Saturday, September 15, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 20


பதிவு 20

சில குறிப்பிட்ட நூல்களை நாம் பல காலமாகத் தேடிக் கொண்டிருப்போம்.திடீரென்று யார் வழியாகவோ அந்த நூல் நமக்குக் கிடைக்கும். அது நமக்கு அளவில்லா மகிழ்ச்சியைத் தரும் ஒரு நிகழ்வாக அமைந்துவிடும். அப்படித்தானே தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் சேகரத்திற்கும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் வரலாறு நூல் கிடைத்தது.

நமக்குப் பிடித்த சில விஷயங்களை நாம் மிகக் கடினமான விதிகளையும் மேற்கொண்டு அதனை அடைய முயற்சிக்கின்றோம். பலன் சாதகமாக அமைந்தால்  முயற்சியும் அதற்கான நமது உழைப்பும் அர்த்தமுள்ளதாகிப் போகின்றது. முதலில் ஒரு குறிக்கோள் மனதில் இருக்க வேண்டும். குறிக்கோள் இல்லாத வாழ்க்கையின் பலன் தான் யாது? அடைய வேண்டிய விஷயம் அதனை அடையும் வழி ஆகியவை தெளிவோடு இருக்கும் போது தான் நாம் அமைத்துக் கொள்ளும் பாதையும் வெற்றியை நோக்கி நம்மை இட்டுச் செல்லும்.

உ.வே.சாவின் கனவும் குறிக்கோளும் தமிழ்க் கல்வி என்ற ஒன்றே. அதனை அடைய, தனது ஐயங்களுக்குத் தெளிவைப் பெற அவர் வெவ்வேறு நூல்களைத் தேடித்தேடி அவற்றைப் பெற்று, அன்னூல்களைக் கற்றோரிடம் பாடம் கேட்டு அதில் கிடைக்கும் தெளிவில் மனம் அமைதியுற்று பின்னர் மீண்டும் எழும் ஐயங்களுக்காகப் புதிய நூல்களைத் தேடுவதும் தகுந்த ஆசிரியரைத் தேடுவதும் என்ற நிலையிலேயே அவரது நிலை சென்று கொண்டிருந்தது.

விருத்தாசல ரெட்டியாரிடம் இருந்த  ஒரு திருக்குறள் நூலை உ.வே.சா படிக்க ஆரம்பித்திருந்தார். தன்னிடமும் ஒரு திருக்குறள் நூல் இருந்தால் செல்லும் இடமெல்லாம் எடுத்துச் சென்று வாசிக்க உதவியாக இருக்குமே என்ற எண்ணம் மனதில் தோன்றி அது நாளுக்கு நாள் வளர தனக்கும் ஒரு திருக்குறள் நூல் வேண்டும் என்ற எண்ணம் மனதில் வலிமை பெற ஆரம்பித்து விட்டது. ஒரு நூலை வாங்குவதற்கு அதிலும் அச்சுப் பதிப்பு நூலை வாங்குவதற்கான பொருளாதார வசதி உ.வே.சாவிற்கு இல்லை. முன்னர் குன்னத்தில் இருந்த பொழுதில் குன்னத்தில் சந்தித்த பெரும்புலியூர் பள்ளிக்கூடத்தில் தலைமையாசிரியராக இருந்த ராயர் ஒருவர்  தன்னிடம் ஒரு திருக்குறள் அச்சுப் பிரதி இருப்பதாகவும் தன்னிடம் வந்து அதனை உ.வே.சா பெற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆக அந்த ஞாபகம் வந்ததும் அந்த நல்ல மனிதரைத் தேடிச் சென்று அவர் தருவதாகச் சொல்லியிருந்த நூலை வாங்கி வர வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதித்தது உ.வே.சாவிற்கு.

அவர் இருந்தது பெரும்புலியூர் என்னும் ஒரு ஊரில். இந்த ஊர் எவ்வளவு தூரம் என்று தெரியவில்லை. ஆனாலும் நெடு தூரம் நடந்து சென்றால் தான் அந்த  ஊரை அடைய வேண்டியிருக்கும் என்றும் ஒரே நாலில் சென்று பெற்று வந்ததாக வாசிக்கும் போது ஏறக்குறைய 15 கிமீ தூரத்திற்குள் இருக்கலாம் என்றே தோன்றுகின்றது.

விருத்தாசல ரெட்டியாரும் ஒரு வித்தியாசமான மனிதர். அவருக்கு நூல்கள்.. நூல்கள்.. நூல்கள்.. தான் வாழ்க்கையே. நூல்களை வாசிப்பதும் அதனை பாடம் சொல்வதும் தமிழ்பிரியர்களோடு சம்பாஷிப்பதுமே அவருக்குத் தொழில். உ.வே.சாவின் தமிழ்க்காதல் விருத்தாசல ரெட்டியாருக்கு இவர் பால் நிறைந்த அன்பினை ஏற்படுத்தியிருந்தது.

ஆக ஒரு நாள் உ.வே.சா தான் பெரும்புலியூர் சென்று அங்கிருந்து திருக்குறள் நூலை பெற்று வரச் செல்லப்போவதாகத் தெரிவித்ததும் இவரும் சேர்ந்து பேசிக் கொண்டே பெரும்புலியூர் சென்று வாக்களித்திருந்த அந்த நல்ல மனிதர் ராயரிடமிருந்து திருக்குறள் நூலைப் பெற்றுக் கொண்டு இருவரும் மீண்டும் திரும்பினர்.

இதே போல வேறொரு தருணத்திலும் உ.வே.சா ஒரு நூலைப் பெறுவதற்காக ஒரிடத்திற்கு பல மணி நேரங்கள் நடந்து சென்ற கதையினை என் சரித்திரம் நூலில் அடுத்தடுத்த அத்தியாயங்களில் காண முடிகின்றது.


தொடரும்..
சுபா

No comments:

Post a Comment