Thursday, September 22, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 103

என் சரித்திரம் நூலின் நூறாவது அத்தியாயம் சிந்தாமணி அச்சுவடிவம் பெற்று நூலாக வெளிவந்த நிகழ்வை விவரிக்கும் ஒரு பகுதி. சிந்தாமணியைப் பதிப்பிக்கும் போது அது தக்க முறையில் தமிழ் மக்களைச் சென்று சேரவேண்டும் என்ற பெரிய ஆதங்கம் உ.வே.சாவிற்கு இருந்ததை இந்த அத்தியாயத்தில் காண்கின்றோம்.

சீவக சிந்தாமணியின் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களோடுகடஹியின் நாயகனான சீவகனின் கதையை இணைக்கவேண்டும் என முயற்சித்து அதனை முகவுரையில் எழுதினார். தனக்கு அறிமுகமான சமண இலக்கியவாதிகளிடம் அதனைக்காட்டி தவறுகள் திருத்தி வைத்துக் கொண்டார்.பின்னர் நூலாசிரியரான திருத்தக்கதேவரது வரலாற்றைச் சமணர்கள் தமக்குள்ளே வழிவழியாக சொல்லி வந்த கர்ணபரம்பரை கதைகளின் உள்ள விசயங்களைத் தேர்ந்தெடுத்து அதனை வசன் நடையில் தயாரித்து அதனையும் சமண இலக்கியவாதிகளிடம் காட்டி வேண்டிய திருத்தங்களை உட்புகுத்தி தயார் செய்தார். அதோடு நிற்காமல், சீவகன் சரித்திரத்தில் அவனுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புப் பெயர்களை தனியாகப் பட்டியலிட்டு அதனை அபிதான விளக்கம் என தனிப்பகுதியாகத் தயாரித்து வைத்துக் கொண்டார். இவற்றோடு சீவக சிந்தாமணியின் பெருமைகளை விளக்கும் முகமாக ஒரு விளக்கப்பகுதி போன்று முகவுரை ஒன்றையும் தயார்செய்தார்.

இவற்றையெல்லாம் மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்த்து சரி செய்து நூலில் இணைக்க அச்சகம் அனுப்பி வைத்தார். யாரும் தம்மை குரை கூறிவிடக்கூடாது, தவறுகள் நூலில் வந்து விடக்கூடாது என மிகுந்த கவனத்துடன் இப்பணியைச் செய்து வந்தார். அவரது அப்போதைய மன நிலையை இப்படிக் குறிப்பிடுகின்றார்.

அதனோடு ‘பிழையென்று தோற்றும்படி விஷயங்களை எழுதக்கூடாது’ என்ற நினைவும் இருந்தது. ஆதலின் நான் எழுதியதைப் பலமுறை பார்த்துப் பார்த்து அடித்தும் திருத்தியும் ஒழுங்கு படுத்திக் கொண்டேன். பழக்க மில்லாமையால் ஒவ்வொரு வாக்கியத்தையும் எழுதி முடிக்கும்போது சந்தேகமும் பயமும் உண்டாயின. ‘வான்மீகத்தை இதனோடு ஒப்பிடுவது சரியோ? பிழையோ? ஸம்ஸ்கிருத வித்துவான்கள் ஏதாவது சொன்னால் என்ன செய்வது? என்றும், ‘பிற்கால நூல்களுக்கு வழிகாட்டி என்று சொல்லுகிறோமே; ஜைன நூலாகிய இதை அப்படிச் சொல்லு வதால் சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் நம்மேல் சினம் உண்டாகுமோ?’ என்றும் கலங்கினேன். ‘நம் மனத்திற்குச் சரியென்று தோற்றியதை எழுதி விடுவோம்; பிறகு தவறென்று தெரிந்தால் மாற்றிக் கொள்வோம்’ என்று துணிந்து எழுதலானேன்.

சிந்தாமணியைப் பதிப்பிக்கத்தொடங்கிய நாள் முதல் தனக்குக் கிடைத்த சிந்தாமணி ஏட்டுச் சுவடிகளையெல்லாம் ஒவ்வொன்றையும் தேர்ந்தெடுத்து வைத்துப் பாட பேதங்களை ஆராய்ந்து பதிப்புப்பணியில் ஈடுபட்டிருந்தார் உ.வே.சா. இது கடினமான ஒன்றே.

