Thursday, September 17, 2015

குடியரசில் பெரியார் உடன்....! - 12


20ம் நூற்றாண்டின் ஆரம்ப கால தமிழகத்தின் நிலமை என்பது பல திருப்புமுனைகளைக் கொண்டது. மக்கள் வாழ்க்கையில் பன்முக மாற்றங்களை எதிர்கொண்ட காலகட்டம் அது. ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற வேண்டும் என்ற வேட்கை ஒரு புறம். சமதர்மம் பேனப்பட வேண்டும் என்ற ஆர்வம் ஒருபுறம். எல்லோருக்கும் சாதி வேறு பாடு இன்றி கல்வி தேவை என்ற சிந்தனை ஒரு புறம். பெண்களுக்குக் கல்வி என்ற முழக்கம் ஒரு புறம்,.... என  பலவகை சமுதாய மாற்றங்களை தமிழகம் இந்த 20ம் நூற்றாண்டில் சந்தித்தது. அதன் தொடர்ச்சியாகவே இன்றைய தமிழகத்தின் சமூக, சமய, அரசியல்  நிலைத்தன்மைகள் அமைந்திருக்கின்றன.

ஒரு சில விடயங்களை உற்று நோக்கும் போது படிப்படியான வளர்ச்சியைக் காணமுடிகின்றது. உதாரணமாக பெருமளவில் பெண்கள் கல்விக்கூடங்களுக்குச் செல்வதும் பலதரப்பட்ட தொழில்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதையும் நல்லதொரு வளர்ச்சியாகக் காண்கின்றோம். சாதி வேறுபாடு எனும் விடயத்தை எடுத்துக் கொண்டால் தாழ்த்தப்பட்டோர் என்றும் தாழ்த்தப்பட்டோராகவே இருக்க வேண்டும் என்ற எழுதா சட்டத்தை வலியுறுத்தும் எண்ணம் பரவலாக மாறவில்லை என்பதைக் காண்கின்றோம்.

நாட்டின் சுதந்திரத்திற்காகவும், மக்கள் நலனுக்காகவும் போராடிய பெரியோரை வாழ்த்திப் பாடிய இளைஞர்கள் குறைந்து சினிமா பிரபலங்களுக்காக விழா எடுத்து பார்ட்டி கொடுத்து அவர்கள் பெருமையை தன் பெருமையாக நினைத்து வாழும் இளைஞர்கள் பெருகி இருப்பதைக் காண்கின்றோம். மது ஏழை பணக்காரன், ஆண் பெண்,வயதானோர், இளையோர், குழந்தைகள் என ஒரு அளவில்லாத வகையில் எல்லா தரப்பினரையும் பாதிக்கின்ற ஒரு விடயமாகிப் போய்விட்ட  அவலத்தையும் காண்கின்றோம்

பொதுவாகக் கல்வி வளர்ச்சி, கிராமப்புற மேம்பாடு என எடுத்துக் கொண்டால் பல அடுக்கு ஊழல்களால் மக்கள் நலன் என்பது ஓரம் தள்ளப்பட்டு தரம் குறைந்த வகையிலேயே கல்விக்கூடங்கள் இயங்குவதையும், கிராம நல மேம்பாடு சம்பந்தப்பட்ட முயற்சிகள் இருப்பதையும்  காண்கின்றோம்.

பேச்சுரிமை என்பது எந்த அளவிற்கு நடப்பில் உள்ளது என்பதும் கேள்விக்குறி. நியாயமற்ற செயல்பாடுகளை கேள்வி கேட்டு நியாயத்திற்காகப் போராடும் உயர் அதிகாரிகளும் சரி பொது மக்களும் சரி எண்ணிக்கையில் குறைந்து தான் இருக்கின்றனர். திரு.சகாயம் IAS  போன்றோர் என்ணிக்கையில் குறைந்து தான் உள்ளனர். சூழலுக்கு ஏற்றவாறு ஊழலையும் ஏற்றுக் கொண்டு, அநீதிகளையும் ஏற்றுக் கொண்டு, பொய்மையையும் ஏற்றுக் கொண்டு அந்தச் சிக்கலுக்கு இடையே தன் நலன், தன் குடும்ப நலன் என்ற ஒன்றினை மட்டுமே முன்னிலைப் படுத்தி இயங்கும் நபர்களே திறமையானவர்கள் என அடையாளம் காணப்படும் நிலைமை இருக்கும் கால கட்டம் இது. பலருக்கு மனதில் நியாயம் என்று தோன்றியதைச் சொல்வதில் அச்சம். பிறர் தன்னைப் பற்றி என்ன நினைத்து விடுவார்களோ என்ற கலக்கம். 

