Wednesday, March 30, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 93

கடந்த பதிவில் அக்காலகட்டத்தில் மிக முக்கிய தமிழறிஞர் ஒருவரது தொடர்பு உ.வெ.சாவிற்கு ஏற்பட்டது என்று கூறி நிறுத்தியிருந்தேன். 

அப்போது உ.வெ.சா அவர்களுக்கு அறிமுகமானவர் யாழ்ப்பாணம் ராவ்பகதூர் சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்கள். தமிழ் உலகில் தமிழ் நூல்கள் அச்சுப்பணி முயற்சிகளில் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலருக்குப் பின்னர் மிக முக்கிய நபராக கருதப்படுபவர் சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள். யாழ்ப்பாணத்திலிருந்து பெயர்ந்து சென்னைக்கு வந்து அங்கிருந்தவாறே பல ஏட்டுச் சுவடி நூல்களைத் தேடி எடுத்து பாட பேதங்களை ஆராய்ந்து அவர் தமிழ் நூற்கள் அச்சுப் பதிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். 

அடிப்படையில் சட்டக் கல்வி முடித்து நீதிபதியாகத் தொழில்புரிந்தவர் யாழ்ப்பாணம் ராவ்பகதூர் சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்கள். தமிழ் நூற்கள் அச்சுப்பதிப்புப் பணியை அவர் 1854 ஆம் ஆண்டில் ஈடுபடத் தொடங்கினார்.  யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர்  அவர்கள் 1849-ஆம் ஆண்டில் அச்சுப் பதிப்புத்துறையில் ஈடுபட்டு வரும் போதே இவரும் அவருடன் இணைந்து தமிழ் நூற்கள் பதிப்பிக்கும் துறையில் செயல்பட்டார். ராவ்பகதூர் சி.வை.தாமோதரம் பிள்ளையின் முயற்சிகளின் பயனாக 
  •  வீரசோழியம்  
  • தொல்காப்பியச் சொல்லதிகாரம்,
  • தொல்காப்பியப் பொருளதிகாரம்,
  • இறையனார் அகப்பொருள்  
  • இலக்கண விளக்கம்,
  • கலித்தொகை
ஆகிய நூல்கள், நேரடியாக  மூலங்களைப் பல ஏட்டுச்சுவடிகளைக் கொண்டு பாடபேதங்களைப் பரிசோதித்து முதன்முதல் அச்சிற் பதிப்பித்து வெளியிடப்பட்டது என்ற சிறப்புக்கு உரியவர் சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்கள். அதுமட்டுமன்றி
 
  • நீதிநெறிவிளக்கம் 
  • தொல்காப்பியச் சொல்லதிகாரம் – சேனாவரையர் உரையுடன் 
  • தணிகைப்புராணம் 
  • இறையனார் அகப்பொருள்,
  • தொல்காப்பியப் பொருளதிகாரம் – நச்சினார்க்கினியர், பேராசியர் உரையுடன் 
  • கலித்தொகை 
  • இலக்கண விளக்கம் 
  • சூளாமணி 
  • தொல்காப்பியம் – சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரையுடன் 
ஆகிய சுவடி நூற்களையும் இவர் அச்சு வடிவில் பதிப்பித்துள்ளார்.

தமிழ் நூற்களைச் சுவடிகளிலிருந்து அச்சுப்பதிவிற்கு மாற்றிக் கொண்டு வந்து பாமரரும் நூற்களை வாசிக்க அடிப்படை வாய்ப்புக்கள் உருவாகக் காரணமாக பலர் இருந்திருக்கின்றனர். இன்றைக்குப் பரவலாக நாம் தமிழ்த்தாத்தா உ.வெ.சா அவர்களை மட்டுமே இது தொடர்பாக நினைவு கூர்கின்றோமே தவிர இப்பணியில் உழைத்த ஏனைய பல தமிழறிஞர்களைப் பற்றி அதிலும் குறிப்பாக உ.வெ.சா. அவர்களுக்கே கூட முன்னுதாரணமாகவும் முன்னோடிகளாகவும் இருந்தோர்களைப் பற்றியெல்லாம் அறிந்திராத தமிழ்ச்சமூகமாக நாம் இருப்பது தான் இன்றைய நிலை.

தமிழ் நூற்கள் இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்வரை விரிவாக ஓலச்சுவடிகளில் புழக்கத்தில் இருந்தன என்பதை அறியாத இளம் தலைமுறையினருக்குச் சொல்லிக் கொடுத்து கற்பிக்க வேண்டிய கல்லூரி ஆசிரியர்களுக்கும் கூட இவ்வகை விசயங்கள் அறியாத நிலை இருப்பது ஒரு அவலம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் அச்சுப் பதிப்புத் துறையில் பணியாற்றி மூலச்சுவடி நூலிலிருந்து அச்சுப்பதிப்பாக்கி கொணர்ந்தோரின் பெயர்களை அவர்கள் வெளியிட்ட நூல்களின் பெயர்களோடு இணைத்து பட்டியலாக வெளியிட்டிருக்கின்றேன். இப்பகுதிக்குச் சென்றால் அப்பகுதியைக் காணலாம்.

சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்கள், அச்சமயம் சென்னையிலிருந்து  தொல்காப்பியம், வீரசோழியம் ஆகிய நூல்களை அச்சுப்பதிப்பாக்கி கொண்டுவரும் பணியில் ஈடுபட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து இறையனாரகப்பொருளுரையையும் திருத்தணிகைப்புராணத்தையும் அச்சுப்பதிப்பாக வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.  அது சமயம் திருவாவடுதுறை ஆதீனத்தின் நூலகத்தில் இந்த நூல்களின் ஏட்டுப்பிரதிகள் இருக்கின்றன என்ற விசயம் அவருக்குக் கிடைத்தது. தனது அச்சுப்பணிக்கு உதவ அந்த ஏட்டுச்சுவடிகளைத் தனக்கு அனுப்பி வைக்க கடிதம் மூலமாக  விண்ணப்பம் வைத்தார் சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்கள்.  சுப்பிரமணிய தேசிகர் இந்த விசயத்தை உ.வெ.சா வுக்குத் தெரிவித்து அந்த சுவடி நூற்களைத்தேடி எடுத்து அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். இந்த வகையில் உ.வெ.சாவுக்கும் சி.வை.தாமோதரம் பிள்ளைக்கும் தொடர்பு உருவானது.

உ.வெ.சாவின் கடிதம் கிடைத்தவுடன் பதிl கடிதமாக ஒன்றினை சி.வை.தாமோதரம் பிள்ளை அனுப்பியிருக்கின்றார். 

இறையனாரகப்பொருளும் தணிகைப்புராணமும் அச்சுப்பதிப்புக்களாக வெளிவந்தவுடன் திருவாவடுதுறை மடத்துக்கும் உ.வெ.சாவிற்கு நூற் பிரதிகளை சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்கள் அனுப்பியிருக்கின்றார். ஆயினும் கூடுதலாக அளித்த புராணக் குறிப்புக்கள் அச்சுப்பதிப்பில் வராதது கண்டு உ.வெ.சா மட்டுமன்றி ஆதீனகர்த்தருக்கும் திருப்தி ஏற்படவிலை.

அதற்கு சில தினங்களுக்குப் பிறகு மேலும் ஒரு செய்தி உ.வெ.சாவிற்கு வந்து சேர்ந்தது. அதாவது, சென்னையில் வாசம் செய்து கொண்டிருந்த சி.வை.தாமோதரம் பிள்ளை உ.வெ.சா குடியிருக்கும் கும்பகோணத்திற்கு மாற்றம் செய்து கொண்டு வரப்போகின்றார் என்ற செய்திதான் அது. 

ஏற்கனவே முக்கியமான நூற்களை அச்சுப்பதிப்பில் வெளிக்கொணர்ந்து தமிழறிஞர்கள் சமூகத்தில் புகழோடு இருப்பவர் என்பதோடு தமிழ் நூற்களிலும், அச்சுப்பதிப்புப் பணியிலும் ஈடுபாடு கொண்டவர் சி.வை.தாமோதரம் பிள்ளை என்பதால் உ,வெ.சாவிற்கு அவரது வருகை பற்றிய செய்தி தேன் போல இனித்தது.

தொடரும்..
சுபா

No comments:

Post a Comment