பதிப்புப்பணி என்பது ஒவ்வொரு பதிப்பாசிரியரையும் பொருத்து மாறுபடும் ஒன்று. சில பதிப்பாசிரியர்கள் சுவடி நூலில் உள்ள பிழைகளை மாற்றங்கள் ஏதும் செய்யாமல் அப்படியே பதிப்பதே முறை என்ற கொள்கையைக் கொண்டிருப்பர். உதாரணமாகப் பேராசிரியர் வையாபுரிப்பில்ளையவர்களின் பதிப்புப்பணி பாணி இத்தகையது எனலாம். ஒரு சிலர் சுவடி நூல்களில் உள்ள எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் ஆகியனவற்றை மாற்றித் திருத்திய நூலாகக் கொண்டு வரவேண்டும் என்ற வகையில் செயல்படுவர். ஆக, பதிப்பாசிரியரின் எண்ணத்தைப் பொறுத்தே பதிப்புப்பணி முயற்சிகள் நடந்தன என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

சிந்தாமணி ஆய்வின் போது வெவ்வேறு சுவடிகளில் இருந்த பாடபேதங்களைப் பார்த்து தான் வருந்தியமையும் ஆக தக்க இடத்தில் திருத்தங்களை உட்புகுத்தி சில மாற்றங்களைச் செய்வது அவசியம் என்ற கருத்து ஏற்படவே திருத்தங்களை செய்து பணிகளை முடித்தார். இதனை உ.வே.சா இப்படிக் குறிப்பிடுகின்றார்.

ஏட்டுச் சுவடிகளிற் கண்ட பாடங்களின் வேறுபாட்டைக் கண்டு கண்டு என் மனம் புண்ணாகியிருந்தது. இன்னபடி இருந்தால் பொருள் சிறக்குமென்று எனக்குத் தோற்றின இடங்களிலும் பிரதியில் உள்ளதையே பதிப்பித்தேன். என்னுடைய கருத்தையோ, திருத்தத்தையோ சிந்தாமணியில் ஏற்றாமல் மிகவும் ஜாக்கிரதையாகக் கவனித்துப் பதிப்பித்தேன். பதிப்பிக்கத் தொடங்கிய நூல் எனக்கு ஒரு தெய்வ விக்கிரகம்போல இருந்தது. அதன் அழுக்கைத் துலக்கிக் கவசமிட்டுத் தரிசிக்க வேண்டுமென்பதே என் ஆசை; ‘கை கோணி இருக்கிறது, வேறுவிதமாக அமைக்கலாம்; நகத்தை மாத்திரம் சிறிது திருத்தலாம்’ என்ற எண்ணம் எனக்கு உண்டாகவில்லை. அதன் ஒவ்வோரணுவிலும் தெய்விக அம்சம் இருக்கிறதென்றே நம்பினேன். அழுக்கை நீக்கி விளக்குவதற்கும், அங்கத்தையே வேறுபடுத்துவதற்கும் உள்ள வித்தியாசத்தை நன்றாக அறிந்திருந்தேன். இக்கருத்தை, ‘புராதனமான தமிழ் நூல்களும் உரைகளும் பண்டைவடிவம் குன்றாதிருத்தல் வேண்டுமென்பதே எனது நோக்கமாதலின் பிரதிகளில் இல்லாதவற்றைக் கூட்டியும். உள்ளவற்றை மாற்றியும், குறைத்தும் மனம் போனவாறே அஞ்சாது பதிப்பித்தேனல்லேன். ஒரு வகையாகப் பொருள் கொண்டு பிரதிகளில் இருந்தவாறே பதிப்பித்தேன். யானாக ஒன்றுஞ் செய்திலேன்’ என்று புலப்படுத்தினேன்.

தக்கக் காலத்தில் உடவியோரை நன்றியுடன் நினைத்துப் பார்ப்பது சான்றோருக்கு அழகு. இதனைக் கருத்தில் கொண்டு தனக்கு பல்வேறு வகையில் சிந்தாமணி அச்சுப்பதிப்பாக்கத்தில் உதவிய அன்பர்களுக்கு நன்றி கூறி நன்றியுரை பகுதி ஒன்றையும் நூலில் இணைத்தார். இவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு சென்னைக்குப் புறப்பட்டார். சென்னையை அடைந்து அச்சகத்தாரிடம் அனைத்தையும் கொடுத்து அதனை முழுமை பெறும் பணியைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அச்சகத்திலேயே அன்றிரவு படுத்து உறங்கினார்.

சீவக சிந்தாமணி அச்சுப்பதிப்புப் பணி முடிவுற்றது.

நூல் அச்சு வடிவில் வெளிவந்தது.

அந்த நாளில் உ.வேசாவிற்குஒரு பரிசு அவர் இருக்கும் இடம் தேடி வந்தது. உ.வே.சா இன்று தமிழ்த்தாத்தா எனக் கற்றோராலும் தமிழ் அன்பர்களாலும் சிறப்பிக்கப்படும் ஒரு நிலையை அவருக்குக் ஏற்படுத்திக் கொடுத்த ஒரு பரிசு அது.


சீவக சிந்தாமணி - ஓலைச்சுவடி நூல்
மதுரை அமெரிக்கன் கல்லூரி நூலகத்தில்


தொடரும்...!

சுபா

No comments:

Post a Comment