Saturday, June 10, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 121

சிலப்பதிகாரத்தின் அடிப்படைப் பணிகளைத் தொடங்கிவிட்டாலும் மேலும் சில உரைகள் கிடைத்தால் பணியைச் சரியாகச் செய்ய உதவுமே என உ.வே.சா வின் மனதில் எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. 1891ல் மே மாத வாக்கில்  திருப்பெருந்துறை கோயிலில் திருப்பணி நடந்தேறி முடிந்த பின்னர் அங்கும் சென்று தனது தேடுதலைத் தொடர்ந்தார். உரைகள் ஏதும் கிட்டவில்லை. பின்னர் குன்றக்குடி மடத்திற்கு வந்தார்.இன்றைய நிலையில்,  ஏனைய சைவ திருமடங்களை விட குன்றக்குடி ஆதீனம் நிறைந்த சேவையைச் செய்து கொண்டிருக்கும் ஒரு சிறப்பான சைவ மடம். அங்கும் பல சுவடி நூல்கள் இருந்தன. 

ஆதீனகர்த்தரைப் பார்த்து பேசிய பின்னர் குமாஸ்தா திரு.அப்பாபிள்ளையைப் பார்த்து தான் வந்த நோக்கத்தை நினைவுபடுத்தினார் உ.வே.சா. அவர் சிலப்பதிகார மூலமும் மணிமேகலை மூலமும் திருத்தமான பிரதிகளைக் கொண்டு வந்து கொடுத்தார். இது உ.வே.சாவின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. புது நம்பிக்கையையும் உருவாக்கியது. இந்தச் சுவடிகள் எங்கிருந்து கிடைத்தன என விசாரித்தபோது பக்கத்தில் இருக்கும் முதலைப்பட்டி என்ற ஊரில் உள்ள கவிராயர் குடும்பத்திலிருந்து கிடைத்த பிரதி எனத் தெரிந்தது. 

மிதிலைப்பட்டி என்ற ஊர் தான் முதலைப்பட்டி என்று பேச்சு வழக்கில் மாறிப்போயிருக்கின்றது. இப்படி பல ஊர்கள் தங்கள் இயற்பெயரை இழந்து பேச்சு வழக்குப் பெயருடன் இன்று இருக்கின்றன.

திருத்தமான நூல்கள் ஓரிடத்தில் கிடைக்கும் எனத் தெரிந்ததும் சும்மா இருக்க முடியுமா? உடனே அப்பாபிள்ளை அவர்களையும் ஆதீனத்தில் அனுமதி பெற்று அழைத்துக் கொண்டு மிதிலைப்பட்டிக்கு இருவருமாக அன்று மதியமே சென்று சேர்ந்தார்கள்.

மிதிலைப்பட்டியில் இவர்கள் தேடி வந்த வீடு  ஒரு கவிராயரின் இல்லம்.அவர்களது முன்னோர்கள் சேலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்,  தாரமங்கலம் கோயிலில் திருப்பணி செய்த கட்டியப்ப முதலியார் ஆதரவில் இருந்தவர்கள் என்றும்,  அந்தப்பரம்பரையில் அழகிய சிற்றம்பலக் கவிராயர் என்பவருக்கு மிதிலைப்பட்டியை வெங்களப்ப நாயக்கரென்ற ஜமீந்தார் கொடுத்தார் என்றும், அது முதல் இவர்கள் குடும்பத்தாரின் ஊராக இது அமைந்தது, அதுமட்டுமல்லாது இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களிடமிருந்தும் மருங்காபுரி ஜமீந்தாரிடமிருந்தும் சிவகங்கை ஜம்னீதாரிடமிருந்தும் புதுக்கோட்டை அரசர்களிடமிருந்தும் இப்பரம்பரையினர் ஏராளமானப் பரிசுகளை தங்கள் கல்விப்புலமைக்காகப் பெற்றனர்   என்றும் உ.வே.சா அறிந்து கொண்டார். 

அக்காலத்தில் கவிராயர்களுக்கு ஊரையே தானமாகக் கொடுத்திருக்கின்றார்கள் என்பதை இதுபோன்ற செய்திகளிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றதல்லவா?

இந்தக் குடும்பத்தினர் எவ்வளவோ பிரபந்தங்களும் நூல்களும் இயற்றினர் என்றும் அதற்காகத் தங்கள் மூதாதையர் ஈட்டிய செல்வத்தை இந்தப் பரம்பரையில் உள்ளோர் அனுபவிக்கின்றனர் என்றும் அக்கவிராயரே பெருமையாகச் சொல்லிக் கொண்டதோடு தங்கள் சேகரிப்பில் இருந்த சுவடி நூல்களைக் கொண்டு வந்து காட்டினார்.அவரிடமிருந்த சுவடிகளெல்லாம் திருத்தமாக இருந்தன. அதில் திருவிளையாடற் பயகர மாலை என்ற நூல் ஒன்றும் கிடைத்தது. இந்த நூலின் அச்சுப்பதிப்பை திருவிளையாடற் பயங்கர மாலை என்ற பெயரில் முன்னர் உ.வே.சா பார்த்திருந்தார். பயத்தை நீக்குவதால் பய ஹர என இருக்க வேண்டிய நூலை பயங்கர நூலாக்கி விட்டனரே என நினைத்து சிரித்துக் கொண்டார் உ.வே.சா.

அவர்களுடனேயே மூன்று நாட்கள் தங்கியிருந்து நூலாய்வுகள் செய்து விட்டு அவரிடமிருந்து புரநானூற்றையும், பயகர மாலையையும், மூவருலா வையும் பெற்றுக் கொண்டு திரும்பினார்.

மிதிலைப்பட்டியில் கிடைத்த சிலப்பதிகாரப் பிரதி உ.வே.சாவிற்கு ஆய்வில் மிக உதவுவதாக அமைந்தது. பல இடங்களில் இப்பிரதியில் பாடல்களுக்குத் தலைப்புக்கள் இருந்தன. சிலப்பதிகாரத்துடன் இடைக்கிடையே மணிமேகலை பதிப்புப் பணியிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார் உ.வே.சா. சிலப்பதிகாரப் பதிப்புப் பணிகளைச் செப்பம் செய்யத் தொடங்கினார். மிதிலைப்பட்டி எனும் பெயர் கொண்ட அந்த ஊர் உ.வே.சாவின் மனத்தில் ஒரு தமிழ்க்கோயிலாகவே காட்சியளித்தது.

தமிழ் நாட்டில் சிவ தலங்களும் வைணவ தலங்களும் பல உள்ளன. அவற்றைப் போல தமிழ்த்தெய்வம் குடிகொண்டிருக்கும் தலங்களுள் ஒன்றாக மிதிலைப்பட்டியைக் காண்கின்றேன் எனக்குறிப்பிடுகின்றார் உ.வே.சா.

இப்படி உ.வே.சா உயர்த்திச் சொல்லும் மிதிலைப்பட்டி என்ர அந்தச் சிற்றூரின் இன்றைய நிலை என்ன? இங்குக் கோயிலாகக் குவிந்து கிடந்த சுவடிகள் இன்று என்னவாகின? கேள்வி எழத்தான் செய்கின்றன!

No comments:

Post a Comment