Monday, July 24, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 126

சிலப்பதிகாரம் புதிதாய் பிறந்த குழந்தையைப் போல் உ.வே.சாவின் கைகளில் தவழ்ந்தது. இதற்காக அவர் போட்ட உழைப்பு அதிகமல்லவா? நீண்ட கால உழைப்பின் பலனாய்  உருவாகிய இந்த அச்சு நூல் தமிழர் எல்லோரும் படித்து இன்புறும் வண்ணம் தமிழர் அனைவருக்கும் சிறப்பு சேர்த்த ஒரு நூல் அல்லவா?

நூல் அச்சாகி பிரதிகள் கைக்கு வந்தவுடன் தனக்குப் பொருளுதவி செய்தோருக்கெல்லாம் உ.வே.ச பிரதிகளை அனுப்பி வைத்தார். இராமநாதபுரத்தின் மன்னராக இருந்த மு.பாஸ்கர சேதுபதி அவர்களுக்கும் பிரதியை அனுப்பி வைத்தார். மன்னரிடமிருந்து அதற்கு ஒரு பதில் கடிதம் வந்தது. தனக்குச் சிலப்பதிகாரம் நூல் கிடைத்ததாகவும் இந்த அரிய பணியைச் செய்து முடித்தமைக்காக அவரை சமஸ்தானம் பாராட்டுவதாகவும் ஒரு முறை அவரை சமஸ்தானத்துக்கு அழைத்துச் சிறப்புச் செய்ய தாம் நினைத்திருப்பதாகவும்  அக்கடிதத்தில் இருந்தது.  செயற்கரிய காரியங்கள் செய்யும் போது கிடைக்க வேண்டிய புகழும் சிறப்பும் மரியாதையும் புகழும் தானாகவே வந்து சேரும் என்பதற்கு இது நல்ல உதாரணமல்லவா?

அக்காலச் சூழலில், உ.வே.சாவின் தமிழ் நூல் அச்சுப்பதிப்பாக்க முயற்சிகளை நாம் எளிதாக நினைத்து விடக் கூடாது. வரலாற்றில் நிகழ்ந்த ஆயிரமாயிரம் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று தானே என இந்த நிகழ்வை நாம் எளிதாக  எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் தமிழ் மொழியின் மீட்சியில் உ.வேசா செய்தது ஒரு புரட்சி. இதனை நான் புரட்சி எனக் குறிப்பிடுவதற்குக் காரணம் இருக்கின்றது.   

சங்ககாலம், அதற்குப் பின் பக்திகாலம், அதற்குப் பின் சாத்திரங்கள் உருவான காலம் என்பதைத் தாண்டி, அதாவது  கி.பி.15க்குப் பிறகு தமிழ் மொழியில் புதிய நூல் உருவாக்கம் என்பது மிக குறைந்து போயிருந்தது.  எழுதப்பட்ட நூல்கள் பெரும்பாலும் தலபுராணங்களாகவோ அல்லது மணிப்பிரவாள நடையில் அமைந்த சில ஆக்கங்களாகவோ இருந்தன. இதற்கு அக்காலத்தே நிலவிய அரசியல் சூழலையே நாம் முக்கியக் காரணியாகக் கொள்ளலாம்.  அரசர்களும் சிற்றரசர்களும் பிரபுக்களும் ஜமீந்தார்களும்  பொருள் வளத்திலேயே அதிகம் கவனமும் நாட்டமும் செலுத்தியவர்களாக இருந்தமையும் தமிழ் வளர்க்கும் நோக்கத்துடன் சீரிய முயற்சிகளை மேற்கொள்ளாமையையும் குறிப்பிட்டு சொல்லவேண்டியது அவசியமாகின்றது. 

இந்த சூழலில், பண்டைய காலம் போன்று சங்கம் அமைத்து நூல்கள் இயற்றிய  அறிஞர்களின் எண்ணிக்கையும் குறைந்து போயிருந்தது. இடைபட்ட காலங்களில் ஜமீந்தார்களையும் அரசர்களையும் புகழ்ந்து பாடிய நூல்கள் வந்து கொண்டிருந்தன. அப்படிப்பட்ட சூழலில் பண்டைய தமிழ் நூல்களை அச்சாக்கி அதனை குறிப்பிட்ட ஒரு சிலரே வாசிக்க முடியும் என்ற நிலையை மீறி அச்சு நூல் வடிவில் அதனை வெளியிட உ.வே.சா செய்தது ஒரு புரட்சிதான். இது சங்க இலக்கியங்களும் காப்பியங்களும் புத்துயிர் பெறக் காரணமாக அமைந்தன.  இந்த நிகழ்வு தமிழறிஞர்  பலருக்கு இவ்வகை முயற்சிகளை தாமும் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது என்பதை மறுப்பதற்கில்லை. தமிழ் மொழியின் சிறப்பை புகழ்ந்து பேசி மீண்டும் தமிழ் மொழி ஆக்கங்கள் புத்துணர்ச்சியுடன் உலா வர இந்த நூல்கள்  ஆதாரத்தளமாகின. 

தமிழக அறிஞர்கள் மத்தியில் இந்த நூல்களின் வரவு ஆரோக்கியமான சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.  இதனை உ.வே.சா இப்படிப் பதிகின்றார். 

“ சீவகசிந்தாமணியும் பத்துப் பாட்டும் தமிழ் நாட்டில் உலாவத் தொடங்கிய பிறகு பழந்தமிழ் நூல்களின் பெருமையை உணர்ந்து இன்புறும் வழக்கம் தமிழர்களிடையே உண்டாயிற்று. அவற்றின் பின்பு சிலப்பதிகாரம் வெளிவரவே, பண்டைத் தமிழ் நாட்டின் இயல்பும், தமிழில் இருந்த கலைப் பரப்பின் சிறப்பும் யாவர்க்கும் புலப்படலாயின. ‘கண்டறியாதன கண்டோம்’ என்று புலவர்களும் ஆராய்ச்சியாளர்களும் உவகைக் கடலில் மூழ்கினர்.”

சிலப்பதிகார முன்னுரையிலேயே அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு, மணிமேகலை என்னும் பழைய நூல்களைப் பற்றிய குறிப்புக்களை விரிவாக எழுதியிருந்தார். அதோடு தான் இவற்றையும் இன்னும் பல நூல்களையும் பதிப்பிக்க எண்ணம் கொண்டிருப்பதையும் குறிப்பிட்டு எழுதினார்.

இது தமிழறிஞர்களிடையே ஏகோபித்த ஆர்வத்தை உண்டாக்கியது .உ.வே.சா மேலும் மேலும் பல நூல்களை ஆராய வேண்டும். பதிப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு கடிதங்கள் பல ஊர்களிலிருந்து வந்து குவிந்த வண்ணமிருந்தன.

அடுத்து எந்த நூலை அச்சுப் பதிப்பாகக் கொண்டு வரலாம் என யோசிக்கலானார் உ.வே.சா.

மணிமேகலையா? புறநானூறா ? அவர் மனம் யோசைனையில் ஆழ்ந்தது!

No comments:

Post a Comment