Sunday, June 25, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 122

கதை கட்டுவது என்பதைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். நம்மைப் பற்றி ஒரு கதையை உருவாக்கி அதனை நாம் யார் என்றே அறியாமல் நம்மிடமே ஒருவர் சொல்வதென்றால் எப்படியிருக்கும் என யோசித்துப் பாருங்கள். இப்படித்தான் ஒரு சம்பவம் உ.வே.சா வாழ்விலும் நடந்தது.

முன்னர் கடையலூர் சென்று ஓலைச்சுவடிகள் தேடியபோது ஒருவரது  இல்லத்தில் ஓலைச்சுவடிகள் உள்ளன என யாரோ சொல்ல அங்கு சென்று பார்த்தபோது ஏடுகளெல்லாம்  மச்சில்  இருந்த ஒரு பெட்டிக்குள் இருந்தன. அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்த போது பலகாலமாக கவனிக்காமல் விடப்பட்ட அப்பெட்டிக்குள் இருந்த ஒலைச்சுவடிகளெல்லாம் எலிப்புழுக்கைகள் நிறைந்து சில்லு சில்லாகிக் கிடந்தன. எலிகள் அவற்றைக் கடித்துத் தின்று ஜீரணித்துப் போட்டிருந்தன என்பதை அக்காட்சி காட்டியது. அதில் கொஞ்சம் மிஞ்சிய ஒரு சுவடியாகக் கிடைத்த சிந்தாமணியை மட்டும் எடுத்துக் கொண்டார். உ.வே.சா. 

இப்போது,  ஏனைய ஊர்களில் தேடி பின்னர் விக்கிரமசிங்கபுரம் வந்திருந்தார் உ.வே.சா. சைவ சித்தாந்தந்தின் தலையாய நூலான சிவஞானபோதத்திற்கு  உரை எழுதிய திருவாவடுதுறை  ஸ்ரீ சிவஞான முனிவர் பிறந்த வீடு அது. அங்கே ஏதேனும் நூல்கள் கிடைக்கலாம் என எண்ணி அங்கிருந்த ஒருவரை வினவினார்,. அவர் அப்பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்து கொண்டிருப்பவர். கடையநல்லூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

இங்கே தமிழ்ச்சுவடிகள் இருப்பதாகச் சொன்னார்கள்.  பழைய ஏட்டுச் சுவடிகள் இருக்கின்றனவா? என உ.வே.சா கேட்க, அப்போது அவர்களுக்கிடையே நிகழ்ந்த உரையாடலைப் பார்ப்போம்.

"
“மிகுதியாக இருந்தன. எல்லாவற்றையும் ஒருவர் கொண்டு போய் விட்டார்” என்று அவர் சொன்னார்.

“யார் அவர்?” என்று மிக்க ஆவலோடு கேட்டேன்.

“கும்பகோணம் சாமிநாதையர் கொண்டு போய் விட்டார்” என்றார் அவர். எனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டேன்.

“அவர் என்ன சுவடிகளைக் கொண்டு போனார்?”

“எவ்வளவோ சுவடிகள் இருந்தன. எல்லாவற்றையும் அவர் கொண்டு போய் விட்டார்.”

அவருக்கு என்னை இன்னாரென்று தெரியாது. அங்கே என்னுடனிருந்த அன்பர்கள் ஒன்றும் விளங்காமல் விழித்தார்கள். இந்த அபவாதம் இன்னும் எவ்வளவு தூரம் விரிவடையும் என்பதைத் தெரிந்து கொள்ளுவதற்காகவே நான் மேலும் மேலும் பல கேள்விகளைக் கேட்டேன். அவர் தம் வீட்டில் பல அருமையான ஏடுகள் இருந்தனவென்றும் அவற்றை நான் கொண்டு போய்விட்டதாகவும் உறுதியாகச் சொன்னார். என்னால் சிரிப்பை அடக்க
முடியவில்லை. 
"

தன் முன்னே இருப்பபர் தாம் தாம் குறை கூறிக்கொண்டிருக்கும் உ.வே.சா   என அறியாமல் அந்த மனிதர் பேசி முடித்தார்.

"
 “நீங்கள் அப்போது அங்கே இருந்தீர்களா?” என்று அந்த உபாத்தியாயரைக் கேட்டேன். சோர்ந்த முகத்தோடு அவர், “நான் தெரியாமல் சொல்லி விட்டேன். நான் அப்பொழுது அங்கே இல்லை. விடுமுறைக்கு ஊர் போயிருந்தபோது என் வீட்டில் இருந்தவர்கள் அப்படிச் சொன்னார்கள்” என்றார். “நல்ல வேளை. இந்த அபவாதத்தை என்னிடம் சொன்னதால் உண்மை எல்லோருக்கும் விளங்கியது. வேறு யாரிடமாவது சொல்லியிருந்தால் நீங்கள் சொல்லுவதை உண்மையாகவே எண்ணியிருப்பார்கள். நான் பிழைத்தேன்” என்றேன்.
"

இப்படி சுவடி தேடல் பணி என்று  மட்டுமல்ல.. தமிழ்ப்பணியிலும் சமூகப்பணியிலும் ஈடுபட்டிருப்போர் தம்  உன்னதமான நோக்கத்தை அறிந்து கொள்ளாது அவதூறு பரப்புபவர்களும், குற்றம் குறை சொல்லி உளறி வைப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

விக்கிரமசிங்கபுரத்தில் சுவடிகள் ஏதும் கிடைக்காத நிலையில் அங்கிருந்து ஒரு வண்டி வைத்துக் கொண்டு புறப்பட்டு ஊற்றுமலைக்குப் புறப்பட்டார் உவே.சா.

அங்கே அவருக்கு அவ்வூரின் ஜமீந்தார் மருதப்ப தேவர் விருந்துபசாரம் செய்யக் காத்திருந்தார். அங்கிருந்த நாட்கள் உ.வே.சாவிற்கு வித்தியாமனதொரு ஆனந்த அனுபவத்தை வழங்கியது.

No comments:

Post a Comment