Sunday, November 18, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 31


பதிவு 31

திருவாவடுதுறை ஆதீனத்தில் பிள்ளையவர்களுக்கு ஏற்பட்ட பிணைப்பின் தொடக்கத்தை முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இந்தப் பதிவில் தொடர்ச்சியாக அவர் வாழ்வில் நடந்த சில குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளைப் பற்றி சொல்வது தொடருக்குப் பயனளிக்கும்  என்று நினைக்கின்றேன்.

பிள்ளையவர்களின் 29வது வயதில் அவருக்கு ஒரு மகன் பிறந்தார். தனதுதந்தையின் பெயரையே அக்குழந்தைக்குச் சூட்டி மகிழ்ந்தார் பிள்ளையவர்கள். இந்தக் குமாரனின் திருமணத்திற்கு உ.வே.சா சென்று வந்தமை பற்றி என் சரித்திரம் நூலில் குறிப்பிடுகின்றார்.

பிள்ளையவர்கள் எப்போதுமே தனக்குக் கிடைக்கும் வருமானத்தையெல்லாம் மாணாக்கர்களைப் பராமரிப்பதற்காகவே பெரும்பாலும் செலவு செய்பவராக இருந்திருக்கின்றார். குடும்பஸ்தராகிவிட்ட இவருக்கு சொந்தமாக ஒரு வீடு கூட இல்லாத நிலையில் அவரது 33-வது வயதில் மலைக்கோட்டை தெற்கு வீதியில் இவருக்கு ஒரு மெத்தை வீடொன்றை அருணாசல முதலியார் வாங்கித் தந்து ஆதரித்திருக்கின்றார். இதனைக் குறிப்பிடும் உ.வே.சா, "திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களென்று உலகமெல்லாம் கொண்டாடும் வண்ணம் செய்தது இந்த அருணாசல முதலியாருடைய உதவியே" என்று குறிப்பிடுகின்றார்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சென்னைக்குச் சென்று அங்கு தமிழ் கற்றோரைச் சென்று சந்தித்து அவர்களுடன் அளவளாவி வரவேண்டும் என்று பெறும் ஆவல் கொண்டிருந்தார். அதற்கும் ஒரு நல்ல வாய்ப்பு அமையவே சென்னைக்குச் சென்று அங்கு சில காலங்கள் தங்கியிருந்து பல தமிழ்க்கல்விமான்களுடன் அளவளாவும் வாய்ப்பும் பெற்று அவர்களுடனான நட்பையும் ஏற்படுத்திக் கொண்டு வந்தார். சென்னையில் இவரைச் சந்தித்த  பலரும் இவரது கல்வி ஞானத்தக் கண்டு வியந்து போற்றி இவரை ஆதரித்தும் வந்தனர். பின்னர் பெங்களூருக்கும் மீண்டும் சென்னைக்கும் சென்று வந்திருக்கின்றார். இததகைய பயணங்களின் போது தமிழ்ச்சங்கங்களின் தலைமைப் பொறுப்பிலிருப்பவர்கள் பல அறிஞர்களுடனான தொடர்பு இவருக்கு ஏற்பட்டமையையும் இந்த மீனாட்சி சுந்தம் பிள்ளை வரலாறு நூலில் விளக்கமாகக் காணமுடிகின்றது.

பிள்ளையவர்களின் சிறந்த கல்வி ஞானத்தைப் போற்றி கௌரவிக்கும் வகையில் சில கல்விமான்களும் செல்வந்தர்களும் அவருக்கு வித்துவான் என்ற பட்டத்தினை வழங்கினர். அது முதல் அவர் வித்துவான் பிள்ளையவர்கள் என்றேஅழைக்கப்பட்டு வரலானார். இந்த  வித்துவான் பட்டம் கிடைக்கப்பட்ட பின்னர் அவர் இயற்றிய நூல்கள்  அனைத்திலும் இவர் பெயருக்கு முன்னால் வித்துவான் என்ற சொல் சேர்ந்திருக்கும். முதலில் அப்படி பெயர் சேர்த்து வெளிவந்தது குசேலோபாக்கியானம் எனும் நூல்.

