Thursday, July 13, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 124

சிந்தாமணிக்கும் பத்துப்பாட்டு நூல் அச்சுப்பதிப்பாக்கத்திற்கும் ஏட்டுச் சுவடிகள் தேடி அலைந்ததை விடப் பன்மடங்கு உழைப்பினை சிலப்பதிகார உரையைத் தேடும் பணிக்காக உ.வே.சா செலுத்தினார் என்பதைப் பார்க்கின்றோம். சிலப்பதிகாரம் அது எழுதப்பட்ட காலத்து வரலாற்றுச் செய்திகளையும் சொற்பயன்பாடுகளையும் விளக்கக்கூடிய உரையாசிரியரின் துணையோடு அதனை அணுகுவதே சிறப்பாக இருக்கும் என்ற எண்ணமே உ.வே.சா விற்கு இருந்தது என்பதையும் அவர் குறிப்புக்கள் நமக்குக் காட்டுகின்றன. ஏறக்குறையாஇம்பதுக்கும் மேற்பட்ட ஊர்களில் தேடித் திரிந்ததில் கிடைத்த சில நூல்களுடன் சில மூல நூல் பிரதி ஓரிரு உரை என வைத்துக் கொண்டு சிலப்பதிகாரப் பதிப்புப் பணிக்கான வேலைகளைத் தொடங்கினார் உ.வே.சா. அந்தப் பணியில் அவரது கும்பகோணம் கல்லூரி மாணவர்கள் சிலரும் துணைக்கு இணைந்து கொண்டனர். எத்துறையாக இருந்தாலும் சரி.. இப்படி ஆசிரியர்களுக்கு ஆராய்ச்சிப்பணிகளில் உதவுவதன் வழி தானே மாணாக்கர்கள் தாங்களும் நேரடிப் பயிற்சியைப் பெற முடியும். 

மூல செய்யுட்களை பதிப்பிப்பதுடன் கூடுதலாக அச்சு வடிவில் வரும் நூலை வாசிப்போர் சிலப்பதிகாரச் செய்யுட்களை சரியாகப் புரிந்து கொள்ள சில கூடுதல் தகவல்களையும் இணைக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டார் உ.வே.சா. 

  • அரும்பத அகராதி ஒன்றினைத் தொகுத்தார். அதில் செய்யுளில் இடம் பெறுகின்ற கடினமான சொற்களை பட்டியலிட்டு விளக்கக் குறிப்பு எழுதினார். 
  • சிலப்பதிகாரத்தில் தான் அரியதாகக் கருதும் செய்திகளைப் பட்டியலிட்டு அகராதியாக்கி அதற்கு விஷய சூசிகை எனப் பெயரிட்டார். 
  • அதேபோல செய்யுளில் காணப்படும் அரசர்களின் பெயர்களுக்கு ஒரு அகராதி, நாடுகள், ஊர்கள், மலைகள், ஆறுகள், பொய்கைகள், தெய்வங்கள், புலவர்கள் எனப் பிரித்து ஒவ்வொன்றிற்கும் அகராதி அமைத்தார். 
  • பின்னர் சிலப்பதிகாரத்திற்கான அடியார்க்கு நல்லார் உரையில் தாம் வாசித்த நூலின் பெயர்களையும் ஒரு பட்டியலிட்டார். அவற்றிற்கு அகராதியும், தொகையகராதியும், விளங்கா சொற்களுக்கான மேற்கோளகராதியும், அபிதான விளக்கமும் எழுதினார். 
  • இவற்றோடு சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் வரலாற்றினர் சுருக்கமாக எழுதினார். அதனை அடுத்து உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் வரலாற்றினை எழுதினார். இவற்றோடு உரையில் வரும் மேற்கோள் நூல்களைப் பற்றிய குறிப்புக்களையும் இணைத்தார். 

இவற்றைத் தயாரித்தவுடன் நூலுக்கான தனது முகவுரையை எழுதத் தொடங்கினார். இறுதியில் எழுதுவதை விட ஆரம்பத்திலேயே முகவுரையை எழுதி பின் அச்சுக்கு வரும் நேரத்தில் கூடுதல் தகவல்களை இணைத்து விடலாம் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. 

இந்தப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. 

ஆய்வுப்பணிகளும் ஆராய்ச்சிகளும் எழுதி முடிப்பதும் மட்டும் போதுமா ஒரு நூலை அச்சுப்பதிப்பாகக் கொண்டுவருவதற்கு? அதற்குத் தேவையான பணமும் அத்தியாவசியமாயிற்றே. 

இவரோடு தொடர்பில் இருந்த கொழும்பு பொ.குமாரசாமி முதலியார் முன்னர் சிலப்பதிகார அச்சுப்பணிக்கான அனைத்துத் தொகையையும் தாமே ஏற்றுக் கொள்வதாகச் சொல்லியிருந்தார். அதனைக் கருத்தில் கொண்டு குமாரசாமி முதலியாரை உ.வே.சா கடிதம் வழி தொடர்பு கொண்டார். அவரோ தாம் ரூ .300 அனுப்புவதாகச் சொல்லி விட்டார். சிலப்பதிகார நூலை முழுமையாகக் கொண்டு வர இந்தப் பணம் போதாது. ஆயினும் இது உதவும் என்பதால் அதனை பெற்றுக் கொண்டார். 

1891ம் ஆண்டு ஜூன் மாதம் கல்லூரியின் கோடை விடுமுறையின் போது சென்னைக்குப் புறப்பட்டார் உ.வே.சா. கடும் உழைப்பின் இறுதிக்கட்ட வேலைகள் அங்கே தொடங்கின. சிலப்பதிகாரம் அச்சு நூலாக வெளிவரும் அந்தப் பொன்னாளும் நெருங்கியது..!

No comments:

Post a Comment