Friday, July 18, 2025

கிரேக்க இறுதி ஊர்வலம்

 


கடந்த வாரம் காலமான எனது அண்டை வீட்டுக்காரர் கிரேக்க நண்பரது இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. நானும் சென்று வந்தேன். அது புது அனுபவமாக இருந்தது. 


லியோன்பெர்க் நகருக்கு அருகிலேயே நகருக்கு சற்று வெளியே இருக்கிறது கல்லறை தோட்டம். ஐரோப்பாவில் கல்லறைத் தோட்டம் என்பது பொதுவாகவே விரிவாக மிக அழகாக நேர்த்தியாக ஒரு பூங்காவை போல பாதுகாக்கப்படும் ஓர் இடமாக இருக்கும். அதேபோலத்தான் இந்தக் கல்லறை தோட்டமும். 


கிரேக்க ஆர்த்தோடாக்ஸ் கிருத்துவ முறையில் தான் இந்த இறுதிச் சடங்கு நடைபெற்றது. பொதுவாக இங்கு இறுதிச்சடங்கிற்குச் செல்பவர்கள் முழுமையாக கருப்பு நிற உடை அணிந்து செல்வது வழக்கம். கையில் வெள்ளை நிற ரோஜாப்பூ அல்லது வெள்ளை நிறத்தில்  ஏதாவது மலர்களைக் கொண்டு செல்வதும் வழக்கம். நானும் வெள்ளை ரோஜாக்களை வாங்கிக் கொண்டு சென்றிருந்தேன். 

நிகழ்ச்சி தொடங்கியவுடன் முழுமையும் கருப்பு உடையில் மேல் சட்டை பாவாடை போன்ற ஓர் உடை அணிந்து பாதிரியார் வழிபாட்டு பாடல்களைப் பாடத் தொடங்கினார். சவப்பெட்டி அருகில் வைக்கப்பட்டிருந்தது. 


கல்லறைத் தோட்டத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. ஒரு பக்கம் முழுவதும் உறவினர்கள் மறுபுறம் நண்பர்கள் என்ற வகையில் பிரித்து வைத்திருந்தார்கள். 


வந்திருந்தவர்களில் ஏறக்குறைய 80 விழுக்காட்டினர் கிரேக்கர்கள். ஏனையோர் ஜெர்மானியர், மற்ற பிற இனத்தவர்கள். 


45 நிமிடம் வாழ்த்து துதி பாடல்களைப் பாடி முடித்த பின்னர் சவப்பெட்டியை ராஜ மரியாதை போல ஆறு பேர் கொண்ட குழு சிறிய தேர் போன்ற  கையால் இழுத்துச் செல்லும் வண்டி ஒன்றில் வைத்து கல்லறை தோட்டத்தில் இழுத்துச் சென்றது. அவர்களும் தொப்பியும் கருப்பு நிற கோட்டும் சூட்டும் என அணிந்திருந்தார்கள். கல்லறைத் தோட்டம் மிகப்பெரியது என்பது நடந்து சென்ற போதுதான் தெரிந்தது. 

ஏறக்குறைய 10 நிமிடம் நடந்த பிறகு அவருக்கென்று வாங்கப்பட்ட ஒரு பகுதி இருந்தது. அப்பகுதி ஏற்கனவே நீள் சதுர வடிவில் வெட்டப்பட்டு குழி தோண்டப்பட்டு கருப்பு நிறத்தாலான ஒருவகை துணியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 


பொதுவாக ஜெர்மனிய இறுதிச் சடங்குகளில் யாரும் அழுவதில்லை. கண்ணீர் வந்தாலும் மெதுவாக அதனை துடைத்துக் கொண்டு அமைதியாக இருப்பது வழக்கம். ஆனால் இந்த நிகழ்ச்சியில் இரண்டு பெண்மணிகள் மட்டும் மனைவியும் மகளும் மட்டும் கதறி அழுதார்கள்.


அந்தப் பகுதிக்கு வந்த பின்னரும் மீண்டும் பாதிரியார் கிரேக்க மொழியில் அமைந்த துதி பாடல்களைப் பாடத் தொடங்கினார்.


