Sunday, February 26, 2017

நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள் - பகுதி 5

தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.

இந்த நூலில் ஐந்தாவது  கட்டுரையாக இடம்பெறுவது தொல்லியல் அறிஞர் ர.பூங்குன்றன் அவர்களின் “ கடல்வழிகளும் போர்களும்” என்ற கட்டுரை.

தமிழகத்தின் கடல் ஆளுமையைப் பற்றி இக்கட்டுரை குறிப்பிடும் வகையில் அமைந்திருக்கின்றது. சங்க இலக்கியத்தில் கடல் வழிகள், கப்பல் போக்குவரத்துக்கள் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன;  மேற்கு கடற்கரை கடற்வழி நகரங்களான மாந்தை, வஞ்சி, முசிறி, நெல்கிண்டா, குட்ட நாடு போன்றவை முக்கிய நகரங்களாக இருந்த செய்திகள் சுட்டப்படுகின்றன.  சங்க இலக்கியம் மாந்தை, வஞ்சி  ஆகிய நகரங்களின் வளத்தைக் கூறுவதையும் கட்டுரை குறிப்பிடுகின்றது.

முசிறி மலை வளமும் கடல் வளமும் பொருந்திய நகராக விளங்கியமை  பரணரின் பாடல் வழி அறிய முடிகின்றது. 

கடல் வணிகம் சிறப்புற்று இருந்தமையால் கி.மு.4ம் நூ. வாக்கிலேயே  சீனத்துப் பட்டு தமிழகம்  கொண்டு வரப்பட்டது என்ற தகவலையும் அறிய முடிகின்றது.

மேற்கு கடற்கரை நகரான மாந்தையின் வளமும் சிறப்பும் சங்க இலக்கியங்களான அகநானூறு, நற்றிணை பாடல்களில் குறிப்பிடப்படுகின்றன.

சேர மன்னன் நெடுஞ்சேரலாதனுக்கும் யவனருக்கும் நடைபெற்ற போர் பற்றியும் இக்கட்டுரை சொல்கின்றது. வட மேற்கிந்தியாவில் ஆண்ட இந்தோ-கிரேக்க மன்னன் ட்ரிமிட்டிஸ்  சேரநாடு வரை  படையெடுத்து வந்து வென்றதாகவும் பின்னர் காரவேலன் அந்த யவன மன்னரை தோற்கடித்தான் என்ற செய்தி இரண்டாம் பத்தில் இடம்பெறுவதையும் கட்டுரையாசிரியர் சுட்டுகின்றார்.

சுவாரசியமான பல தகவல்கள் இக்கட்டுரையில் இருந்தாலும் சில கேள்விகளும் எழுகின்றன. வட இந்தியாவில் ஆண்டவர்கள் யவனர்கள் என சுட்டப்பட்டதன் காரணம் அவர்கள் பூர்வீகமா அல்லது அவர்கள் உண்மையில் கிரேக்கத்திலிருந்து வந்தவர்களா? இந்தோ-கிரேக்க மன்னன் ட்ரிமிட்டிஸ் வென்றான் எனும் போது எந்தப் போரில், எங்கு யாரைத் தோற்கடித்து வென்றான் என்ற விளக்கம் கட்டுரையில் முழுதாக வழங்கப்படவில்லை. 

அன்றைய காலகட்டத்தில் சேரநாடும் இணைந்த வகையில் அகண்ட தமிழகமாக தென் இந்தியா இருந்திருக்கின்றது. சங்கப்பாடல்கள் இங்கெல்லாம் தமிழும் தமிழர் வாழ்வும் சிறப்புற்றிருந்தமையைப் பாடியிருக்கின்றனர். இன்றோ தமிழகத்தின் கடற்கரை நகரங்களில் வாழும் மீனவ மக்கள் ஏழைகளாக அறியப்படுகின்றார்கள்.   இது சரி செய்யப்பட வேண்டிய சமூகப் பிரச்சனையாக நன கருதுகின்றேன்.


சுபா

No comments:

Post a Comment