Saturday, August 15, 2015

சாக்ரடீஸ் - ப்ளேட்டோவின் அரசியல் வழி.....! - 7

வாசிப்பின் பகுதி 7

சாக்ரடீஸின் உரையாடல்களின் வழி ப்ளேட்டோ இந்த நூலை வாசிக்கும் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றார். இவருடைய சிந்தனை எந்த விஷயத்தையும் அவை சாதாரண விஷயங்கள் தாம் எனப் புறந்தள்ளி ஒதுக்கி விடாமல், ஒவ்வொன்றிற்கும் மதிப்பளித்து முக்கியத்துவமும் கொடுத்து அதனை அலசுவதாக அமிகின்றது.

அரசியல் தத்துவம் என்பதும், கோட்பாடு என்பனவும் பன்முகத்தன்மையைக் கொண்டிருந்தாலும் அதன் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டியது, ஒரு சாமானிய மனிதரின் நலன் என்ற ஒரு மிக எளிய விசயம்தான். ஒரு தனி மனிதரின் நலன் என்பது அவரது மன நலன் கொண்டிருக்கும் நிலை, அவரது சுற்றுச் சூழல் அமைந்திருக்கும் நிலை, அவர் வாழ்கின்ற நாட்டில் அமைந்திருக்கும் அரசியல் அமைப்பு அமைத்துக் கொடுத்திருக்கும் சமூக நிலை, ஆகியவற்றோடு உடல் ஆரோக்கியத்தையும் சார்ந்ததே.

நோய் என்பது உடலுக்கு வரக்கூடாதது. நமது கட்டுப்பாட்டை மீறி ஒரு நோய் அல்லது விபத்து என்பது ஏற்படுவது என்பது ஒரு விசயம். நமது பழக்க வழக்கங்களால் நாம் உருவாக்கிக் கொள்ளும் நோய் என்பது ஒரு விசயம்.

சிந்தனை சார்ந்த விசயங்களுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை உடல் சார்ந்த விசயங்களுக்கு நாம்  கொடுப்பதை பலர் தவிர்ப்பதுண்டு. உடலுக்குள் என்ன உணவை உட்கொள்கின்றோம் என்ற பிரக்ஞை இல்லாமல், உடலின் தேவையறியாமல் உணவு உட்கொள்ளும் பழக்கத்தைப் பலர் கொண்டிருக்கின்றோம்.  சிலர் உயிர்வாழ்வதற்கு உணவு.. எதை சாப்பிட்டால் என்ன? பசி ஏற்படாமல் வயிறு நிறைந்தால் போதும் என்ற நிலையைக் கொண்டிருப்பர். பல வேளைகளில் பசி என்ற உணர்வு எட்டிப்பார்த்தாலே உடல் நடுங்கிப் போகும் நபர்களும் உண்டு. பசித்து உண்ண வேண்டும் என்ற தன்மையில்லாமல் இயந்திரம் போல கையில் கிடைப்பதையெல்லாம் வாயில் போடுபவர்கள் தங்கள் உடலை மதிக்காதவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

பழகிவிட்டேன்.. தவிர்க்க முடியவில்லை எனச் சொல்லிக் கொண்டு புகைப்பதும், மது அருந்துவதும்.. புதிய புதிய காரணங்களைக் கற்பித்து இப்பழக்கங்களைத் தொடர்வதும் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் நடவடிக்கைகளே.

உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும் போதே  மனம் சீராக பல காரியங்களைச் செய்ய இயலும். உடலில் ஏற்படும் பின்னடைவுகள் நமது நடவடிக்கைகள் சீர்பட நடைபெறுவதை நிச்சயம் பாதிப்புறச் செய்யும். நோயாளிகள் நிறைந்த நாடு என்பது எப்படி இருக்கும்..? அங்கே பேசப்படும் விசயங்கள் எத்தன்மையதானதாக இருக்கும் என்பது  யோசிக்க வேண்டிய ஒரு விசயம். 45 வயதுக்கு மேலாகி விட்டால் மூட்டு வலி, முதுகு வலி, கால்வலி இரத்த அழுத்தம், இனிப்பு நீர் என்பன மட்டுமே நண்பர்கள் அல்லது உறவினர் சந்திப்பில் பேசப்படும் பொருளாக இருந்தால் அங்கே உருவாக்கப்பட்டிருக்கும் உலகம் நோய்வாய்ப்பட்ட உலகமாக, வலுகுறைந்த சமூகத்தின் பிரதிபலிப்பாகவே அமையும். .உடலுக்குப்பயிற்சியும் ஊட்டச் சத்துக்கள் நிறைந்த உணவும் அதை உட்கொள்ளும் அளவு முறையும் முக்கியமானவை.  சாக்ரடீஸ் தன் அரசியல் அமைப்பு சார்ந்த உரையாடலில் உணவு பற்றியும் கலந்துரையாடுகின்றார்.. அதனைப் பார்ப்போம்..

...
சாக்: அப்படியானால், ஆடம்பரமாக உண்பதையும் பலவகை உணவுகள் சாப்பிடுவதையும் நீ சிபார்சு செய்ய மாட்டாயல்லவா?

கிளா: மாட்டேன்

சாக்: ஒரே சமயத்தில் பலவகை சுருதிகளடங்கிய வாத்தியங்களில் சங்கீதம் பயின்றால் அது காதுக்கு எப்படிச் சங்கடமாயிருக்குமோ அது போல் பலவகையான உணவுகளை ஒரே சமயத்தில் தேகத்திற்குள் திணிப்பதும் சங்கடமாயிருக்குமல்லவா?

கிளா: வாஸ்தவம்

சாக்: எப்படி எளிய முறையில் பாடப்படுகிற சங்கீதம் ஆத்மாவுக்கு ஒரு நிதானத்தைக் கொடுக்கிறதோ அதைப் போல் எளிய ஆகாரம் தேகத்திற்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

கிளா: உண்மை

சாக்: ஒருவன், பலவகையான ஆகார வகைகளைச் சாப்பிடுகிறான் என்று சொன்னால் அவன், தன்னடக்கமில்லாதவன், தூர்த்தன் என்றுதானே அர்த்தம்? அப்படிப்பட்டவனிடத்தில் வியாதிகள் உற்பத்தியாவது சகஜந்தானே?

கிளா: ஆம்

சாக்: எந்த ராஜ்யத்து ஜனங்களிடத்தில் தன்னடக்கமின்மையும் வியாதிகளும் மலிந்து  கிடக்கின்றனவோ அந்த ராஜ்யத்தில் நீதி ஸ்தலங்களும், ஆஸ்பத்திரிகளும் எப்பொழுதுமே திறந்து கிடக்குமல்லவா? சுதந்திர புருஷர்களிர் பெரும்பாண்மையோர் சட்டத்திற்கும் வைத்தியத்திற்கும் தாசர்களாகி விடுகிறபோது, அந்தச் சட்டமும், வைத்தியமும் தங்களைப் பற்றிக் கொஞ்சம்  பெருமையாக நினைத்துக் கொள்ளும் தானே?

கிளா: ஆம்
..
...
சாக்: காயமடைந்தாலோ அல்லது தொத்து வியாதிகளுக்கோ வைத்திய சிகிச்சை செய்து கொள்வதில் அர்த்தமிருக்கின்றது. அதை விடுத்து, சோம்பேறித்தனமான வாழ்க்கையை நடத்தியதன் காரணமாகவும், சிற்றின்பங்களிலே அதிகமாக ஈடுபட்டிருந்ததன் காரணமாகவும் தேகமானது அழுக்கு நீர் நிறைந்த  ஒரு கேணி மாதிரியாகிவிட, அதற்குச் சிகிச்சை செய்து கொள்வதில் ஏதேனும் அர்த்தமிருக்கின்றதா? 

வாசிப்பு தொடரும்
சுபா

No comments:

Post a Comment