சவப்பெட்டியை குழிக்குள் செலுத்தி அதனை நேராக வைத்தார்கள்.

அதன் பின்னர் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக கையில் வைத்திருந்த மலரை குழிக்குள் போட்டுவிட்டு வாளியில் ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டிருந்த மண்ணை அதில் இருந்த ஒரு கரண்டியால் எடுத்து அந்த சவப்பெட்டி மேல் தூவினார்கள். வரிசையில் நானும் நின்று எனது மரியாதையையும் செலுத்தினேன். 


இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வந்திருந்தோருக்கு சிறிய தேநீர் விருந்து ஒன்றும் அங்கு ஏற்பாடாகியிருந்தது.  முதல் முறையாக ஒரு கிரேக்க இறுதி ஊர்வலத்தை நேரில் பார்த்த ஓர் அனுபவம் இது. 


இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள ஏறக்குறைய 200 பேர் வந்திருந்தார்கள். ஆனால் ஒருவர் கூட தங்களது செல்போனை எடுத்து புகைப்படம் ஒன்றும் எடுக்கவில்லை. 

  

ஒரு மனிதரின் இறுதிச்சடங்கு என்பது இயற்கையோடு அவர் இணைந்து கொள்வதற்கான ஒரு நிகழ்வு என்பதை இந்த நிகழ்ச்சி நேரில் உணர்த்தியது. உறவினர்களும் நண்பர்களும் சோகத்தோடு விடை கொடுத்தார்கள். அதில் போலி பந்தாக்கள் பெருமைகள் என்பதற்கெல்லாம் இடமில்லாமல் இறந்து போனவருக்கு மரியாதை செலுத்தி அவரை முறையாக மரியாதையுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது.


-சுபா

18.7.2025

Saturday, July 12, 2025

ஃப்ராங்பர்ட் இந்திய தூதரகத்தில்

 ஜெர்மனியில் உள்ள ஃப்ராங்பர்ட் இந்திய தூதரகத்தில் கோன்சுலேட் ஜெனரல் திரு முபாரக் அவர்களுடன் ஜெர்மனி தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினரின் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. நமது பதிப்பகத்தின் வெளியீடான "மக்கள் வரலாறு தொகுதி 1" நூலை அன்பளிப்பு செய்தோம்.
















Friday, July 11, 2025

எளிய இனிய திருமணம்

 என் இனிய தோழி கட்டலினாவுக்குத் திருமணம் லியோன்பெர்க் கிராமத்து நகரான்மைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.



ஏறக்குறைய 20 பேர் கலந்து கொண்ட எளிமையான அழகான ஒரு நிகழ்ச்சியாக இது அமைந்தது. கட்டலினாவின் இரண்டு குழந்தைகளும் வளர்ந்தவர்கள். பொறியியலாளராகவும், ரியல் எஸ்டேட் நிபுணராகவும் இருவரும் பணிபுரிகிறார்கள். குழந்தைகளும் அவர்களது வாழ்க்கைத் துணையும் மற்றும் கட்டலினா- ஃபிராங்க் இருவரின் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்ட நிகழ்வாக இது அமைந்தது.

 

வாழ்க்கையில் இணையர் இருவரும் தோழர்களாகவும் ஒருவருக்கு ஒருவர் அன்புடனும் பாசத்துடனும் வாழ்க்கை பயணத்தை கொண்டு செல்ல வேண்டும் என்றும், இந்த நிகழ்ச்சியில் திருமணத்தை நிகழ்த்தி வைத்த நகரான்மை கழக அதிகாரி சிறிய உரையை ஆற்றி தம்பதியர் தங்கள் ஒப்புதலை கொடுத்து கையப்பமிட்டு பின்னர் மோதிரங்களை மாற்றிக்கொண்டனர்.


மகிழ்ச்சியான, அதே வேளை எளிமையான திருமணமா






க மதிய உணவு விருந்தோடு இத்திருமண விழா நடைபெற்ற முடிந்தது.  நானும் இணையர்களை வாழ்த்தி பரிசளித்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டேன்.