இவர் சைவ பாரம்பரியத்தைச் சேர்ந்தவராயினும் சிவ தீட்ஷை பெற்று சிவ நாமம் சொல்வதில் மனம் நிறைந்தவராக இருந்து வந்தாலும் பிற சாதியைச் சேர்ந்தோரையும்  பிற மதத்தைச் சேர்ந்தோரையும் போற்றி அரவணைத்து வருவதில் சிறிதளவும் பாரபட்சம் காட்டாதவராகவே திகழ்ந்திருக்கின்றார் என்பதை உ.வே.சா எழுதியிருக்கும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் வரலாறு நூலில் பரவலாகக் காண முடிகின்றது. அதிலும் குறிப்பாக 16ம் அத்தியாவத்தில் மாணவர்கள் வகை என்ற பகுதியில் குறிப்பிடத்தக்க சில விபரங்களை உ.வே.சா எழுதியிருக்கின்றார். உ.வே.சா இப்படிக் குறிப்பிடுகின்றார்.
"இவர் தம்பால் யார் வந்து கேட்பினும் அவர்களுக்குப் பாடஞ் சொல்வார். இவரிடம் படித்தவர்களிற் பல சாதியினரும் பல சமயத்தினரும் உண்டு. பிராமணர்களில் ஸ்மார்த்தர்கள், வைஷ்ணவர்கள், மாத்வர்கள் என்னும் வகுப்பினரும், வேளாளரிற் பல வகுப்பினரும், பிற சாதியினரும், கிறிஸ்தவர்களும், முகம்மதியர்களும் இவர்பாற் பாடங்கேட்டதுண்டு."

அவ்வகையில் குறிப்பிடத்தக்கவர் புதுச்சேரியிலிருந்து வந்து பாடங்கேட்ட சவராயலு நாயகரென்னும் ஒரு கிறிஸ்துவர். இவர் வீரமாமுனிவர் என்று அறியப்படும் பெஸ்கிபாதிரியார் இயற்றிய தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம்பகம் போன்ற கிறிஸ்துவ சமய தமிழ் நூல்களைப் பாடங் கேட்க  விருப்பங்க் கொண்டு பிள்ளையவர்களிடம் வந்தார். பிள்ளையவர்கள் இத்தகைய பிற மத நூல்களைப் பாடம் சொல்லக்கூடாது என்று வாதிட்டவர்களும் அக்காலத்தில் இருந்தனர். ஆனால் அதிலும் இருப்பது தமிழே என அவர்களுக்கு உரைத்து மாணவர்களின் தேவையறிந்து பாடம் சொல்லிக் கொடுத்திருக்கின்றார் பிள்ளையவர்கள். சவராயலு நாயகர் விஷயத்தில் பிள்ளையவர்களும் அவரை பரீட்சித்துவிட்டு மேலும் சில அடிப்படை நூல்களை பாடம் சொல்லி பின்னர் தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம்பகம் இன்னும் சில நூல்களையும் பாடஞ்சொல்லி நன்கு பயிற்சி தந்து அனுப்பி வைத்தாராம்.

தமிழ் உலகம் நன்கறிந்த முன்சீப் வேதநாயகம் பிள்ளையவர்களும் இவரிடம் தாம் படித்து வந்த பல நூற்களுக்கு விளக்கம் கேட்டு தனது ஐயங்களைத் தெளிந்து கொண்டார். பிள்ளையவர்களுடனான நட்பு வேதநாயகம் பிள்ளையவர்களுக்குப் பல காலம் தொடர்ந்தது என்பதையும் குறிப்பிட  வேண்டும்.

தொடரும்....


அன்புடன்
சுபா

No comments:

Post a Comment