Sunday, August 30, 2015

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 84

வாழ்க்கையில் பிரிவு என்பது வரும் போதுதான் நாம் இதுவரை இருந்து கொண்டிருக்கும் நிலையும் அதில் நம்மோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தோரின் நல்ல பண்புகளும் அவர்கள் நமக்காகச் செய்த நல்ல விசயங்களும் மனதில் வந்து முதன்மை இடத்தை பிடித்துக் கொள்ளும். இத்தனை நாள் அந்தக் குற்றம், இந்தக் குறை, அவர் இதைச் செய்தார், இவர் இதைச் செய்தார் என்று குறைகளை மட்டுமே பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்து நம் மனதை மயக்கிய பண்புகள் அந்த கணத்தில் ஓடி ஒளிந்து கொண்டு,  அன்று தான் ஏதோ ஒரு வகையில் புதிதாக வேறொரு கண்ணோட்டத்தில் இதுவரை நாம் இருந்த சூழலையே மீள்பார்வை செய்ய வைத்து விடும். இது தான்  நம் மனத்தின் இயல்பான பண்பு. பலர் இதனாலேயே மாற்றங்களை வாழ்க்கையில் வரவேற்பதில்லை. 

பழகிய இடம், பழகிய மனிதர்கள், பழகிய உறவுகள், பழகிய நிமிடங்கள்......
இவை அனைத்தும் பிடிக்கின்றதோ பிடிக்கவில்லையோ... ஏதோ ஒரு வகையான பாதுகாப்பை பழகிய இவைகள் தருவது போன்ற ஒரு பிரமை நம் எல்லோருக்கும் மனதில் இருப்பதுதான்!

ஆயினும், வாழ்க்கையில் சில கால கட்டங்களில் நம் வாழ்வில் நடக்கும் மாற்றங்கள், அவை வலிந்து ஏற்படுத்தும் பிரிவுகள்என்பன அடுத்த ஒரு புது உலகத்தின் கதவுகளை நம் பயணத்திற்காகத் திறந்து வைத்திருக்கின்றன என்பதை நாமே நமக்கு நினைவு படுத்திக் கொள்வது மட்டுமே நாம் மன தைரியத்தோடு,  இந்த மாற்றமும் பிரிவும் நமக்குத் தருகின்ற மன சஞ்சலத்தை கடக்க னமக்கு உதவும். மாற்றங்களை வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டு அது சில வேளைகளில் இருக்கின்ற இருப்பிலிருந்து ஒரு பிரிவினை ஏற்படுத்தினால்ம் அதனையும் ஏற்றுக் கொள்வது என்பது வலியைத் தரக்கூடிய ஒரு விஷயம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் அவையும் கடந்து போகும். 

கடந்து போகும் போது மனம் இன்னமும் பக்குவபட்டிருக்கும். நமது தனித்துவத்துடன் கடமையாற்ற இந்த மனப்பக்குவம் நம்மை தயார்படுத்தியிருக்கும் என்ற நிலையை உணரும் போது நாம் கடந்து வந்த பாதையில் நாம் அனுபவித்த வலிகள் நம்மை நாமே பெருமை படக் கொள்ளச் செய்வனவாக இருக்கும் என்பதை நான் நம்புகின்றேன்.

உ.வே.சா அவர்கள் திருவாவடுதுறை திருமடத்திலிருந்து கும்பகோணம்  கல்லூரியில் தமிழ் ஆசான் பதவிக்கான பொறுப்பெடுத்துக் கொள்ள ஆதீன கர்த்தர் சுப்ரமணிய தேசிகரிடமிருந்து ஆசியும் சிபாரிசுக் கடிதமும் கிடைத்த நாளில் உ.வே.சா மட்டுமல்லாது மடத்தில் இருந்த அனைவருக்குமே இது வருத்தத்தை அளிக்கும் விஷயமாகவே இருந்தது. தேசிகரிடம் அணுக்கமாக இருந்த சிலர் அன்று இரவே இது மடத்திற்கு நல்லதல்ல என தேசிகரிடம் குறிப்பிட்டு இதனை தவிர்க்க எடுத்த முயற்சிகள் எவையும் வெற்றியடையவில்லை.