திரு.ஈ.வே.ரா அவர்கள் தன் மனதில் பட்ட விசயத்தை வெளிப்படையாகக் கூறுவதில் தயங்கியவரில்லை என்பதை அவரது எழுத்துக்களை வாசிப்பவர்கள் அறிவார்கள். உதாரணமாக 1932ம் ஆண்டு வெளி வந்த குடியரசு இதழில் அவரது இலங்கையில் நிகழ்த்திய சொற்பொழிவின் எழுத்து வடிவத்தைக் குறிப்பிடலாம்.

​கொழும்பில் ஈ.வெ.இராமசாமி

...விஷயங்களைப் பரிசோதனை செய்து பாருங்கள். பார்த்து அதற்கேற்றவாறு நடவுங்கள். உள்ளதை உள்ளவாறே நோக்குங்கள்.

நான் மனிதன். என் அறிவைக் கொண்டு விஷயங்களைத் தேடி இம்முடிவுக்கு வந்தேன். ஒன்றையும் வெறுக்க வேண்டாம். ஒன்றையும் மறுக்கவும் வேண்டாம். அவர் சொல்லிவிட்டார் என்று ஒன்றையுஞ் செய்யாதேயுங்கள். இன்னொருவனுக்கு அடிமையாய் உங்கள் மனச்சாட்சியை விற்றுவிட வேண்டாம். எதையும் அலசிப் பாருங்கள். ஆராயுங்கள். எண்ணங்களை அடக்கி ஆண்டகாலம் மலையேறிவிட்டது. சுய அறிவுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டிய காலம் இது.

நாம் எண்ண வேண்டியது, ஆராய வேண்டியதெல்லாம் முன்னேயே எமது ஆன்றோரால் ஆய்விட்டது என்று நீங்கள்  கொள்ள வேண்டாம். நான் சொல்லுவது முற்றும் சரியென்றும் நீங்கள் கொள்ள வேண்டாம். எதையும் ஆராய்ந்து உண்மை தேறிக்கொள்லுங்கள்.

எனக்கு மதாபிமானம் இல்லையென்று நீங்கள் கருத வேண்டாம். 25வருட காலமாக நான் ஒரு கோவிலில் தர்ம கர்த்தாவாகவிருந்து, அக்கோயிலின் கிரமங்களை யெல்லாம் ஒழுங்காக நடத்தி வந்தேன். எனக்கு தேசாபிமானம் இல்லையென்றும் நீங்கள் சொல்ல வேண்டாம். ஒரு தடவைக்கு மூன்று நான்கு தடவை தேசிய விஷயமாக ஜெயிலுக்கு சென்றேன். ஆனால் இந்த அபிமானமெல்லாம் நம் ஏழைச் சகோதரருக்கு விமோசனம் கொண்டுவராது. ஆதலால் தான் அபிமானமொன்றும் நமக்கு வேண்டாம். மனுஷாபிமானமே வேண்டுமென்று ஜனங்களுக்கு நான் எனக்கு தோன்றிய வரை போதிக்கத் தலைப்பட்டேன். சோம்பேறி ஞானமும், மதாபிமானமும் பசி கொண்ட மகனுக்கு அவன் பசியைத் தீர்க்குமா? எண்ணத்துக்குச் சுதந்திரம் கொடுங்கள். மனுஷாபிமானத்தையும், சுயமாரியாதையையும் காப்பாற்றுங்கள் ஏழைகளின் கஷ்டத்திற்கு நிவாரணந் தேடுங்கள்.

-குடி அரசு சொற்பொழிவு - 30.10.1932

அன்புடன்
சுபா

1 comment:

  1. சிறந்த சொற்பொழிவு நடைமுறையில் மனிதன் சிந்திக்க வேண்டியவைகள் ! தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete