Wednesday, March 2, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 90

சீவக சிந்தாமணியைத் தாம் பெற்ற கதையை இராமசாமி முதலியார் உ.வெ.சாவிற்கு விவரிக்க ஆரம்பித்தார்.  

தமிழ் நூல்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர் பல நூல்களை வாசித்திருக்கின்றார். அந்தாதி, புராணம், பிள்ளைத்தமிழ் என்ற நூல்களை விடவும் வேறு வகை நூல்கள் இருக்குமா என்ற ஆர்வம் அவருக்கு. சிந்தாமணி பற்றி அவர் கல்லூரியில் படித்த காலத்தில் தான் அறிந்திருக்கின்றார்.  கல்லூரியில்  சிந்தாமணியின் முதல் பகுதி மாத்திரம் பாடமாக இருந்திருக்கின்றது. அந்த முதற்பகுதியை ஒரு ஆங்கிலேயர் நூலாக அச்சிட்டு பாடமாக வைத்திருந்திருக்கின்றார். அதில் தமிழ் மொழியை விட ஆங்கிலமே அதிகமாக இருந்திருக்கின்றது. ஆக, தமிழில் சிந்தாமணியை முழுதும் வாசிக்க வேண்டும் என்ற ஆவல் இராமசாமி முதலியாருக்குத் தனது கல்லூரி காலத்தில் தோன்றியிருக்கின்றது. 

இங்கு இன்னொரு விடயமும் நம் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கின்றது. சிந்தாமணியின் முதல் பகுதி ஒரு ஆங்கிலேயரால் அச்சிடப்பட்டு ஆங்கிலத்திலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்ற குறிப்பை காண்கின்றோம். ஆயினும் யார் அந்த ஆங்கிலேயர் என்ற தகவல் கிடைக்கவில்லை. தமிழில் ஆர்வம் கொண்ட ஐரோப்பிய மதபோதகர்கள் பல தமிழ்  நூல்களைக் கற்று அவற்றை மொழி மாற்றம் செய்தும் தங்கள் மொழிகளில் அவை பற்றியும் எழுதிய காலம் அது. ஆக ஐரோப்பிய கத்தோலிக்க அல்லது லூத்தரேனிய மதபோதகர்கள் யாராகினும் இப்பனியைச் செய்திருப்பரோ என்ற எண்ணம் இப்பகுதியை வாசிக்கும் போது எழாமல் இல்லை.

ஆக, இந்த பின்புலத்தோடு இராமசாமி முதலியாரின் நூல் தேடல் தொடங்கியிருக்கின்றது.  பல இடங்களுக்குத் தான் பணி நிமித்தம் செல்லும் போதெல்லாம் சிந்தாமணி முழு நூலை தேடியிருக்கின்றார்.  ஒரு முறை ஒரு வழக்கை விசாரிக்கையில் ஒரு கவிராயர் குடும்பத்தினரின் வழக்கு வந்திருக்கின்றது. கவிராயர் என்றால் வீட்டில் நூல்கள் இருக்குமே என எண்ணி அவரை அது பற்றி கேட்க, அவரும் இவரது பதவியை மனதில் கொண்டு,  தனது வீட்டில் இருந்த சிந்தாமணியின் ஒரு படியை தர சம்மதித்திருக்கின்றார். அந்த நூலுக்கு 35 ரூபாய் அப்போது அவர் அதனை பெற்றிருக்கின்றார். அன்றைய நிலையில் யோசித்துப் பார்ப்போம். உ.வெ.சாவின் மாத சம்பளமே 50 ரூபாய்தான். ஆனால் இராமசாமி முதலியாரோ சிந்தாமணியின் ஒரு படியை 35 ரூபாய்க்கு வாங்கியிருக்கின்றார் என்ரால் அந்த நூலின் பால் அவருக்கு இருந்த ஆர்வம் நமக்கு நன்கு புலப்படுகின்றது.

இப்படி இந்த நூலைத் தான் பெற்ற கதையைச் சொல்லி,  இந்த நூலை வாசித்து தனக்கு பாடம் நடத்தும் படி உ.வெ.சா. விடம் கூறுகின்றார்  இராமசாமி முதலியார். அப்படிச் சொல்லும் போது சிந்தாமணியின் காவியத்தன்மையை புகழ்ந்து இப்படிக் கூறுகின்றார்.