தன் நலம்.. தான் சார்ந்திருக்கும் மடத்தின் நலன் என்று மட்டும் நினைப்பவரல்ல சுப்ரமணிய தேசிகர். 
பொதுவாக சில நல்ல விசயங்கள் நடக்க வேண்டும். அதனை சாத்தியப்படுத்த இதுவே சிறந்த முடிவு என்று அவர் மனம் உறுதியாக இருந்தது. மாலையில் மீண்டும் தேசிகரிடம் இது குறித்து நவசிவாய தேசிகர் பேசிப்பார்த்தார். ஆனால் தேசிகரின் இதற்கான பதில்என்னவாக இருந்தது என்பதை குறிக்கும் வகையில் அங்கு நடந்த  உரையாடலை இப்படிப் பதிகின்றார் உ.வே.சா.

"நமசிவாய தேசிகர் கூறியதைக் கேட்ட ஆதீனத் தலைவர் தம் கருத்தைத் தெளிவாக்கலானார். “நீர் சொல்வது சரியே; அவரால் மடத்துக்கு
எவ்வளவு உபயோகம் உண்டென்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனாலும் அவருடைய நிரந்தரமான நன்மையைக் கருதியே இதற்கு நாம் சம்மதித்தோம். இங்கே நாம் உள்ள வரைக்கும் அவருக்கு ஒரு குறைவும் நேராது. காலம் ஒரே மாதிரி இராது. நம் காலத்திற்குப் பிறகு அவரிடம் நம்மைப்போலவே அன்பு செலுத்திப் பாதுகாப்பார்களென்று நிச்சயமாகச் சொல்லமுடியாது. யாரேனும் ஒருவர் இங்கே திடீரென்று தோன்றி, ‘இவர் சொல்லுகிற பாடத்தை நானே சொல்கிறேன். இவருக்குச் சம்பளம் கொடுப்பது அனாவசியம்’ என்று சொல்லக்கூடும். பிறகு அவர் என்ன செய்வார்! இந்தமாதிரி இடங்களில் பல பேருடைய தயை இருந்தால் தான் நிலைத்து நிற்க முடியும். தலைவர் முதல் உக்கிராணக்காரன் வரையில் எல்லோருடைய பிரியத்தையும் ஒருவர் பெற்று இருப்பதென்பது அருமையிலும் அருமை. நம்மால் ஆதரிக்கப்பட்டவர்கள் எப்பொழுதும் சௌக்கியமாக இருக்க வேண்டுமென்பது நம் கருத்து. அதனால் சாமிநாதையர் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்து விட்டால் பிறகு அவருடைய விருத்திக்கு ஒரு குறைவும் நேராதென்று எண்ணியே அவரை அனுப்பலானோம். அவர் சௌக்கியமான நிலையில் இருப்பதை நாம் இருக்கும்பொழுதே கண்ணாற் பார்த்து விட வேண்டும்” என்றார். "

முதல் நாளே உ.வே.சா. தியாகராச செட்டியார் வந்துவிட்டுப் போனதையும் அவர் கொண்டு வந்து கொடுத்த புதிய செய்தியையும் தன் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொண்டிருந்தார். அதனால் குடும்பத்திலும் இந்த நிலை ஒரு வித குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. மறு நாள் காலையில் உ.வே.சா திருமடத்தை விட்டு என்று புறப்படுவது சரியாக இருக்கும்?  என்ற கேள்வி எல்லோருக்குமே மனதில் இல்லாமலில்லை. கட்டளை என்றைக்கு அமையுமோ என்ற வருத்தம் கலந்த எண்ணமே அங்கிருந்தோர் அனைவர் உள்ளத்திலும் ஓடிக்கொண்டிருந்தது. அன்று காலை சோதிடம் பார்த்த தேசிகர் அன்றைக்கு மாலையே நல்ல நேரமாக இருப்பதை அறிந்து அன்று மாலை உ.வே.சா கும்பகோணம் புறப்படுவது தான் நல்ல சகுணமாக அமையும் என முடிவெடுத்தார். இவ்வளவு சீக்கிரம் திருமடத்திலிருந்து தான் வெளிவர வேண்டிய நிலை ஏற்படும் என்று உ.வே.சா மனதில் நினைக்காத வேளையில் இது அவருக்கு மிகுந்த வருத்ததை அளித்தது. ஆயினும் பின்னாளில் தேசிகர் எடுத்த இந்த முடிவு தான் அவரை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஒரு தமிழ்த்தாத்தா உருவாக அமைந்த முக்கியக் காரணங்களில் ஒன்றாக அமைந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

உடன் எடுக்கப்பட்ட முடிவு. 
அன்றே உ.வே.சா கும்பகோணம் புறப்படவேண்டும். 
ஆக அவரது புதுப் பணிக்குத் தேவையான ஆடை அணிகலன்களை   திருமடத்திலிருந்து கொண்டு செல்லும் வகையில் உடன் ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார் தேசிகர். 

