Saturday, November 10, 2012

டூலிப் வெங்காயங்கள் - அடுத்த வருடத்துக்காக ஆயத்தம்


இன்று என் தோட்டத்திலிருந்து ஏதும் மலர்கள் இங்கே வரப்போவதில்லை. குளிர் காலம் தான் ஆரம்பித்து விட்டதே!

அதிசயம் என்னவென்றால் குளிரிலும் கூட தாக்குப் பிடித்து நிற்கும் பைன் மரங்கள் போல சில செடி வகைகளும் கூட அதிகக் குளிரிலும் பனி கொட்டும் காலத்திலும் கூட விளைகின்றன என்பதே. ஒரு முறை ப்ளேக்ஃபோரெஸ்ட் தெற்குப் பகுதி நகரமான ப்ரைபெர்க் பகுதியில் டிசம்பர் மாதம் ஒரு நடைப்பயணம் மேற்கொண்டோம். அப்போது அங்கே சில வகைச் செடிகள் அந்தக் குளிரிலும் கூட பூத்திருப்பதைப் பார்த்து வியந்தேன். அது தொடங்கி அவ்வகைச் செடிகள் சிலவற்றை குளிர்காலத்துக்கக நான் ப்ரத்தியேகமாக வாங்கி நட்டு வைப்பது உண்டு. ஆனால் இன்றைய பதிவு அதைப் பற்றியல்ல.

கடுமையான குளிர் காலம் நெருங்கும் முன்னதாகவே இங்கே தோட்டத்தை தூய்மை படுத்தி வசந்த காலச் செடிகளின் வருகைக்காக தயார் செய்ய வேண்டியது அவசியம். நான் டூலீப் செடிகளையும் க்ரோக்கெட்ஸ் எனப்படும் செடிகளின் பூக்களையும் விரும்புவதால் அவற்றின் வெங்காயங்களை வாங்கி இலையுதிர் காலத்தில் நட்டு வைப்பது வழக்கம்.



பொதுவாக ஒரு முறை நட்டு விட்டால் அவை வருடா வருடம் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும். ஆனாலும் சில காரணங்களுக்காக கோடை காலத்தில் இந்த வெங்காயங்கள் சேதப்பட்டிருந்தால் இவை மீண்டும் முளைப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால் முடிந்த வரை நான் ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர் காலத்தின் இறுதியில் புதிய டூலிப் வெங்காயங்களை வாங்கி நட்டு வைத்து விடுவேன்.



குளிர் மிக அதிகமாக ஆரம்பிப்பதற்கு முன்னரே இவை நடப்பட வேண்டும். அதனால் மழை நீர் பட்டு வேர்கள் முளைக்க ஆரம்பித்து விடும். குளிர் கடுமையாவதற்கு முன்னர் இலைகளைப் போட்டு மூடி வைத்து விடுவேன். டிசம்பர், ஜனவரி, பெப்ரவரி ஆகிய மூன்று மாதங்களும் இங்கே கடுமையான குளிர் இருக்கும். குளிர் இவற்றை சேதப்படுத்தாமல் இருக்க பஞ்சு போன்று அமையும் இலைகள் உதவுகின்றன.



இந்த வருடம் புதிய கலவை வர்ணங்களில் சில வெங்காயங்களை நட்டு வைத்திருக்கின்றேன். ஏப்ரல் மாத இறுதியில் இவை வளர்ந்து பெரிதாகும் போது இம்மலர்களை பார்த்து ரசிக்கலாம்.

அன்புடன்
சுபா

No comments:

Post a Comment