Wednesday, May 30, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 4


பகுதி 4

இசையுடன் தமிழ் செய்யுட்களைப் பாடி திருவாவடுதுரை ஆதீனகர்த்தரின் அன்பைப் பெற்றவர் உ.வே.சா அவர்கள். தமிழ் கற்க அவருக்கிருந்த ஆர்வம் அளப்பறியது. சங்கீதம் பயிற்சி என்பது இடையில் தடைபட்டாலும் பாரம்பரியமாகக் கற்ற இசை அவரது தமிழ்ப்பணிக்கு மெருகூட்டியது என்பதை என் சரித்திரம் நூலில் பல இடங்களில் வாசகர்கள் உணர முடியும். நந்தனார் சரித்திர கீர்த்தனம் இயற்றிய கோபால கிருஷ்ண பாரதியாரிடமும் ஒரு சில சமயம் இவர் பாடம் படித்திருக்கின்றார்.

இப்படி சங்கீதத்தில் நாட்டம் என்பது இவருக்கு தந்தையின் தாக்கத்தால் ஏற்பட்டது என்று சொன்னால் மிகையாகாது. வேங்கட சுப்பையர் கனம் கிருஷ்ணையரிடத்தில் பாடம் கேட்டவர். ஆக கனம் கிருஷ்ணைய்யரைப் பற்றிய சிறு குறிப்பும் வழங்குவது தேவை என்று நான் கருதுவதால் அவரைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

கனம் கிருஷ்ணையரைப் நமக்கு அறிமுகம் செய்யும் போது "சென்ற நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இருந்த புகழ் பெற்ற சங்கீத வித்துவான்களுள் ஒருவர்"  என்றே உ.வே.சா குறிப்பிடுகின்றார். இவர் தந்தை வழி சொந்தமும் கூட என்பதை 2ம் பகுதியில் குறிப்பிட்டிருந்தேன்.

கனம் கிருஷ்ணையர் சங்கீத பரம்பரையில் பிறந்தவர். தன் தந்தையாரிடமும் அப்பால் தஞ்சாவூர் சமஸ்தான சங்கீத வித்வானாக இருந்த பச்சைமிரியன் ஆதிப்பையரிடமும் சங்கீத பயிற்சி பெற்று பின்னர் சமஸ்தானத்து சங்கீத வித்வானாக ஆனார். தமிழ்நாட்டில் கன மார்க்கம் வழக்கத்தில் இல்லாத காலம் அது.அப்போது பொப்பிலி சமஸ்தானத்தைச் சேர்ந்த கேசவையா என்ற சங்கீத வித்வான் தஞ்சாவூர் சமஸ்தானத்துக்கு வந்து கன மார்க்கத்தைப் பாடிக் காட்ட அந்த இசையில் மயங்கிய அரசர் "இந்த வித்துவானுடைய உதவியால் யாரேனும் இந்தக் கனமார்க்க சங்கீத கலையைக் கற்றுக் கொண்டு வருகின்றீர்களா" எனக் கேட்க, கிருஷ்ணையர் தான் இந்தப் பய்ற்சி மேற்கொள்வதாகச் சொல்லி கபிஸ்தலமென்னும் ஊருக்குச் சென்று அங்கே இராமபத்திர மூப்பனாரென்னும் செல்வந்தர் ஒருவருடைய ஆதரவில் பொப்பிலி கேசவையாவிடம் கன மார்க்க சங்கீதத்தின் இயல்புகளைக் கற்றுக் கொண்டார். பின்னர் தஞ்சை சமஸ்தானம் திரும்பி அரசரின் அவையில் பாடிக்காட்ட அன்றிலிருந்து அவருக்கு கனம் கிருஷ்ணையர் என்ற பெயர் அமைந்தது.


கோபால கிருஷ்ண பாரதியாரும் கனம் கிருஷ்ணையரிடம் சில கீர்த்தனைகளைக் கற்றுக் கொண்டிருக்கின்றார் என்ற செய்தியையும் தெரிந்து கொள்ள முடிகின்றது.