“புஸ்தகம் மிகச் சிறந்த புஸ்தகம். கம்ப ராமாயணத்தின் காவ்ய கதிக்கெல்லாம் இந்தக் காவியமே வழிகாட்டி இதைப் படித்துப் பொருள் செய்து கொண்டு பாடம் சொல்வீர்களானால் உங்களுக்கும் நல்லது; எனக்கும் இன்பம் உண்டாகும்.”

அவரிடம் விடைபெற்றுக் கொண்டு அந்தப்படியை எடுத்துக் கொண்டு வீடு திரும்புகின்றார் உ.வெ.சா.  அந்த நூல் சிந்தாமணியின் நச்சினார்க்கினியர் உரையும் சேர்ந்த ஒரு நூல் . வாசித்த போது சீவகன் என்ற ஒருவனைப்பற்றிய கதை எனப்புரிந்து கொள்கின்றார். ஆனால் அதற்குமேல் நூல் அவருக்குப் புரியவில்லை. இந்த நிலையைக் கண்டு அவர் திகைத்துப் போகின்றார்.  அப்போதைய தன் மன நிலையை இப்படிக்  குறிப்பிடுகின்றார்.

"தமிழ் நூற்பரப்பை ஒருவாறு அறிந்துவிட்டதாக ஒரு நினைப்பு. அதற்குமுன் எனக்கு இருந்தது. நான் கண்ட நூற் பரப்புக்குப் புறம்பேயிருந்த
சிந்தாமணி எனக்கு முதலில் பணிவை அறிவுறுத்தியது."

சிந்தாமணியின் முதற்பாடலைப் பார்க்கின்றார். இது தான் இதுவரை தான் வாசித்த எல்லா நூல்களிலிமிருந்து மாறுபட்டதாக இருக்கின்றது. வினாயக வணக்கமோ, சடகோபர் காப்போ இல்லை.  முதலில் பொதுவான கடவுள் வாழ்த்தோ என நினைத்து வாசிக்கும் அவருக்கு அது மாறுபட்ட ஒரு பொருளைச் சொல்கின்றது என்ற சிந்தனை உதிக்க ஆரம்பிக்கின்றது. அந்த முதற்பாடல்,

“மூவா முதலா வுலகம்மொரு மூன்று மேத்தத்
தாவாத வின்பந்தலையாயது தன்னி னெய்தி
ஓவாது நின்ற குணத்தொண்ணிதிச் செல்வனென்ப
தேவாதி தேவ னவன்சேவடி சேர்து மன்றே”

செய்யுளின் உட்பொருள் புரியாத நிலையில் உரையை வாசிக்கத்தொடங்குகின்றார். ஆயினும் தெளிவு உண்டாகவில்லை. 

அவ்வார இறுதியில் திருவாவடுதுறை சென்று ஆதீன கர்த்தர் தேசிகரைச் சந்தித்து நடந்த விடயங்களைத் தெரிவிக்கின்றார்.  தேசிகரும் மகிழ்ந்து  பிள்ளையவர்கள் கைப்பட எழுதிவைத்த சிந்தாமணி படி ஒன்று நூலகத்தில் இருக்கின்றது என்று சொல்லி அதனைத் தரிவித்துக் கொடுக்கின்றார்.

இந்த நூலை எடுத்துக் கொண்டு வீடு திரும்பி தன்னிடம் இருக்கும் 2 நூல்களையும் வாசித்துப் பார்க்கின்றார் உ.வெ.சா.

மறு வாரம் இராமசாமி முதலியார் இல்லம் சென்று பாடம் தொடங்குகின்றார். தெளிவில்லாத நிலையே ஏற்படுகின்றது. இராமசாமி  முதலியார்  தான் அறிந்த விடயங்களையும் பகிர்ந்து கொள்கின்றார்.  இருவரும் தினறித்தினறியே இந்த முயற்சியைத் தொடர்கின்றனர். 

இந்த நிலையில் சிந்தாமணி சமண நூல் என்பதால் சமணர்களிடம் இதற்கு விளக்கம் கேட்டால் என்ன என்ற எண்ணம் ஏற்பட அருகாமையில் சமண சமயத்தவர்கள் யாரேனும் இருக்கின்றார்களா எனத் தேட ஆரம்பிக்க்ன்றார் உ.வெ.சா. 

பலரை விசாரிக்க நல்ல பலன் கிட்டுகின்றது. அருகாமையிலேயே சமணர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு உ.வெ.சாவை அழைத்துச் செல்கின்றார் ராமலிங்க பண்டாரம் என்னும் ஒருவர்.  

அவர் பெயர் சந்திரநாத செட்டியார். 

அவர்கள் வீட்டிற்குள் செல்லும் போது வாசலில் மாக்கோலம் இடப்பட்டு மாவிலைத்தோரணங்களெல்லாம் வீட்டில் கட்டப்பட்டு விழாக்கோலம் கொண்டது போல காட்சியளிக்கின்றது. இன்று ஏதும் விஷேஷமா என்று வினவுகின்றார் உ.வெ.சா. அதற்கு சந்திரநாத செட்டியார், இன்று சிந்தாமணி பூர்த்தியாயிற்று. அதனால் தான் இன்று சிறப்பாகக் கொண்டாடுவதாகச் சொல்ல உ.வெசாவிற்கு ஆச்சரியம் மேலிடுகின்றது. அதனை இப்படிக் குறிப்பிடுகின்றார்.

"எனக்கு மிக்க ஆச்சரியமுண்டாயிற்று. ‘நாம் சிந்தாமணியைப் பற்றித்தான் கேட்க வந்திருக்கிறோம். சிந்தாமணி பூர்த்தியாயிற்றென்று இவர் சொல்லுகிறார்; சிந்தாமணியைப் பாராயணம் செய்வது இவர்கள் சம்பிரதாயம் போலிருக்கிறது’ என்றெண்ணி, “சிந்தாமணியைப் படித்து வந்தீர்களா?” என்று கேட்டேன்.

“ஆமாம். நான் சிரவணம் செய்து வந்தேன். இவர்கள் பாடம் செய்து வந்தார்கள்” என்று சொல்லி எதிரே அமர்ந்திருந்த ஒருவரைச் சுட்டிக் காட்டி, “திண்டிவனம் தாலூகாவிலுள்ள வீடூர் என்பது இவர்கள் கிராமம். தமிழிலும், வட மொழியிலும், பிராகிருதத்திலும் உள்ள ஜைன கிரந்தங்களிலும் உரைகளிலும் மிகுதியான பழக்கமுள்ளவர்கள். இவர்களைப் போன்றவர்கள் யாருமில்லை. இவர்கள் திரு நாமம் அப்பாசாமி நயினா ரென்பது” என்று தெரிவித்தார். எனக்காகவே அவர் அங்கே வந்திருப்பதாகத் தோற்றியது. ‘நாம் எந்த விஷயத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறோமோ அந்த விஷயத்தில் தேர்ச்சியுள்ளவர்களை எதிர்பாராமலே பார்க்கிறோம். அதே
விஷய சம்பந்தமான உத்ஸவம் வேறு நடக்கிறது. இது தெய்வச் செயலே’ என்று எண்ணிப் பூரிப்பை அடைந்தேன்.

“எவ்வளவு காலமாக இவர்கள் இங்கே இருக்கிறார்கள்?” என்று கேட்டேன்.

“ஆறு மாதமாக இந்தப் பாடம் நடந்து வருகிறது”

‘இந்த ஆறு மாதங்களை நாம் வீண்போக்கி விட்டோமே!’ என்ற வருத்தம் எனக்கு உண்டாயிற்று. "

ஒரு நூலை வாசித்தோம் முடித்தோம் என்றில்லாமல் அதனை மேலும் மேலும் ஆராய்ந்து பொருளுணர்ந்து கொள்ள வேண்டும் என இராமசாமி முதலியாரும், உவெ.சாவும் மேற்கொண்ட முயற்சிகள் நமக்கு நல்ல உதாரணங்களாக அமைகின்றன. இப்படி ஆழமாக வாசிக்கும் ஆர்வம் நமக்கு இல்லையென்றால் அந்த ஆர்வத்தை  உருவாக்கிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டியது தமிழ் மாணவர்களாகிய நாம் எல்லோருடைய கடமையுமே ஆகும்!

No comments:

Post a Comment