"மாலையில் சுப்பிரமணிய தேசிகர் கோயிலுக்குப் போய்த் தரிசனம் செய்துவிட்டு மடத்துக்கு வந்து என்னை வரும்படி சொல்லியனுப்பினார். போனேன். “சரியான காலத்தில் நீர் புறப்பட வேண்டும்” என்று அவர் சொல்லி ஒரு மகமல் சட்டை, ஒரு தலைக்குட்டை, ஒரு சின்னச் சட்டை, சரிகை போட்ட பெரிய வெள்ளைத் துப்பட்டா, உயர்ந்த சால்வை ஒன்று ஆகியவற்றை அளித்து, “எல்லாவற்றையும் உபயோகித்துக் கொள்ளும்” என்று அன்பு ததும்பச் சொன்னார். பிறகு, கருங்காலிப் பெரிய கைப்பெட்டி ஒன்று, கை மேஜை ஒன்று, ஒரு சிறிய கைப் பெட்டி, கொழும்பிலிருந்த அடியார் ஒருவர் கொண்டு வந்து கொடுத்திருந்ததும் நாற்பது ரூபா விலையுள்ளதுமாகிய தந்தப் பிடியமைந்த பட்டுக் குடை ஒன்று ஆகியவற்றையும் கொணரச் செய்து ஒவ்வொரு
பெட்டியிலும் ஒவ்வோர் அரைக்கால் ரூபாய் போட்டு எனக்கு வழக்கினார். மெய்க்காட்டு உத்தியோகத்தில் இருந்த ஷண்முகம் பிள்ளை என்பவரை அழைத்து, “நாளைத்தினம் நீர் கும்பகோணத்துக்குப் போய் இவர் காலுக்குப் பாப்பாஸ் ஜோடு வாங்கிக் கொடுத்து இந்தக் குடைக்கு உறையும் போட்டு இன்னும் இவருக்கு என்ன என்ன ஆக வேண்டுமோ அவற்றைச் செய்து விட்டு வாரும்” என்றார்.

என்னைப் பார்த்து, “சாமிநாதையர், நாம் மதுரை கும்பாபிஷேகத்திற்குப் போயிருந்த போது ஒரு மகா சபையில் மணி ஐயரவர்களுக்கு முன்பு வேதநாயம் பிள்ளை பாடலைச் சொல்லி விட்டு ‘இறுமாப்புடைய நடையும் குடையும் என்னிடம் இல்லை’ என்று சொன்னது நினைவில் இருக்கிறதா? அந்தக் குறை இரண்டும் இப்போது தீர்ந்து விட்டன” என்று சொன்னர். நான் வெகு நாளைக்கு முன் சொன்னதை ஞாபகம் வைத்திருந்து தேசிகர் அப்போது செய்ததையும் அவர் அன்பையும் நினைந்து உருகினேன். “இறுமாப்புடைய நடை என்றும் வராது” என்று சொன்னேன்.

“நீர் தியாகராச செட்டியார் ஸ்தானத்தை வகித்து நல்ல புகழ் பெறுவதன்றிச் சென்னைக்கும் சென்று தாண்டவராய முதலியாரும்
மகாலிங்கையரும் விசாகப் பெருமாளையரும் இருந்து விளங்கிய ஸ்தானத்தைப் பெற்று நல்ல கீர்த்தியடைந்து விளங்க வேண்டும்”என்று கூறித் தாம்பூலம் கொடுத்தார். ஒரு தாய் தன் பிள்ளைக்கு உயர்ந்த பதவிகளெல்லாம் கிடைக்க வேண்டுமென்று மனமார நினைந்து வாழ்த்துவதைப் போல இருந்தன அவர் வார்த்தைகள். அந்தப் பேரன்பிலே ஊறியிருந்த போது அதன் முழு அருமையும் எனக்குத் தெரியவில்லை. பிரியப் போகின்றோமென்ற நினைவு வந்ததுந்தான் அதன் அருமை பன்மடங்கு அதிகமாகத் தோற்றியது."

தன் சொந்தப் பிள்ளைகள் அயலகம் செல்வது போல பார்த்துப் பார்த்து ஏற்பாடுகளைச் செய்த சுப்ரமணிய தேசிகரின் அன்பில் உ.வே.சா மட்டும் உறுகினார் என்று சொல்ல முடியாது. இப்பகுதியை வாசிக்கும் வாசகர்களும் இந்த அன்பை கண்டு நெகிழ்ந்து போகாமல் இருக்க முடியாது. 
தான் பெற்றால் தான் பிள்ளையா?

No comments:

Post a Comment