Wednesday, September 23, 2015

சாக்ரடீஸ் - ப்ளேட்டோவின் அரசியல் வழி.....! - 8

வாசிப்பின் பகுதி 8


ஒரு சிறந்த ராஜ்ஜியத்தில் மன்னர் எப்படியிருக்க வேண்டும்? கலைஞர் எப்படி இருக்க வேண்டும்? மருத்துவர் எப்படி இருக்க வேண்டும்? விவசாயி எப்படி இருக்க வேண்டும்? மக்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற வகையில் சாக்ரடீஸ் நடத்தும் உரையாடல் தொடர்கின்றது.

ஒரு நாட்டில் ஒவ்வொருவரும் ஏனோ தானோவென்று அவரவர் வாழ்க்கையை மட்டும் பார்த்துக் கொண்டு சென்று விடக் கூடாது. நாடு என்னும் இயந்திரம் சீராக இயங்க ஒவ்வொருவரும் தமது கடமையைச் சீராகச் செய்ய வேண்டும்.

ஒவ்வொருவரும் தமது திறனுக்கேற்ற பொறுப்பை எடுத்துக் கொண்டு, அதில் தகுந்த பயிற்சியைப் பெற்று, அந்தப் பொறுப்பை சிரத்தையுடன் செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் மனதை சீராக வைத்திருக்க வேண்டும். மனதை சீராக வைத்திருப்பது போலவே உடல் பயிற்சிகளைச் செய்து செய்து உடலையும் கட்டுக்கோப்புடன் வைத்திருக்க வேண்டும்.

சீரில்லாது தீய உணவு பழக்கத்தால் உடல் நலனைக்  கெடுத்துக் கொண்டு நோயில் வீழ்ந்து அந்த நோயைப் பற்றியே தினமும் நொடிப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருப்பது நாட்டிற்குக் கேடு. ஆதலால் உடலையும் மனத்தையும் மிகச் சீராக வைத்திருப்பது ஒவ்வொருவரின் கடமை..

இப்படி தொடர்கின்றது சாக்ரடீஸின் கருத்துக்கள்.

ஒரு ராஜ்ஜியத்தைக் காவல் செய்கின்ற மன்னரும் அவரது அதிகாரிகளும் தனித்திறமையுடன் பிறப்பவர்கள். இத்தகையோர் அவரவர் திறமைக்கேற்ப கண்டெடுக்கப்பட்டு அவர்களுக்கு அரசியலில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இப்படி அளிக்கப்படும் பயிற்சியானது அவர்களுக்கு பலவகைப்பட்ட சோதனைகளை அளிப்பதாகவும், அவர்களைக் கடமையில் கண்ணும் கருத்துமாக கவனமாக இருக்கும் வகையிலும் அமைந்திருக்க வேண்டும். அரசியல் அதிகாரம் என்பது தனிமனித சுயனலத்தையோ அல்லது தான் சார்ந்திருக்கும் குமுகத்தையோ முற்றிலும் ஒரு நோக்கமாகக் கருதாத ஒட்டு மொத்த நாட்டு மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்ட வகையில் அமைந்ததாக இருக்க வேண்டும் என்ற  கருத்தை முன் வைக்கின்றது மூன்றாம் நூல்.

நாட்டு மக்களிடம் சென்று  நேராக சில கருத்துக்களைச் சொன்னால் புரிந்து கொண்டு உடனே  ஒப்புக் கொள்ள மாடார்கள். ஆகையால் மக்களை அணுக சில கதைகளைச் சொல்ல வேண்டும். எளிமையான அக்கதைகளைக் கேட்பதன் வழி  அவர்கள்  ஒரு நாட்டினை செம்மையாக ஆட்சி செய்ய வேண்டிய அரசு இயலின் தத்துவங்களைப் புரிந்து கொண்டு ஒத்துழைக்க உதவும் என்ற கருத்தை மனதில் கொண்டு  இப்பகுதியில் உரையாடல் வளர்கின்றது. அதில் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியைக் கீழே காண்போம்.

ஸாக்ரடீஸ்: "இந்த ராஜ்யத்திலே வசிக்கிற நீங்களெல்லோரும் சகோதரர்கள். ஆனால் கடவுள் உங்களைச் சிருஷ்டிக்கிற போது, யாரிடத்தில் ஆளும் யோக்கியதை இருக்கிறதோ அவர்களிடத்தில் தங்கத்தை நிரப்பி வைத்திருக்கின்றார். அப்படிப்பட்டவர்களுக்கு மற்றவர்கள் மரியாதை செலுத்த வேண்டும். அப்படியே போர் வீரர்களிடத்தில் வெள்ளியையும், விவசாயிகள் - தொழிலாளர்கள் முதலியோர்களிடத்தில் இரும்பையும் செம்பையும் முறையே நிரப்பி வைக்கின்றார். உங்களைப் போல் உங்களுடைய குழந்தைகளும் இருப்பது சகஜமே. அரசர்கள் போர் வீரர்கள், விவசாயிகள் - தொழிலாளிகள் முதலியோர், ஒரே மண்ணிலிருந்து உற்பத்தியானவர்களாதலினால், அதாவது சகோதரர்களாதலினால், தங்கத்திடமிருந்து வெள்ளியும் அல்லது வெள்ளியிடமிருந்து தங்கமும் முறையே  பல வகையாக மாறி மாறித் தோன்றுவது இயற்கைதான். இதனால் கடவுள் அவர்களுக்கு விதித்திருக்கிற கண்டிப்பான கட்டளையென்னவென்றால், ராஜ்யத்திலே பிறக்கிற எல்லாக் குழந்தைகளின் விஷயத்திலும் நீங்கள் அதிகமான கவனஞ்செலுத்த வேண்டும்.

யாருடைய ஆத்மாவில் என்னென்ன உலோகம் கலந்திருக்கிறதென்பதை நீங்கள் நிதானித்துப் பார்க்க வேண்டும். உங்களுடைய சொந்த குழந்தைகளிடத்திலேயே இரும்பும் செம்பும் கலந்திருக்குமானால், அதாவது, விவசாயியாக இருக்கவோ அல்லது  தொழிலாளியாக இருக்கவோ கூடிய யோக்கியதைகளுடன் அவர்கள் பிறப்பார்களானால், கொஞ்சம் கூடத் தயை தாட்சண்யமின்றி அவர்களை விவசாயிகளின் கூட்டத்தில் சேர்த்து விட வேண்டும். அப்படியே விவசாயிகள் - தொழிலாளிகள் குடும்பங்களில் அரச தன்மைகளுடனோ குழந்தைகள் பிறப்பார்களானால் அவர்களை, அந்தப் பிரிவுகளில் முறையே சேர்த்துவிட வேண்டும். அதாவது அவர்களை அரசர்களாகவும், போர் வீரர்களாகவும் முறையே நியமிக்க வேண்டும்.

ஒரு ராஜ்யத்தை இரும்போ செம்போ காவல் செய்யுமானால், அதாவது விவசாயிகளோ அல்லது தொழிலாளர்களோ ஆட்சி புரிவார்களானால், அந்த ராஜ்யம் விரைவிலேயே அழிந்து போகும்"  என மக்களுக்கு உபதேசித்து மக்களை நம்பச் செய்ய வேண்டும்.

தொடரும்.
சுபா

No comments:

Post a Comment