Wednesday, March 16, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 92

சிந்தாமணி ஆராய்ச்சி என்பது தொடர்ந்து கொண்டிருந்தது.  சென்னைக்கு மாற்றலாகிச் சென்ற இராமசாமி முதலியார் அடிக்கடி உ.வெ.சாவிற்குக் கடிதம் போட்டு சிந்தாமணிப் பதிப்பு காரியத்தை அவர் நிரைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருந்தமை அவருக்கு இப்பணியை மேலும் ஈடுபாட்டுடன் தொடர உந்துசக்தியாக இருந்தது. அந்தச் சமயத்தில் கும்பகோணம் கல்லூரியில் தலைவராக இருந்த திரு.கோபால்ராவ் அவர்களுக்கு சென்னையில் பிரசிடன்ஸி கல்லூரியில் வேலை மாற்றம் கிடைக்க,  அவருக்கு மாற்றாக ஸ்டூவர்ட்துரை என்ற ஆங்கிலேயர் அப்பொருப்பை ஏற்றுக் கொண்டார் என்பதையும் காண்கின்றோம்.

சிந்தாமணி வாசிப்பில் உ.வெ.சாவிற்குத் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் மிகப்பல உதவிகளைச் செய்திருக்கின்றார்.  தேசிகர் திருநெல்வேலியிலிருந்து ஏட்டுப் பிரதிகள் சிலவற்றைத் தருவித்துக் கொடுத்து பாட பேதங்களைப் புரிந்து கொள்ள உதவியிருக்கின்றார். சிந்தாமணி பாட பேதங்களை ஆராய தன்னிடம் வீட்டில் வந்து படிக்கும் மாணவர்கள்,  கல்லூரியில் உ.வெ.சாவிடம் படிக்கும் மாணவர்கள் சிலர் கலந்து கொள்வது என  ஆர்வத்துடன் இந்தப் பணி தொடர்ந்திருக்கின்றது. ஒரே சமயத்தில் நான்கைந்து பேராக ஒரு பிரதி சிந்தாமணி சுவடிக்கட்டை வைத்துக் கொண்டு மற்றொன்றோடு ஆராய்ந்திருக்கின்றனர். உ.வெ.சாவோடு இந்தப் பணியில் இந்த மாணவர்கள் சிலரும் இரவு பகலாக ஈடுபட்டனர் என்பதை  அவரது சரித்திரப் பதிவில்  அத்தியாயம் 90ல் காண்கின்றோம்.

இராமசாமிமுதலியார் இவ்வேளையில் தன்னிடமிருந்த பவர்துரை (ஒரு ஆங்கிலேயர்) என்பவர் பதிப்பித்த சிந்தாமணி அச்சுப்பிரதி நூல் ஒன்றை அஞ்சலில் அனுப்பி வைத்தார்.  அதன் பெயர் சிந்தாமணி நாமகளிலம்பகம். அதே போல தியாகராச செட்டியாரும் தன்னிடமிருந்த ஒரு சிந்தாமணிப்பிரதியை திரு.பட்டாபிராம பிள்ளை என்பவர் வழியாக உ.வெ.சாவிற்குக் கொடுத்தனுப்பினார். இந்தப் பிரதியானது மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களால்  முதலில் எழுதப்பெற்ற சுவடிப்பிரதி.

இப்படி வேறு வேறு சிலரால் படியெடுக்கப்பட்ட, எழுதப்பட்ட, அச்சில் வெளியிடப்பட்ட சிந்தாமணியை தாமும் மாணவர்களுமாகப் பாட பேத ஆராய்ச்சியிலும் பொருள் காணும் முயற்சியிலும் இவர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்தப்பணி நடந்து கோண்டிருக்கும் போதே இவருக்கு இன்னொரு பணியும் அமைந்தது. 

தியாகராசச்செட்டியார் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் முக்கியமாணவர்களில் முக்கியமான ஒருவர். அவருக்கு மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களின் அச்சில் வெளியிடப்படாத நூல்களை அச்சுப் பதிப்பாகக் கொண்டு வரவேண்டும் என்ற பேராவல் இருந்து வந்தது. அந்த வகையில் திருக்குடந்தைப்புராணத்தை அச்சில் கொண்டுவரும் பணியைத் தொடக்கி அதற்கு உ.வெ.சாவின் உதவியை நாடினார்.  சென்னையில் இருந்த  சூளை சோமசுந்தர நாயகர் பதிப்பகத்தில் இந்த நூலை அச்சிடுவதாக ஏற்பாடாகி இருந்தது. அச்சகத்தார் சுவடி நூலை  அச்சிடும் பணியைத் தொடங்கிய பின்னர் எழுத்துப்பிழைகளைச் சோதிக்க தியாகராசசெட்டியாருக்குப்  புராண நூலின் அச்சு வடிவப் பிரதியை அனுப்பி வைத்தனர். ஆனால் அச்சமயம்  கண்பார்வை சற்று பாதிக்கப்பட்டிருந்தமையால் உ.வெ.சாவைப் இப்பணியில் தனக்கு உதவுமாறு தியாகராச செட்டியார் கேட்டுக் கொண்டார்.  அச்சுப்படியை சரிபார்த்து திருத்தி சென்னைக்கு அனுப்பும் பணி இந்த வகையில் உ.வெ.சாவிற்கு வந்து சேர்ந்தது. 

திருக்குடந்தைப் புராண அச்சுப்பணியில் ஈடுபட்டிருந்த போது அச்சுத்தாள்களைத் திருத்தும்  முறைய தாம் அறிந்து கொண்டதாக உ.வெ.சா குறிப்பிடுகின்றார். 1883ம் ஆண்டு ஜூன் மாதம் திருக்குடந்தைப் புராணம் ஓலைச் சுவடியிலிருந்து அச்சு வடிவில் புது வடிவம் பெற்றது. அச்சகத்தாரான சோமசுந்தர நாயகரே இந்தப்பதிப்பிற்குச் சிறப்புப் பாயிரமும் அளித்திருக்கின்றார். உ.வெ.சாவும், தியாகராச செட்டியாரும் சேர்ந்து பதிப்பித்த நூல் என்ற செய்தியுடன் இந்த நூல் வெளிவந்தது. 

இது உ.வெ.சா நேரடியாக ஈடுபட்ட இரண்டாவது அச்சுப் பணி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சமயத்தில் உ.வெ.சாவிற்கு மிக முக்கிய அன்பர் ஒருவருடைய தொடர்பு ஏற்படும் சுழல் நிகழ்ந்தது.

No comments:

Post a Comment