Saturday, November 10, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 30




திருவாவடுதுறை ஆதீன வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாடங் கேட்க வந்த உ.வே.சா மாணாக்கராக அவரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விபரங்களைக் கொடுத்து அதன் தொடர்ச்சியாக மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் வாழ்க்கையின் சில பகுதிகளைச் சுருக்கமாக சில பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். அதில் இன்று திருவாவடுதுறை ஆதீனத்துடனான தொடர்பு எவ்வாறு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கு அமைந்தது என்பதை சிறிது கூறலாம் என நினைக்கின்றேன்.

பிள்ளையவர்களின் தந்தையார் சிவபக்தர்; அதே வழியில் சிவபக்தி கொண்டிருந்ததோடு ஆலய தரிசனங்கள் சென்று கண்டு வருவதிலும் மிகுந்த விருப்பம் கொண்டவராக இருந்தார் இவர்.சிவனை தினந்தோரும் நியமங்களின் படி பூஜிக்க விரும்பமும் கொண்டிருந்தார். அதனால் முறையாக தீட்சை பெற மிகுந்த ஆவல் எழுந்தது இவருக்கு. திரிசிரபுரத்திலிருந்தசெட்டிபண்டாரத்தையா என்பவர் தீட்ஷை செய்விக்க அது முதல் பிள்ளையவர்கள் முறையாக சிவபூஜையை செய்து வரலானார். பூஜைகளுடன் நூல்களைப் படித்து இறையுணர்வில் ஆழ்ந்திருப்பத்ல் மிக  விருப்பம் கொண்டவராக இருந்தார்.

அவ்வாறு படித்து வருகையில் திருவாவடுதுறையாதீனத்து வித்துவான் ஸ்ரீ கச்சியப்ப முனிவரால் இயற்றப்பட்ட திருவானைக்காப்புப்ராணம் படிக்கும் வாய்ப்பும் இவருக்குஅமைந்தது. ஏனைய புராணங்களை விட இது முற்றிலும் வேறுபாட்டுடன் அமைந்திருப்பதைக் காணவே அவரது வேறு பிற வேறு நூல்களையும் தேடி வாசிக்கலானார். அதில் அமைந்துள்ள சைவ சித்தாந்த சாஸ்திர கருத்துக்கள் மனதைக் கவரவே மனம் அந்த ஆராய்ச்சியிலேயே சென்று கொண்டிருந்தது. அப்போது அவருக்கு இருபத்தியோரு வயது.

இதன் விளைவாக திருவாவடுதுறை ஆதீனம் செல்ல வேண்டும்; அங்குள்ள தேசிகர்களிடமும் பண்டிதர்களிடமும் பாடங்  கேட்க வேண்டும் என்ற பேராவல் இவருக்கு உருவாயிற்று. தன்னுடைய மாணவர் ஒருவரையும் அழைத்துக் கொண்டு திருவாவடுதுறை ஆதீனத்திற்குப் புறப்பட்டு விட்டார். வழியில் காண்கின்ற தலங்களிலெல்லாம் வழிபாடு செய்து கொண்டே திருவாவடுதுறை ஆதீனம் வந்து சேர்ந்தார். இடையில் பட்டீச்சுரத்திலும் சில நாட்கள் இருக்கும் வாய்ப்பு அமைந்தது.

இந்தப் பயணத்தில் இவர் அறிந்து கொண்ட பட்டீச்சுரத்து நல் உள்ளம் கொண்ட மக்களுடனான தொடர்பு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கு முதுமை காலம் வரை நீடித்தது. இங்கு இருந்த போது பட்டீச்சுரம் ஸ்ரீ தேணுபுரீசுரர் மீது ஒரு அந்தாதியை  இவர் இயற்ற வேண்டும் என்று அன்பர்கள் கேட்டுக் கொள்ள இங்கே பட்டீச்சுரம் ஸ்ரீ தேணுபுரீசுரர் பழசைப் பதிற்றுப் பத்தந்தாதி என்னும் நூலை மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றி அங்கே அறங்கேற்றமும் செய்தார்.

அது சமயம் திருவாவடுதுறை அதீனத்தில்வேளூர் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் அவர்கள் ஆதீனகர்த்தராக இருந்தார். இவரே இந்த மடத்தின் 14ம் பட்டத்து ஆதீனகர்த்தர். தமிழ் வடமொழி இரண்டிலும் தேர்ந்தவர். பிரசங்கம் செய்வதில் சக்தி வாய்ந்தவர் எனவும் பாடஞ் சொல்வதிலும் மிகவும் விருப்பம் உடையவர் என்றும் புகழ்பெற்றவர்.திருவாவடுதுறை மடத்தில் தற்சமயம் வரை சம்பிரதாயமாக கடித முறைகளில் உள்ள சட்ட திட்டங்கள்  அவர் புதுப்பித்து அறிமுகப்படுத்தியவையே. இப்பெரும் தேசிகரைக் காண வேண்டும் என்ற பேராவல் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கு இருந்தது.

ஆதீனத்தை அடைந்து தனது விருப்பத்தை அங்குள்ளோரிடம் தெரிவிக்கவே, தேசிகரை தரிசிக்க இவருக்கு அழைப்பு வந்தது. அவரை கீழே விழுந்து வணங்கி திருநீறு பெற்றுக் கொண்டு அவருக்காக இயற்றி வந்த சில செய்யுட்களையும் வாசித்துக் காட்டினார். அவற்றில் நாட்டம் கொண்ட தேசிகர் இவரது வரலாற்றை விசாரிக்க தன்னைப் பற்றி சுருங்க  விவரித்துக் கொண்டு நூல்களில் தனக்குள்ள ஈடுபாட்டை வெளிப்படித்தினார். தேசிகரும் இவர் நாட்டத்தைப் புரிந்து கொண்டு மடத்தில் இருந்து வர அனுமதி அளித்தார். காலை மாலை தேசிகரை சந்தித்துப்  பாடங் கேட்டு வந்தார் பிள்ளையவர்கள்.  அங்கு சில காலங்கள் இருந்து பின்னர் மீண்டும் திரிசிரபுரம் மீண்டார்.

இப்படித்தான் திருவாவடுதுறை ஆதீனத்தோடு பிள்ளையவர்களுக்குத் தொடர்பு உண்டாகிற்று. இத்தொடர்பு அவர் இறக்கும் தருவாயிலும் இருந்தது என்பதும் அவர் உயிர் பிரிந்ததும் இந்த திருவாவடுதுறை அதீனத்திலேதான் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயங்கள்.

தொடரும்..

குறிப்பு: இப்பதிவில் குறிக்கப்படும் செய்திகள் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் வாழ்க்கை வரலாறு பாகம் 1 நூலில் இருக்கும் விஷயங்களின் அடிப்படையில் எழுதப்படுகின்றது.

No comments:

Post a Comment