கன மார்க்க சங்கீதத்தைப் பயிற்சி செய்ய நல்ல உடல் பலமும் தேக ஆரோக்கியமும் முக்கியமாம். தன் மகன் வேங்கட சுப்பையரை தனது தமையனார் கனம் கிருணையரிடம் செல்லத்தம்மாள் ஒப்படைத்தபோது வேங்கட சுப்பைய்யர் மிக மெலிந்ததேகத்தோடு இருந்ததாகவும் "இவனுக்கு புஷ்டி போதாது. நன்றாகச் சாப்பிட வேண்டும், உடம்பு வளைந்து வேலை செய்ய வேண்டும்" என்று சொன்னதையும் உ.வே.சா குறிப்பிடுகின்றார். "இனிமேல் மண் வைத்து ஒட்டிப் புஷ்டிப் படுத்த முடியுமா? இருக்கிற உடம்பைச் சரியாக காப்பாற்றிக் கொண்டால் போதும்" என்று சொல்லிவிட்டு சில நாட்கள் அங்கே தங்கியிருந்து வேங்கட சுப்பையரை சங்கீத குருகுலத்தில் விட்டு வந்தார் உ.வே.சாவின் பாட்டியார்.

கனம் கிருஷ்ணயர் வேங்கட சுப்பையரை அன்புடன் நடத்தினாலும் கண்டிப்புடனும் பயிற்சி கொடுத்து வளர்த்தார்.சமஸ்தானத்தில் கனம் கிருஷ்னையருக்கும் ஜமீந்தாரைப்போன்ற வரவேற்புதானாம். கனம் கிருஷ்ணையர் குதிரை மேல் சவாரி செய்து செல்வாராம். ஜமீந்தார் அன்பளிப்பாக வழங்கிய குதிரை அது.

முறையாக இரவும் பகலும் சங்கீதம் பயிற்சி பெற்றார் வேங்கட சுப்பையர். கனம் கிருஷ்ணையர் வித்வான்கள் அடங்கிய சபையில் பாடும் போது வேங்கட சுப்பையரும் இணைந்து பாடுவாராம்.. ஜமீந்தாருக்கும் வேங்கட சுப்பையர் மேல் அன்பு உண்டாகிற்று.

வேங்கட சுப்பையருக்கு திருமணம் செய்ய நினைத்து பெண் தேடிக் கொண்டிருக்கையில் கனம் கிருஷ்ணையருக்கு உடல் நிலை மோசமாகியது. ஆதலால் ஜமீந்தாரிடம் சொல்லி அனுமதி பெற்றுக் கொண்டு உடையார்பாளையத்தை விட்டு தனது சொந்த ஊராகிய திருக்குன்றத்திற்குச் சென்றார் கனம் கிருஷ்ணையர். திருக்குன்றத்திலேயே அவர் இறுதி காலம் அமைந்து. அதற்குப் பிறகு வேங்கட சுப்பையர் உடையார் பாளையம் திரும்பி சமஸ்தானத்திலே இணைந்து கொண்டார்.அப்போது ஜமீன்தார் கனம் கிருஷ்ணையருக்கு பிறகு அவரது ஸ்தானத்திற்கு ஒருவரை தேடிக்கொண்டிருக்க சாமா சாஸ்திரிகளின் குமாரராகிய சுப்பராயரென்னும் வித்துவானைத் தருவித்து அவரை சமஸ்தான வித்துவானாக நியமித்தார் ஜமீன்தார் . அப்போது வேங்கட சுப்பையர் சமஸ்தானத்து வித்துவான்களில் ஒருவராக இருந்து வந்தார்.

இந்த சங்கீத பயிற்சியும் அனுபவமும் வேங்கட சுப்பையருக்குப் பிற்காலத்தில் கதாக்காலட்சேபங்களும் இசைக் கச்சேரிகளும் நடத்தும் வாய்ப்புக்களை அமைத்துத் தந்தன. பலமான சங்கீத அஸ்திவாரம் கனம் கிருஷ்ணையரிடம் மேற்கொண்ட பயிற்சியினால் வேங்கட சுப்பையருக்கு அமைந்தது. இதுவும் அவர் செய்த சிவ பூஜையின் பலன்தானோ?

தொடரும்...
சுபா

No comments:

Post a Comment