Tuesday, July 8, 2025

அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் திரைப்படங்களில் வில்லன்கள்


 

அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் திரைப்படங்களில் வில்லன்களாகக் காட்ட வேண்டும் என்றால் ரஷ்யா தான் பின்னணியில் அனைத்து வில்லங்கமான விஷயங்களையும் செய்வதாக திரைப்படத்தை அமைப்பார்கள்.

இதில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் வந்து சீனாவையும் வில்லனாக இணைத்துக் கொள்ளும் போக்கு அமெரிக்க பிரிட்டிஷ் திரைப்படங்களில் தொடங்கியது. தற்சமயம் இந்த ட்ரெண்ட் வலுவாக உருவாகி வருகிறது.
Red Eye என்ற பெயரில் netflix series ஒன்று அண்மையில் பார்த்தேன். அதில் சீனாகாரர்களை வில்லன்களாக சித்தரித்து படம் முழுக்க ஓட்டிவிட்டு இறுதியில் கதையை மாற்றி வேறு வகையாக முடித்து விட்டார்கள்.
அமெரிக்க பிரிட்டிஷ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் மட்டுமே திரைப்படங்களில் நல்லவர்கள் வல்லவர்கள். 🙂
இந்தப் புகைப்படத்திற்கும் இந்த சிந்தனைக்கும் என்ன தொடர்பு என்று யோசிக்கிறீர்களா.. ஒன்றுமில்லை. 🙂
சென்ற வார இறுதியில் Schwabisch Hall நகரில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம். அவ்வளவு தான்.
-சுபா

Wednesday, April 23, 2025

உலக புத்தக நாள் வாழ்த்துக்கள்



எனது குழந்தை பருவத்தை விட இந்தக் காலகட்டத்தில் ஏராளமான நல்ல நூல்கள் என்னைச் சுற்றி இருப்பதாக நான் உணர்கிறேன். நான் மட்டும்தான் இப்படி நினைக்கின்றேனா அல்லது நீங்கள் எல்லோருமே என்னை போலத்தான் நினைக்கின்றீர்களா என்று தெரியவில்லை.

நூல்களைக் கடைகளில் பார்ப்பதும், நேரம் எடுத்து அவற்றை தேடி வாங்கிக் கொள்வதும் எனக்கு பெரு மகிழ்ச்சி அளிக்கும் விஷயங்கள்.

வாங்கி வீட்டிற்குக் கொண்டு வரும் நூல்களை அவை வரலாற்று நூல்களா, பண்பாட்டு நூல்களா, தொல்லியல் நூல்களா, தலைவர்கள் நாடுகள் நகரங்கள் பற்றிய நூல்களா? என தரம் பிரித்து அடுக்கி வைத்து அடுக்கிய அலமாரியில் அவை அழகாகக் காட்சியளிப்பதைப் பார்ப்பதும் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் தருணங்கள். 

இவை எல்லாவற்றையும் விட ஒரு ஓய்வு நாளில் மனதிற்கு பிடித்த ஒரு நூலை எடுத்து பக்கத்தில் அருமையான ஒரு காபியை வைத்துக் கொண்டு நூலை படிப்பதும், நூலில் உள்ள முக்கிய இடங்களைக் கோடிட்டு குறிப்பு எடுத்துக் கொள்வதும் மிகப்பெரிய மகிழ்ச்சி. 

இந்த ஆண்டு தொடக்க முதல் கடந்த நான்கு மாதங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நூல்கள் வாங்கி இருக்கின்றேன். அவற்றில் சிலவற்றை படித்து முடித்திருக்கின்றேன். சிலவற்றைப் பற்றி சிறிய அறிமுகமும் திறனாய்வும் எழுதி இருக்கின்றேன்.

ஒவ்வொரு நூலும் தெளிவில்லாத பகுதிகளுக்கு எனக்குத் தெளிவை அளிக்கின்றன.. அறிந்திராத விஷயங்களை அறிய வைக்கின்றன.. 

