Monday, July 31, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 127

கதிராமங்கலம் என்ற பெயரைக் கேட்டவுடன் நம் மனதில் முதலில் எழுவது அங்கு மக்கள் தொடர்ச்சியாகச் செய்து வரும் போராட்டம் தான். ஹைட்ரோ கார்பன், மீத்தேன் ஆகியவற்றை நிலத்தடியிலிருந்து எடுப்பதன் வழி தங்கள் விலை நிலம் பாழடைவதை மனதில் கொண்டு பொது மக்களே வெகுண்டெழுந்து தங்கள் நிலத்தை பாதுகாக்க இந்தத் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.  இந்தக் கதிராமங்கலமும் அதன் அருகாமையில் உள்ள ஊரைப் பற்றியும் தான் உ.வே.சாவுடனான நமது உலாவின் இந்தப் பகுதி அமைகின்றது.

என் சரித்திரம் நூலின் 116 வது அத்தியாயத்தில் கதிராமங்கலம் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன. கதிராமங்கலத்தோடு இணைந்தவாறு கம்பரைப் பற்றிய செய்திகளும் வருவதுதான் இந்த அத்தியாயத்தில் ஒரு சிறப்பு.


உ.வே.சா பதிந்திருக்கும் செய்திகளிலிருந்து பார்க்கும் போது கம்பர் என்பது கம்பராமாயணத்தை எழுதிய அக்கிவியின் உண்மையான பெயரல்ல என்றும், அது ஒரு குடியின் பெயர் என்றும் அறிய முடிகின்றது. ஆக, இது ஒரு குடிப்பெயர் என்றும், அவரது இயற்பெயர் மறைந்து விட, குடிப்பெயரே வழக்கில் வரலாயிற்று என்றும் அறிய முடிகின்றது. அதோடு இக்குடியினர், பழங்காலத்தில் கம்பத்தை வைத்து வழிபாடு செய்பவர் என்ற காரணத்தினால் இவரகளுக்கு இப்பெயர் உருவாகியிருக்கலாம் என்ற செய்தியையும் உ.வே.சா குறிப்பிடுகின்றார். 

கம்பர் பெயரைக் கேட்டால் பலருக்கு அம்பிகாபதி அமராவதி பற்றிய நினைவுகளும் ஒட்டக்கூத்தரைப் பற்றிய சிந்தனைகளும் எழுவதைத் தவிர்க்க முடியாதல்லவா? ஒட்டக்கூத்தரைத் தமிழ்ச் சினிமா காட்டியவாறு புரிந்து கொள்வது தவறு. மாறாக வரலாற்று ரீதியில் ஒட்டக்கூத்தரின் ஆளுமையையும் சோழர்களுக்கான அரச சேவையையும் ஆராய்வது சரியான ஒப்பீட்டிற்கும் ஆய்விற்கும் உதவும். நிற்க.

கம்பர் பிறந்த ஊர் மாயூரத்துக்கு அருகே உள்ள திருவழுந்தூர்.  திரு இந்தளூர் என்ற பெயரே மருவி திருவழுந்தூர் ஆகிவிட்டது.  

உ.வே.சா குறிப்பிடும் கம்பர் பற்றிய சில செய்திகள் இது வரை நாம் கேள்விப்படாதவனவாக உள்ளன. அவற்றையும் காண்போமே.

திருவழுந்தூர் தான் கம்பர் பிறந்த ஊர் என்றாலும் கதிராமங்கலத்திற்கும் கம்பருக்கும் கூட ஒரு தொடர்பு இருக்கின்றது என அறிய முடிகின்றது. அதாவது,  திருவழுந்தூரைத் தேரழுந்தூர் என்றும் குறிப்பிடுகின்றனர். கம்பர் காலத்தில் அறியப்பட்ட வள்ளல்களில் ஒருவரான சடையப்ப வள்ளல்  இருந்த ஊர் இதற்கு வடக்கே உள்ள வெண்ணெய் நல்லூர். இந்த கதிராமங்கலமும் கம்பரோடு ஒரு வகையில் தொடர்புடையதாகவே அமைகின்றது. இதனை கதிராமங்கலம் சென்ற போது அங்கேயே கேட்டு தாம் அறிந்ததை உ.வே.சா பதிகின்றார்.

”கதிர் வேய் மங்கலம்” என்பது இந்த ஊருக்குக் கம்பரால் கிட்டிய பெயர். அதுவே பின்னர் கதிராமங்கலம்  எனப் பெயர் மாற்றம் கண்டிருக்கின்றது. இது நடந்ததன் பின்னனியில் ஒரு செய்தியும் இருக்கின்றது.

கம்பர் ஒரு தாசியிடம் அன்பு கொண்டிருந்தாராம். அவள் வசித்த ஊர் தான் இந்தக் கதிராமங்கலம். தன்னுடைய வீட்டுக்குக் கூரை வேய வைக்கோல் இல்லை என அப்பெண் கம்பரிடம் சொல்ல அவர் சடையப்ப வள்ளளிடம் இதனைச் சொல்ல,  அவர் நெற்கதிர்களையே அறுத்து அவற்றால் கூறை வேயச் சொல்லி அனுப்பி வைத்தாராம். அதனால் கதிர் வேய் மங்கலம் என்ற பெயர் இந்த ஊருக்கு அமைந்தது. 

முதலில் கேள்விப்பட்ட போது இக்கதை தமக்குப் புதிதாக இருந்தது எனக் குறிப்பிடும் உ.வே.சா அந்த ஊரில் மேலும் சிலரை வினவிய போது அவர்களும் இதே கதையையேக் கூறியதாகக் குறிப்பிடுகின்றார்.

கதிராமங்கலத்தைச் சுற்றிப் பார்த்த பின்னர் தேரழுந்தூருக்கும் உ.வே.சா சென்றார். அங்கே கம்பர் மேடு என ஒரு பகுதி உள்ளதாம். இதனை அவர் நண்பர்கள் சுட்டிக் காட்டி இங்கு தான் கம்பர் வாழ்ந்தார் எனச் சொன்னார்களாம். அவ்வூரில் இருக்கும் பெருமாள் கோயிலில் கம்பரின் சிற்பமும் அவர் மனைவியின் சிற்பமும் இருந்ததையும் அவற்றை தாம் பார்த்ததையும் உ.வே.சா பதிகின்றார்,

கம்பர் தன் ராமாயணத்தில் முதன் முதலில் பாடிய பாடலில் வரும் வயிரவபுரம் என்ற ஊருக்கும் சென்றார் உ.வே.சா. கம்பர் தன் பாடலில் குறிப்பிடும் காளிக் கோயில், தான் வயிரவபுரம் சென்ற போது அங்கே இருந்ததாகவும் குறிப்பிடுகின்றார். அக்கோயிலில் உள்ள காளியை  அங்காளியம்மன் என மக்கள் அழைத்தனர் என்றும் பதிகின்றார்.

ஆக, இந்த வயிரவபுரம் காளிக் கோயில், அங்காளியம்மன், கம்பர் மேடு, தேரழுந்தூர் பெருமாள் கோயில் ஆகியன் இன்று எந்த நிலையில் இருக்கின்றன என்று அறிய வேண்டும் என்ற ஆவல் எழுகின்றது. 

No comments:

Post a Comment