Sunday, September 25, 2011

ஞானியின் நாங்கள்

வேறு எங்கு செல்வதையும் விட தமிழகத்துக்குச் செல்வது என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம். நண்பர்களைப் பார்ப்பது, த.ம.அ தொடர்பான செயல்பாடுகளில் இருப்பது என்பது மட்டுமல்லாமல் சில நேரங்களில் மிக அபூர்வமான சில சந்தர்ப்பபங்களும் திடீர் என வாய்த்து விடுவதும் எனது இந்த சுவாரசியத்திற்குக் காரணம். அப்படி ஒரு வாய்ப்பு பெப்ரவரி 27ம் நாள் சீத்தாம்மாவின் வழி அமைந்தது.

நான் சென்னைக்கு வந்த மறுநாள்.. 27ம் தேதி அன்று சென்னையில் த.ம.அ நண்பர்களின் சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தோம். அது முடிந்து திடீரெனெ எற்பாடாகி என்னை காரில் அழைத்துக் கொண்டு பீச் இருக்கும் இடத்திற்கு சீத்தாம்மா கொண்டு சென்றார்கள். ஒரு நல்ல நிகழ்ச்சி இருக்கின்றது. கட்டாயம் பார்க்க வேண்டும் என்று சொன்னவுடன் ஆவல் அதிகரித்து விட்டது.



பீச் சாலையிலே இந்த அழகான மண்டபம்.. இது நாட்டிய தாரகை சந்திரகலா பராமரித்த இடம் என்றும் அறிந்து கொண்டேன்.. அழகிய கலை நயத்துடன் கட்டபப்ட்ட கலை மண்டபங்கள். இங்கே தான் அன்றைக்கு ஏற்பாடாகியிருந்த ஞானியின் இரண்டு நாடகங்கள் நடத்தப்பட இருந்தன.







என்னுடன் திருமதி.மீராபாய் வந்திருந்தார்கள். இவர்கள் சீத்தாம்மாவின் தோழி. ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரி.

உள்ளே சென்றதும் கேரளா ஆலயங்களின் சாயலில் வடிவமைக்கப்பட்ட கட்டிடங்களின் அழகில் என்னை மறந்தேன். மனதைக் கொள்ளைக் கொள்ளும் வடிவமைப்பு.

உள்ளே நுழைந்து சற்று நேரத்தில் அங்கு வந்த திரு.ஞானியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். பின்னர் திரு.அதியமான் வந்து சேர்த்தார். அவரை நான் அன்று தான் முதன் முறையாக நேரில் சந்திக்கிறேன். அறிமுகம் செய்து கொண்டு சற்று உரையாடினோம். பொதுவாக தொழில், த.ம.அ, ஞானியின் நாடகங்கள் என்று எங்கள் சிறிய கலந்துரையாடல் அமைந்தது.



சில நிமிடங்கள் ஒவ்வொருவராக வர மேடையின் கீழ் இருந்த தரையில் பார்வையாளர்களின் கூட்டம் நிறைய ஆரம்பித்தது. தமிழ் சினிமா புகழ் குணச்சித்திர நடிகை பாத்திமா பாபுவும் அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர்.

சற்று நேரத்தில் நண்பர் அண்ணா கண்ணனும் அங்கு வந்து சேர்ந்தார். எதிர்பாராத சந்திப்பு.

இரண்டு நாடகங்கள் மேடையேற்றம் கண்டன:
1. பல்லக்கு தூக்கிகள்
2.நாங்கள்.






நாங்கள் எனும் நாடகம் சமூகத்தில் நாம் காண்கின்ற பல்வேறு விஷயங்களை அலசுவதாக அமைந்த படைப்பு. மிக அருமையான நடிப்பு. தெளிவான உச்சரிப்பு. நல்ல பாவனை. தங்களின் அபார திறமையினால் நம்மை அசத்தி விட்டனர் இந்த நாடகக் கலைஞர்கள்.

அதில் ஒரு விழியத்தை இங்கே காணலாம். (மேலும் இரண்டு பின்னர் இணைக்கப்படும்)



நாடகம் முடிந்த போது அந்தப் பாத்திரப்படைப்புக்கள் வழங்கிய தாக்கம் மனதை ஆக்கிரமித்திருந்தது. நண்பர்கள் அதியமான், அண்ணா கண்ணன் ஆகியோரிடம் விடைபெற்றுக் கொண்டு நாங்கள் புறப்பட்டோம்.

இது மறக்க முடியாத அனுபவமாக என் மனதில் நிறைந்து நிற்கின்றது.



அண்ணா கண்ணன், அதியமான், சீத்தாம்மா, சுபா, திருமதி.மீராபாய்




அண்ணா கண்ணன், சுபா, திருமதி.மீராபாய்

அன்புடன்
சுபா



1 comment:

  1. நல்ல கட்டுரை. யதார்த்தமான நடை.மெருகேறிக்கொண்டிருக்கும் எழுத்து. வாழ்த்துகள் சுபா. சீதாம்மாவிற்க்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete