Sunday, October 22, 2017

மகளிர் மட்டும்

இன்று மகளிர் மட்டும் திரைப்படம் பார்த்தேன். கதை நன்றாக இருந்தது. 3 நாட்கள் வெளியே சென்று வந்தால் எல்லாம் மாறிவிடும் என்பது கற்பனை தான். ஆனாலும் 3 நாளில் இதுவரை தான் இயந்திரமாக தன்னை மறந்து தன் குடும்பம், பொருளாதாரம் என்ற இரண்டினை மட்டுமே சிந்திக்கும் தமிழ்ப் பெண்களின் சிந்தனையில் மாற்றம்தர இத்தகைய ஒரு கதையை இயக்குனர் தேர்ந்தெடுத்தது சிறப்பு.
பொதுவாகவே ஆணோ பெண்ணோ அவ்வப்போது பயணம் செல்ல வேண்டும். அப்போதுதான் இயந்திரம் போல குறிப்பிட்ட சில வேலைகளியே மூழ்கிக் கிடக்கும் நமக்கு ஒரு மாற்று அனுபவம் ஏற்படும்.
இந்தப் படத்தில் பானுப்பிரியா கேரக்டர் போல தமிழகத்தில் நான் சில பெண்களைச் சந்தித்திருக்கின்றேன். உடுத்த சேலையும், போட்டுக்கொள்ள நகையும் சென்று வர காரும் இருக்கும். ஆனால் தான் எதற்காக வாழ்கின்றோம் என்பதையே மறந்து கணவன் பிள்ளைகள் தேவையை மட்டும் இந்த வகைப் பெண்கள் செய்து கொண்டிருப்பர். வீடு, குறிப்பாக சமயலறையிலே அவர்கள் வாழ்வு. இதனை மீறி வெளியே விடுமுறை சென்று ஊர் சுற்றிப்பார்த்து வருகின்றோம் என வாயைத் திறந்து சொல்லி விட முடியாது. அதன் பின்னர் வீடு நரகமாகிவிடும்.
ஆனால் கணவனுக்கோ வெளி உலக தொடர்பு.. பறந்த அனுபவங்கள்.. பல செய்திகள்.. தனது
திறமையை வளர்த்துக் கொள்ள நிறைய வாய்ப்புகள் என அமைந்துவிடும். அதற்கு அடித்தளமாக மனைவி இருக்க வேண்டும்.
தனக்கும் ஒரு உயிர் இருக்கின்றது. அந்த உயிருக்கும் ஓர் ஆசை இருக்கின்றது. தன் சிந்தனைகளையும் விரிவாக்கிக் கொள்ள வேண்டும் என நினைத்தாலும் அதனை இவ்வகை கணவன்மார் அனுமதிப்பதில்லை. வெளியுலகம் தனக்கு. பணம் சம்பாதித்து தருகிறேன். உனக்கு என்ன வேண்டுமோ தருகிறேன். பிறகு எதற்கு வெளியே போக வேண்டும்? என்பதுதான் இத்தகைய கணவன்மார்களின் எண்ணம்.
இத்தகையோர் தனது மனைவிகளும் ஒரு உயிர் தான் என்பதை மறந்து விடுகின்ரனர்.
உலகைச் சுற்றி ப்பார்த்தால் காக்கை குருவி, விலங்கினங்கள் கூட சுதந்திரமாக நடமாடுகின்றன. ஆனால் பல தமிழ்ப்பெண்கள் வீட்டிற்குள்ளேயே ஒரு வகை சிறைவாசம் தான் வாழ்கின்றனர். ஏழை குடும்பங்களில் இந்த நிலை இல்லை. ஆணும் பெண்ணும் உழைக்கின்றனர். குறிப்பாக சற்று வசதிபடைத்த நடுத்தரவர்க்கத்திற்கும் மேலே இருக்கும் குடும்பங்களில் இன்றும் இத்தகைய நிலை தொடர்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.
இத்தகைய பெண்களின் நிலை பாவம். சிறிய வட்டத்திற்குள்ளேயே அவர்கள் வாழ்க்கை அடங்கி விடுகின்றது.
சுபா

No comments:

Post a Comment