும். சாதாரணமாக அவர்கள் இப்பொழுது எழுதி வருகிற வரலாறுகள் அல்லது கதைகள், உண்மையானவையுமல்ல, வீரத்தையும் உண்டு பண்ணா.

அடீ: நிரம்ப சரி

சாக்: இதே பிரகாரம், நமது கதைகளிலே சகதுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற, சதா அழுது கொண்டிருக்கின்ற பெரிய மனிதர்களைக் கொண்டு நுழைக்கக்கூடாது.
..

அடீ: சரி

சாக்: உண்மைகளுக்கு அதிகமான மதிப்பு வைக்கிற மாதிரியாக நமது இளைஞர்களுக்குக் கல்வி புகட்ட வேண்டும். கடவுளர்களுக்குப் பொய் யென்றால் பிடிக்காது. அஃது அவர்களுக்குப் பிரயோஜனமும் இல்லை. 

​​வாசிப்பும், சிந்தனையும் கருத்துப் பதிவும் தொடரும்...!

சுபா

No comments:

Post a Comment