உலகை நான் காண்கின்ற பார்வையை எனக்கு மேலும் தெளிவாக்குகின்றன. 

வாசித்து மகிழுங்கள்! 

-சுபா

23.4.2025

Tuesday, April 22, 2025

அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட குதிரை எலும்புக்கூடுகள்

 


ஜெர்மனியின் பாடன்-வூர்ட்டம்பேர்க் மாநில   வரலாற்றுச் சின்ன  பாதுகாப்புக்கான  அலுவலகத்தின் செய்தி  ஒன்று  அண்மையில் இங்கு பாட்கான்ஸ்டாட் பகுதியில் நிகழ்த்தப்பட்ட ஒரு அகழாய்வில்  ஒரு ரோமானிய கோட்டை இருந்த இடத்திற்கு அருகில்  100க்கும் மேற்பட்ட குதிரைகளின் எலும்புக்கூடுகளைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

அகழாய்வு செய்யப்படும் இடங்களில்  மனித எலும்புக்கூடுகளோடு விலங்குகளின் எச்சங்களும் கிடைப்பது வழக்கம். அவ்வகையில் ஒரு ஆச்சரியமான கண்டுபிடிப்பு சில நாட்களுக்கு முன் நடந்துள்ளது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் நான் வசிக்கின்ற லியோன்பெர்க் பகுதியிலிருந்து இந்த இடம் ஏறக்குறைய 25 கிமீ தூரத்தில் இருக்கின்றது. பாட் கான்ஸ்டாட் நகரில், மக்கள் வாழ்விடப் பகுதியில் இது Düsseldorfer Straße ,  Bottroper Straße இரண்டு சாலைகள் சந்திக்கும் பகுதியில் இந்த அகழாய்வு நிகழ்த்தப்பட்டுள்ளது.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் ஒரு கோட்டையில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 500 குதிரைவீரர்களைக் கொண்ட ரோமானிய குதிரைப்படைப் பிரிவைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.   இந்தக் குதிரை எலும்புக்கூடுகள்  அவை ஒரு போரிலோ அல்லது இராணுவ தாக்குதலில் உயிரிழந்ததற்கான எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை.  மாறாக  ஏதாவது ஒரு வகை நோய் அல்லது முதுமையால் இறந்திருக்கலாம்.  மேலும் ஆய்வுகள் இதனை உறுதிபடுத்த வேண்டும்.

இங்கு கிடைத்த பெரும்பாலான குதிரை எலும்புக்கூடுகள்  சாதாரணமாக புதைக்கப்பட்டுள்ளன.  அதில் ஒரு குதிரையின் எலும்புக்கூடு மட்டும் தனிச்சிறப்புடன் புதைக்கப்பட்டுள்ளது.  மனிதர்களைப் புதைக்கும் போது கல்லறை வழிபாட்டுப்  பொருட்கள் வைக்கப்படுவது ரோமானிய பண்டைய கல்லறைகளில் கிடைத்துள்ளன. அதே போல இந்த ஒரு குதிரையின் அருகில்  இரண்டு குடங்களும் ஒரு எண்ணெய் விளக்கும்   வைத்து   அலங்கரிக்கப்பட்டுள்ளது.  இக்குதிரை ஒரு முக்கிய ரோமானிய  படைத்தளபதி அல்லது தலைவனின் குதிரையாக இருந்திருக்கலாம்.

