Wednesday, February 15, 2017

நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள் - பகுதி 3

இந்த நூலில் மூன்றாவது  கட்டுரையாக இடம்பெறுவது தொல்லியல் அறிஞர் முனைவர்.கி.ஸ்ரீதரன் அவர்களின் “ மாங்குடி அகழ்வாய்வில் கிடைத்த படகுக் குறியீடு பொறித்த பானை ஓடுகள்” என்ற கட்டுரை.


மாங்குடி திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோயில் வட்டத்தில் அமைந்த பகுதி. இங்கு நாயக்கர் புஞ்சை என்ற பகுதியில் செய்யப்பட்ட அகழ்வாய்வில் பெருங்கற்கால பண்பாட்டினைக்காட்டும் கருப்பு-சிவப்பு பானை ஓடுகள், குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், கல்மணிகள் ஆகியன கிடைத்தமைப் பற்றி இக்கட்டுரை விவரிக்கின்றது. 

அதில் கி.மு.2ம் நூ. சேர்ந்த தமிழி  எழுத்து பொறித்த பானை ஓடு குறிப்பிடத்தக்கது அதோடு படகு  போன்ற வடிவம் பொறிக்கப்பட்ட பானையும் இங்கே கிடைத்துள்ளது.  இப்பானையின் கழுத்துப் ப்கௌதியில் படகு வடிவம் கீறப்பட்டுள்ளது. ஒரு படகு துடுப்புடன் இருப்பது போன்ற வடிவில் இது அமைக்கப்பட்டிருக்கின்றது.

இந்த மாங்குடி எனும் சிற்றூர் சங்ககாலத்தில் வணிக வழித்தடத்தில் அமைந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. ஆகையால் வணிகர்கள் வந்து சென்றமையைக் குறிக்கும் அகழ்வாய்வுப் பொருட்கள் பல இங்கு கிடைப்பது இப்பகுதி சங்ககாலத்திலும் அதற்கு முன்னரும் வணிகர்கள் வந்து சென்ற இடமாகும் என்பதற்குச் சான்றாக அமைகின்றது என்பதை இக்கட்டுரை அகழ்வாய்வு தகவல்களோடு முன் வைக்கின்றது.

மாங்குடி மட்டுமன்றி மேலும் இப்பகுதியில் அமைந்துள்ள கிராமங்களில் தொடர்ச்சியாக அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் மேலும் பல தொல்லியல் மற்றும் கடசார் ஆய்வுச்சான்றுகள் நமக்குக் கிட்ட பெரிய வாய்ப்புள்ளது. 

சுபா

No comments:

Post a Comment