Thursday, September 1, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 101

உ.வே.சா சென்னையில் சிந்தாமணி  பதிப்பிற்காக வந்து சேலம் இராமசாமி முதலியார் இல்லத்தில் தங்கியிருந்த காலகட்டம் அது. தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஒரு அறையில் அவர் தங்கியிருந்தார்.  இரவும் பகலும் தனிமையில் அமர்ந்து ஒவ்வொரு ஏடுகளையும் வாசித்துப் பதம் பிரித்து, அச்சுப் பிரதிகளைக் கையெழுத்துப் பிரதிகளோடு ஒப்பிட்டு ப்ரூப் பார்த்து நூல் பதிப்புப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.

இடையில் ஒரு நாள் இராமசாமி முதலியார் உ.வே.சாவை சென்னை காஸ்மோபோலிட்டன் கிளப்பிற்கு அழைத்துச் சென்று அங்கு பில்லியர்ட்ஸ் விளையாடிக் கொண்டிருந்த பூண்டி அரங்கநாத முதலியாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். சிந்தாமணி நூல் பதிப்பிற்குத் தான் நன்கொடை சேகரிப்பதைச் சொன்னதும் நூறு ரூபாய் தருவதாக கையொப்பமிட்டு அந்த நன்கொடை நோட்டு புத்தகத்தை தன் ஏனைய நண்பர்களிடம் காட்டி மேலும் பலரது கையொப்பங்களைப்  பெற்றுத்தருவதாகச் சொல்லி வாங்கிக் கொண்டதோடு, தாம் கூறியபடியே மேலும் நன்கொடைக்கு ஏற்பாடும் செய்து கொடுத்தார் பூண்டி அரங்கநாத முதலியார்.

இந்தப் பகுதியை வாசிக்கும் போது, இன்றைக்கு ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் பொருளாதார ஏற்றம் உள்ளவர்கள் அன்றைய மெட்ராசில் கிளப்புகளுக்குச் செல்வது என்பது ஒரு வகையான பேஷனாகவும், ஆங்கிலேய நாகரிகத்தின் தாக்கத்தில் பில்லியர்ட்ஸ் விளையாட்டு  தமிழகத்திற்கும் அறிமுகமாகி இருந்தமையும் தெரிகின்றது.

சிந்தாமணி பதிப்பு வேலை முழுமையையும் 1886ம் ஆண்டு கோடை விடுமுறையிலேயே செய்து முடித்து விடவேண்டும் என்ற எண்ணத்துடன் தான் உ.வே.சா மெட்ராஸ் வந்திருந்தார். ஆனால் அவர் நினைத்தபடி அனைத்தையும் தயாரித்து முடிக்க முடியவில்லை. கோடை விடுமுறையும் முடியும் நிலையில் இருந்தமையால் கும்பகோணம் திரும்ப வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது.  அதுவரை 144 பக்கங்களுக்கான பணிகள் முற்றுப்பெற்றிருந்தன. அதாவது சிந்தாமணியில் 18 பாரங்கள் அச்சாகியிருந்தன.  இந்த நிலையில் பதிப்புப் பணிகள்  தொடர்ந்து நடக்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு தனக்கு அச்சுக்கோப்புக்கள் தயாராகத்தயாராக அனுப்பும்படி சொல்லி கிளம்பி விட்டார். உத்தியோகம் தானே வருமானத்தைக் கொடுக்கக்கூடியது? நிரந்தர உத்தியோகம் அவர் குடும்பத்தை வழி நடத்த மிக முக்கியமாக இருந்ததோடு அவர் விரும்பிய வகையில் மாணவர்களுக்குப் போதிப்பது என்பதும் அவருக்கு மனமகிழ்ச்சியைத் தந்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனாலும்  இந்தக் குறிப்பிட்ட சூழலிலோ, அவர் மனம் கும்பகோணம் செல்வதற்கு விருப்பம் இல்லாமல் தான் இருந்தது. சிந்தாமணி பதிப்புப் பணியிலேயே முழு ஆர்வமும் மனமும் கவனமும் அக்கரையும் அவருக்கு இருந்தது. பிரியக்கூடாதவர்களை விட்டுப் பிரியும் துயரத்துடனேயே    மெட்ராஸிலிருந்து உ.வே.சா புறப்பட்டார்.  

தொடரும்..

சுபா

No comments:

Post a Comment