கூடுதல் தகவல்கள்:

https://rp.baden-wuerttemberg.de/rps/presse/artikel/letzte-ruhe-fuer-roms-reittiere-groesster-roemerzeitliche-pferdefriedhof-sueddeutschlands-in-stuttgart-bad-cannstatt-entdeckt/

Wednesday, April 9, 2025

The Knights Templar நூல் விமர்சனம் - பகுதி 2

 


நம்பிக்கைகள் மனிதர்களை அசாத்தியமான பல காரியங்களை நிகழ்த்த வைத்திருக்கின்றன. நம்பிக்கைகளுக்காகத் தங்கள் உயிரையும் பணயம் வைக்கும் மனிதர்கள் இருக்கின்றார்கள். தாம் பின்பற்றுகின்ற சமய நம்பிக்கைக்காக தனது உயிரையும், தங்கள் வாழ்நாளையும் அர்ப்பணிக்கின்ற ஆழமான உறுதியான எண்ணத்துடன் வாழ்கின்ற மனிதர்களும் இருக்கின்றார்கள். அத்தகைய மனிதர்களைப் பற்றி உலக வரலாறு பல தகவல்களைப் பதிவு செய்துள்ளது. அந்த வகையில் ஐரோப்பிய வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்ற குழுவினராகக் கருதப்படுபவர்கள் தி நைட் டெம்ப்ளர்ஸ் (The Knight Templars ).
புகழ்பெற்ற கதாசிரியர் டான் பிரவுன் அவர்களது டாவின்சி கோட் நாவல் வெளிவந்த பிறகு இந்த நைட் டெம்ப்ளர் என்று அழைக்கப்படுகின்ற குழுவினரைப் பற்றிய பேச்சுக்களும் கலந்துரையாடல்களும் பரவலாக எழுந்தன. டான் பிரவுன் அவர்களது அடுத்தடுத்த நாவல்கள் ஒவ்வொன்றும் இவர்கள் பற்றியும் இவர்கள் வரலாற்றில் பெற்ற முக்கியத்துவம் பற்றியும், அதன் பின்னர் அவர்களது வீழ்ச்சி, அவ்வீழ்ச்சிக்கு பின்னர் எவ்வாறு இன்றும் இவர்களது ஆளுமை மறைமுகமாக உலகின் வல்லரசு நாடுகளில் தொடர்கின்றது என்ற வகையிலும் அமைந்தன.
ஒரு வரலாற்றுச் செய்தியைப் புராணக் கதைகள் மழுங்கடிக்கச் செய்ய முடியும். அதே நிலை தான் நைட் டெம்ப்ளர் என அழைக்கப்படுகின்ற இந்த போர் வீரர்களுக்கும் நடந்தது எனலாம். அந்தப் புராணக் கதைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு வரலாறு இவர்களைப் பற்றி என்ன சொல்கின்றது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எனக்கு நெடு நாளாக இருந்தது.
அண்மையில் எனது இங்கிலாந்துக்கான பயணத்தின் போது இப்போர் வீரர்களின் மையங்களாக இங்கிலாந்தில் இருக்கின்ற இரண்டு பகுதிகளுக்கு நேரில் சென்று வந்தேன். அதில் ஒன்று இங்கிலாந்தின் தென்கிழக்கு நகரமான டோவர் நகரில் அமைந்திருக்கின்ற நைட் டெம்ப்ளர்ஸ்களது சிதைந்த ஒரு ஆலயத்தின் தரைத்தளப் பகுதி. இது என்று பாதுகாக்கப்படுகின்ற ஒரு வரலாற்றுச் சின்னமாக அமைந்திருக்கின்றது என்பதோடு இதற்கு அருகாமையில் உள்ள சில பகுதிகள் பொதுமக்கள் செல்ல முடியாத, தனியாருக்குச் சொந்தமான இடங்களாக அமைந்திருக்கின்றன. இவர்களைப் பற்றி பேச தொடங்கினாலே ரகசியங்களும் மர்மங்களும் இவர்கள் வரலாற்றோடு இணைந்து வருகின்றன என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
அதற்கு அடுத்ததாக, இன்று நைட் டெம்ப்ளர் என்று சொல்லப்படுகின்ற இந்தப் போர் வீரர்களுக்கு மையமாக அமைந்திருக்கின்ற லண்டன் மாநகரில் இருக்கின்ற டெம்பிள் சர்ச் என்ற ஒரு தேவாலயம். இந்த தேவாலயம் ஒரு ரகசிய அமைப்பு போல இயங்கிக் கொண்டிருக்கின்றது என்றாலும் பொதுமக்கள் இதன் உள்ளே வந்து இங்குள்ள அனைத்து பகுதிகளையும் சுற்றிப் பார்த்து செல்லக்கூடிய வகையில் இத்தேவாலயம் அமைந்திருக்கின்றது என்பது சிறப்பு. இன்று ஐரோப்பாவின் ஸ்பெயின், அயர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, போலந்து, போர்த்துகள்இத்தாலி, கிரேக்கம், சைப்ரஸ், கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பல நாடுகள், எகிப்து, ஜெருசலம் என பல பகுதிகளில் விரிவடைந்து இருந்தாலும் கூட, இவர்களின் மையமாகத் திகழ்வது இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருக்கின்ற இந்த டெம்பிள் சர்ச் தேவாலயம் தான்.
இந்த நைட் டெம்ப்ளர் போர் வீரர்களுக்கு தலைவராக இருப்பவர் கிராண்ட் மாஸ்டர் என அழைக்கப்படுகின்றார். தற்பொழுது கிராண்ட் மாஸ்டராக பொறுப்பில் இருக்கும் Robin Griffith-Jones எழுதிய The Knights Templar என்ற நூலை அதே தேவாலயத்தில் வாங்கினேன். இந்த நூல் கூறுகின்ற செய்திகளை இனி காண்போம்.

