Friday, May 18, 2012

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 2


பகுதி 2

 “ ”எப்போதும் சிவ பக்தி பண்ணிக் கொண்டிரு” என்பது என் தந்தையார் எனக்குக் கடைசியில் கூறிய உபதேசம். அந்த உபதேசத்தை நான் கடைபிடிப்பதனால் இந்த அளவில் தமிழ்த் தொண்டு புரியவும் அன்பர்களுடைய ஆதரவைப் பெறவும் முடிந்ததென்று உறுதியாக நம்பிருக்கின்றேன். ” என்று உ.வே.சா என் சரித்திரத்தில் 6ம் அத்தியாயத்தில் கூறுகின்றார்.

உ.வே.சா அவர்களின் தந்தையாரைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கருதுகின்றேன். உ.வே.சாவின் வாழ்க்கையில் அவர் வளர்ச்சிக்குப் பெரிதும் துணையாக நின்றவர் அவர் தந்தையார். அவரைப் பற்றிய சில ஆரம்பகால செய்திகளை வாசிப்பதும் உ.வே.சாவின் இளமை காலத்தையும் வாழ்க்கைச் சூழலையும் தெரிந்து கொள்ள உதவும்.

உ.வே.சா அவர்களது தந்தையின் இயற்பெயர் வேங்கட சுப்ரமணிய ஐயர். இது வேங்கடசுப்பையரென்று வழக்கில் மறுவி விட்டது. முன்னோர்களின் பெயரை அது ஒத்திருந்தமையால் அவரை வீட்டில் எல்லோரும் ஸாமி என்றே அழைப்பார்களாம். வேங்கட சுப்ரமணிய ஐயருக்கு ஒரு சகோதரரும் ஒரு சகோதரியும் இருந்தனர். சகோதரரின் பெயர் ஸ்ரீநிவாஸ ஐயர். அவரை சின்னஸாமி என்றே அழைப்பார்களாம். இவர்கள் இருவருக்கும் உ.வே.சா அவர்களின் தாத்தாவே இளமையில் தமிழ் மொழியையும் வடமொழியையும் கற்பித்தார். பாட்டியார் சங்கீத ஞானம் கொண்டிருந்தமையால் தானே சங்கீதத்தைத் தாயாரிடம் கற்றுக் கொண்டார் உ.வே.சாவின் தந்தையார். பின்னர் கனம் கிருஷ்ணையாரிடம் சங்கீதப் பயிற்சி மேற்கொண்டமைப் பற்றி இன்னொரு பதிவில் எழுதுகின்றேன்.

உ.வே.சா அவர்களின் தாயாரின் பெயர் ஸரஸ்வதி. அக்காலகட்டத்தில் திருமணம் செய்யும் போது மணமகன் வீட்டாருக்கே செலவு அதிகமாகுமாம். ஒரு மகனுக்குத் திருமணம் செய்து வைப்பது பெரிய காரியமாக 19ம் நூற்றாண்டில் இருந்திருக்கின்றது. இந்த 180 வருஷ கால இடைவெளியில் நிகழ்ந்துள்ள ஒரு சமூக மாற்றமாகவும் இதனைப் பார்க்கத் தோன்றுகிறது.இப்போது காலம் எவ்வளவோ மாறிவிட்டது அல்லவா?

உ.வே.சா குறிப்பிடுகின்றார். “ என் தந்தையாருக்குக் கலியாணம் செய்யும் பருவம் வந்தது. அக்காலத்தே இவ்விஷயத்தில் பிள்ளை வீட்டாருக்குத்தான் செலவு அதிகம். விவாகச் செலவிற்கும் கூறை முதலியவற்றிற்கும் ஆபரணங்களுக்கும் பிள்ளை வீட்டுக்காரர்களே பணம் கொடுப்பது வழக்கம். ஒரு திருமாங்கலியம் மட்டும் பெண் வீட்டார் பெண்ணுக்குக் கொடுப்பார்கள். ஆதலின் கலியாண விஷயத்தில் இந்தக் காலத்தைப் போலப் பெண் வீட்டார் பொருளில்லையே என்ற கவலை கொள்ள மாட்டார்கள்.”

மகனுக்குக் கலியாணம் முடிக்க வேண்டுமே என கவலைப்பட்ட பாட்டி செல்லத்தம்மாள் சும்மா இல்லாமல் மகன் வேங்கட சுப்ரமணியரை தனது சகோதரர் கனம் கிருஷ்ணைய்யரிடம் ஒப்புவித்தார். சங்கீதப் பாடமும் சொல்லிக் கொடுத்து திருமணமும் செய்து வைத்து இவரைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஒப்படைத்து விட்டார். அது வேங்கட சுப்ரமணியரின் வாழ்க்கையில் சங்கீத ஞானத்தையும் மணவாழ்க்கையயும் அமைத்து வைத்தது.

உ.வே.சா அவர்களுக்குத் தனது தந்தையாரின் பால் அளவற்ற அன்புண்டு. தனது தந்தையைப் பற்றி குறிப்பிடும் போது அவர் தனது நூலில் “இளமையில் எனக்கு ஒரு தக்க ஆசிரியரைத் தேடித் தந்ததும், பின்பு தமிழ்ச்சுவடிகளே கதியாகக் கிடந்த எனக்கு லௌகிகத் தொல்லை அணுவளவேனும் இல்லாமற் பாதுகாத்ததும், சிவ பக்தியின் மகிமையைத் தம்முடைய நடையினால் வெளிப்படுத்தியதுமாகிய அரிய செயல்களை நான் மறக்கவே முடியாது” என்கின்றார்.

இந்தக் குறிப்புக்கள் அனைத்தும் 6ம் அத்தியாயத்தில் உள்ளன.

தொடரும்...

No comments:

Post a Comment