Sunday, October 8, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 135



சிலப்பதிகாரம், புறநானூறு ஆகிய நூல்களைப் பதிப்பிக்க ஆய்வில் ஈடுபட்டிருந்த வேளையில் புறப்பொருள் வெண்பாமாலை தொடர்பான சுவடிகளும் உ.வே.சாவிற்குக் கிடைத்திருந்தன. ஆக, தன்னிடம் இருந்த சுவடி நூல்களின் பாட பேதங்களை அவர் ஆராயத்தொடங்கினார். அந்த நூலின் இலக்கண விளக்கங்களை வாசித்து ஆராயத் தொடங்கினார். அந்த நூலின் உரைகளை ஆராயும் போது யார் எழுதிய உரை என்பது முதலில்  தெரியாமல் இருந்து பின்னர் அதன் உரையை எழுதியவர் இளம்பூரனார் என்பதையும் அறிந்து கொண்டார். தயாரிப்பு வேலைகள் முடிவுற்றதும் அவற்றை எடுத்துக் கொண்டு சென்னைக்குப் புறப்பட்டுச் சென்று அச்சகத்தில் கொடுத்துவிட்டு கும்பகோணம் வந்து சேர்ந்தார். ஏனைய முந்தைய நூல்களுக்கு இருந்த சிரமம் போன்று இந்த நூலுக்கு இல்ல. ஏற்கனவே ஆராய்ச்சிக்குத் தேவையான பல நூல்கள் கைவசம் இருந்தமையாலும், பதிப்புத் துறையில் ஓரளவு அனுபவம் கிடைத்திருந்தமையாலும் புறப்பொருள்வெண்பாமாலை நூல் அச்சுப் பதிப்பாக்கம் விரைவாக நடைபெற்றது. 

திருவாவடுதுறை ஆதீன திருமடத்தில் பல சுவடிகள் இருந்தன. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை தொடங்கி, பல தம்பிரான்களும் புலவர்களும் தேடிச்சேகரித்தவை, கைப்பட எழுதியவை என இங்குப் பல சுவடி நூல்கள் இருந்தன. ஆனால் அக்காலத்தில் மடத்தில் ஒரு நூலகம் என்ற அமைப்பு இல்லாமல் இருந்தது. அன்று ஆதீனகர்த்தராக இருந்த அம்பலவாண தேசிகர் இதனை மனதில் கொண்டு ஒரு நூலகத்தைத் திருவாவடுதுறை ஆதீன திருமடத்தில் அமைக்க வேண்டும் என விரும்பினார். அந்த நூலகத்தில் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலுமான நூல்கள் இருக்க வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. ஆக, அதனை மனதில் கொண்டு இன்று நாம் திருமடத்தில் காணும் சரசுவதி மகால் கட்டிடத்தை அவர் கட்டுவித்தார். 

நூலகம் உருவாகிய பின்னர் அதில் வைப்பதற்காக நூல்கள் தேவைப்பட்டன. இருக்கின்ற சுவடிகள் மட்டுமன்றி பல நூல்கள் இருந்தால் நூலகம் சிறப்புப் பெறும் என்பது தேசிகரின் விருப்பமாக இருந்தது. ஆக அந்த நூலகத்திற்குத் தேவையான நூல்களை வாங்க மடத்தைச் சேர்ந்த சிலரையும் உ.வே.சாவையும் தேசிகர் சென்னைக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் சென்னைக்குச் சென்று புத்தகக் கடைகளில் நூல்களைத்தேடி வாங்கி வரவேண்டுமென கட்டளை இருந்தது. அதுமட்டுமன்றி இராமநாதபுரம் ராஜா பாஸ்கர சேதுபதி அவர்களையும் தொடர்பு கொள்ளச் சொல்லி இந்த நூலகத்துக்குப் பொருளுதவி செய்யக் கேட்க வேண்டுமென்றும் எண்ணம் இருந்தது. 

சென்னைக்கு நூல்கள் வாங்க வந்த உ.வே.சா அங்குச் சென்னையில் தங்கியிருந்த மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களையும் பார்த்து திருமடத்தின் நூலகச் செயல்பாடுகள் குறித்துத் தெரிவித்தார். மன்னரும் மனம் மகிழ்ந்து அந்த நூலகத்திற்கு வருகை தருவதாகவும் உதவி செய்வதாகவும் ஒப்புக் கொண்டார். இந்த நல்ல செய்தியை உடனே உ.வே.சா அவர்கள் தேசிகருக்குத் தெரிவித்தார். பின்னர் சென்னையில் அவர்கள் 5000 ரூபாய் பெறுமானமுள்ள நூல்களை வாங்கினர். வாங்கிய நூல்களையெல்லாம் ரயில்வண்டியில் ஏற்றி மடத்திற்கு அனுப்பி வைத்தனர். அன்றைய நாளில் ரூ.5000 என்பது பெரிய தொகை தான். ஆக நூலகத்திற்கு எவ்வளவு நூல்களை வாங்கியிருப்பர் என்பதை நம்மால் ஊகித்துப் பார்க்கலாம், அல்லவா?

2013ம் ஆண்டு நான் திருவாவடுதுறை மடம் சென்றிருந்த போது சரசுவதி மகாலில் தேடி எடுத்த மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் நூல்களை மின்னாக்கம் செய்தேன். அதுமட்டுமன்றி அந்த மடத்தின் பெரும்புலவர்கள் கைப்பட எழுதிய ஓலைச்சுவடி கட்டுகளை நேரில் பார்வையிட்டதோடு தமிழ் மரபு அறக்கட்டளை வரலாற்றுப் பதிவு ஒன்றினையும் பதிவாக்கி வெளியீடு செய்திருந்தேன். 

சரசுவதி மகால் நூலகத்தில் உள்ள நூல்கள் தமிழ் கூறு நல்லுலகத்தின் பொக்கிஷங்கள் எனலாம். பலரது அரியத் தேடலின் பலனாகச் சேர்க்கப்பட்ட சுவடிகள் அங்குப் பாதுகாக்கப்படுகின்றன. அவை மின்னாக்கம் செய்யப்பட வேண்டும் என்ற எனது கருத்தினை அங்கு நான் சென்றிருந்த போது குறிப்பிட்டேன். மடத்தின் தம்பிரான்களும் புலவர்களும் இப்பணியில் ஆர்வத்துடன் இருப்பதை அவர்களது ஆர்வம் எனக்கு உணர்த்தியது. 






தொடரும்..
சுபா

No comments:

Post a Comment