இந்த நூலின் அத்தியாயம் நைட் டெம்ப்ளர் எனப்படுபவர்கள் யார்? என்ற விளக்கத்தோடு தொடங்குகின்றது. சிலுவைப்போர்கள், சகோதரத்துவ செயல்பாடுகள், புனிதப் பயணிகள், லண்டனில் அமைக்கப்பட்ட புதிய கோயில், டெம்ப்ளர்களும் புனித கோப்பையும், அவர்களது வீழ்ச்சி, தற்போதைய நிலை என்ற வகையில் நூலின் ஏனைய பக்கங்கள் அமைந்துள்ளன.

இடைக்கால ஐரோப்பாவின் மிகப் புகழ்பெற்ற ராணுவ அமைப்பு தான் இது. ஐரோப்பாவின் கிறிஸ்துவ மன்னர்களும் மாவீரர்களும் புனித நகரமான ஜெருசலேமில் ஏசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்ட இடத்தை கிறிஸ்தவர்களுக்காக மீட்டெடுக்கவும், 'கடவுளின் திருச்சபையை விடுவிக்கவும்' போப்பாண்டவர் அர்பன் IIவிடுத்த அழைப்பிலிருந்து டெம்ப்லர்கள் உருவானார்கள்.
சிலுவைப்போர் ஐரோப்பிய வரலாற்றை புரட்டிப்போட்ட ஒரு வரலாற்று நிகழ்வு. டெம்ப்லர்களின் வரலாறு முதல் சிலுவைப் போரில் தொடங்கியது, 1096 முதல் 1291 வரை நைட் டெம்ப்ளர் ராணுவம் மிகப்பெரிய அளவிலான சிலுவைப் போர்களையும் சிறிய அளவிலான போர்களையும் நிகழ்த்தின. புனித குன்றான சாலமன் கோயில் இருக்கும் இடத்தை இஸ்லாமிய அரேபியர்களிடம் இருந்து மீட்டெடுத்து கிறிஸ்தவ ஆதிக்கத்தை நிலை நாட்டுவது இதன் அடிப்படை நோக்கமாக இருந்தது. அதற்காக நிகழ்த்தப்பட்ட ஏறக்குறைய 200 ஆண்டுகள் காலவாக்கிலான போரில் ஆயிரக்கணக்கானோர் மாண்டனர். இப்பகுதியே ரத்த வெள்ளத்தில் மூழ்கியது என்பது வரலாற்றில் அழிக்க முடியாத சான்று. அது இன்றும் தொடர்கின்றது மற்றொரு வடிவில் என்பது நிகழ்கால அரசியல்!
இன்றைய ஜெருசலேம் நிலப்பகுதியில் அமைந்திருக்கின்ற சாலமன் கோயிலுக்குப் புனித பயணம் செல்வது கிறிஸ்தவ மத நம்பிக்கையைக் கடைப்பிடிப்பவர்களின் தலையாய நோக்கமாக இருந்தது. ஆகவே அயர்லாந்து இங்கிலாந்து தொடங்கி ஐரோப்பாவின் பல பகுதிகளில் வாழ்கின்ற கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றியவர்கள் பாதயாத்திரையாக இப்புனித தலத்தை நோக்கி வருவது முக்கிய நிகழ்வாக அமைந்திருந்தது.
பாதுகாப்பற்ற, மிகவும் கடினமான பயணத்தைக் கொண்டதான இப்புனித பயணத்தை நிகழ்த்த விரும்புவர்களுக்குப் பாதுகாப்பை வழங்கும் ராணுவமாகவும் உணவு, தங்கும் வசதி ஏற்பாடுகளைக் கவனிப்பதற்கும் அதற்கு தேவைப்படும் பொருளாதார தேவைகளை வங்கி போல நிர்வகித்து புனித யாத்திரை செல்பவர்களுக்கு உதவுவது இவர்களின் மைய நோக்கமாக இருந்தது.
தொடக்கத்தில் மிக எளிய வறுமை நிறைந்த புனித யாத்திரை செய்வோருக்கான பாதுகாவலர்களாக அறியப்பட்ட இவர்கள் படிப்படியாக பலம் பொருந்திய, ஏராளமான சொத்துகளுக்கு உரிமை கொண்டவர்களாக வளர்ச்சி கண்டனர். இன்று நமக்கு நன்கு பரிச்சயமான பாண்டு பத்திரம், அனைத்துலக வங்கி நிர்வாகம் ஆகியவற்றிற்குத் தொடக்கப் புள்ளியாக இவர்களது செயல்பாடுகள் அமைந்தன என்றால் அதனை மறுக்க முடியாது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய பணக்காரர்களாக வளர்ச்சி கண்ட இவர்கள் சைப்ரஸ் தீவையும் வாங்கி அங்கு நைட் டெம்ப்ளர் தலைமையகத்தைக் கட்டினார்கள். மெடிட்டரேனியன் கடலில் மிக முக்கியமான நிலப்பகுதியில் சைப்ரஸ் தீவு அமைந்திருக்கின்றது என்பதே இதற்குக் காரணம்.
அயர்லாந்து இங்கிலாந்து தொடங்கி பிரான்ஸ் ஸ்பெயின் இத்தாலி ஜெர்மனி கிரேக்கம் என பல நாடுகளைக் கடந்து வருகின்ற பாத யாத்திரிகர்கள் ஜெருசலேம் வரை வரும் போது அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு சைப்ரஸ் தீவில் அமைந்திருக்கும் தலைமை மையம் அமைந்தது இலகுவாக அமைந்தது.
கத்தோலிக்க தலைமை மையமான வாத்திக்கனில் தலைமை குருவான போப்பின் ஆதரவும் இவர்களுக்குத் தொடக்கத்தில் இருந்தது.
இந்த நூல் இப்போர் வீரர்கள் எப்போது எதற்காக உருவானார்கள்? இவர்களுக்கு ஜெருசலேம் மன்னரின் ஆதரவு எப்படி கிட்டியது? கத்தோலிக்க மத குருவின் ஆதரவு எப்படி கிட்டியது? அடுத்தடுத்து நடந்த சிலுவைப் போர்கள் போன்ற பல்வேறு தகவல்களை ஆண்டு வரிசையில் தெளிவாக எளிதாக விளக்குகின்றது.
டான் பிரவுனின் டா வின்சி கோட் நாவலில் குறிப்பிடப்படுகின்ற முக்கிய காரணமாக அமைவது நைட் டெம்பர் குழுவினரும் அவர்களின் தலைவரான கிராண்ட் மாஸ்டரும் போற்றி பாதுகாப்பது இயேசு கிறிஸ்துவின் ரத்த சம்பந்தத்திலான வாரிசுகளின் பாதுகாப்பு என்பதாக அமையும். ஆனால் இந்த நூலில் இது குறிப்பிடப்படவில்லை.
Holy grail அதாவது, புனித பாத்திரம் எனக் குறிப்பிடப்படுவது உண்மையிலேயே வைன் வைக்கப்பட்டிருந்த இயேசு கிறிஸ்து இறுதியாக அருந்திய வைன் நிறைந்த பாத்திரமா அல்லது அவர் சிலுவையில் அறையப்பட்டபோது அவரது உடலிலிருந்து வடிந்த ரத்தத்தைப் பிடிக்கப் பயன்படுத்திய கிண்ணத்தையா அல்லது வேறு ஏதேனும் மறைப்பொருளையா என்பது மர்மமாகவும் குழப்பமாக இருக்கின்றது என இந்த நூலின் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
இந்த நூலின் ஆசிரியர் நைட் டெம்ப்ளர் அமைப்பின் தற்போதைய கிரான்ட் மாஸ்டர் என்பதை நாம் மீண்டும் மனதில் கொள்ள வேண்டும். புனித பாத்திரத்தைப் பற்றி அவரது கருத்தாக அமைவது டான் பிரவுனின் நாவல் குறிப்பிடுகின்ற தகவலுக்கு மாறாகவும் அதே வேளை அது இல்லை என்பதை மறுக்காமல் அது மர்மமும் குழப்பமும் நிறைந்தது என்றும் கூறி முடிந்து விடுகின்றது. ஆக இதுவே மர்மமாகத்தான் இருக்கின்றது.
ஐரோப்பாவின் மிகப் புகழ்பெற்ற ராணுவ அமைப்பாக திகழ்ந்த நைட் டெம்ப்ளர் குழுவினர் 14ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய அழிவைச் சந்தித்தனர். பிரான்ஸ் மன்னன் நான்காம் பிலிப்ஸ் டெம்ப்ளர்ஸ் மீது பல்வேறு குற்றங்களைச் சுமத்தி அவர்களைப் பிடித்து கொலை செய்த நிகழ்வுகள் வரலாற்றின் இருண்ட பக்கங்கள். பிரான்ஸ் மன்னனின் சூழ்ச்சிக்கு வாத்திக்கணும் ஒத்துழைத்தது என்பது கூடுதல் அழுத்தத்தை இந்த அமைப்பிற்கு வழங்கியது.
அக்கால கட்டத்தில் ஐரோப்பா முழுவதும் இயங்கி வந்த நைட் டெம்ப்ளர் ராணுவ வீரர்களை பிரான்ஸ் மன்னனின் குழுவினர் சிறைபிடித்து அவர்களை ஒப்புதல் வாக்குமூலம் வழங்கச் செய்து பிறகு கொன்று குவித்தனர். அப்போது கொலையுண்டவர்களில் அன்றைய கிராண்ட் மாஸ்டர் ஜேக்கஸ் டி மோலெ அவர்களும் அடங்குவார்.
நைட் டெம்பள்ர் குழுவினர் 14ஆம் நூ தொடக்கத்தில் தேடித் தேடி கொல்லப்பட்டதன் காரணமாக அவர்களில் தப்பியவர்கள் ரகசியமாக தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தனர். போர்த்துகல் மன்னர் வெளிப்படையாகவே இப்படி தப்பித்தவர்களைப் பாதுகாக்க அழைப்பு விடுத்தார். அதன் பின்னர் மறைமுகமான வாழ்க்கையை இவர்கள் தொடர்ந்தனர். பலர் ஐரோப்பா மட்டுமன்றி அமெரிக்காவிற்கும் புலம்பெயர்ந்தனர். அவர்களது தொடர்பு தொடர்ந்தது.
இன்று லண்டன் டெம்பிள் சர்ச் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு சின்னமாக திகழ்கின்றது என்றாலும் அதன் பின்னணியில் எவ்வகை செயல்பாடுகள் நிகழ்கின்றன என்பது மறைவாகத்தான் உள்ளது.