Sunday, September 17, 2017

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 133

சீவக சிந்தாமணி அச்சுப் பதிப்பிற்குப் பின்னர் உ.வே.சா விற்குச் சங்க இலக்கிய நூல் பற்றிய அறிமுகம் ஏற்படவே அவர் பத்துப் பாட்டு அச்சுப்பதிப்பாக்கத்தை முடித்திருந்தார் என்பதை முந்தைய பதிவுகள் சிலவற்றிற்கு முன்னர் குறிப்பிட்டிருந்தேன். பத்துப்பாட்டு என்பது எட்டு புலவர்களால் இயற்றப்பட்ட ஒரு தொகுப்பாகும். பத்துப்பாட்டில் இடம்பெறும் தொகுப்புகளில் ஆறு தொகுப்புக்கள் புறத்திணைப் பாடல்கள் என்றும், மூன்று தொகுப்புக்கள் அடங்கிய செய்யுட்கள் அகத்தினைப் பாடல்கள் என்றும், எஞ்சிய ஒன்று அகப்புறப்பாட்டு என்ற வகையிலும் அமைகின்றன. 

புறத்தினைப்பாடல்கள் என வகைப்படுத்தப்படுபவை திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி , மலைபடுகடாம் ஆகியன. அகத்தினைப்பாடல்கள் எனப்படும் வகையில் அமைவன முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய மூன்றுமாகும். நெடுநல்வாடை அகப்புறப்பாட்டு என வகைப்படுத்தப்படுகிறது. 

பத்துப்பாட்டு அச்சுப்பதிப்பாக்கத்திற்குப் பின்னர் சிலப்பதிகாரத்தை அச்சு நூலாக உ.வே.சா வெளியிட்டமையும் அதன் தொடர்பில் நடந்த நிகழ்வுகளையும் முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். அப்பணிகளினூடே சங்கத்தமிழ் பாடல் தொகுப்புக்களில் ஒன்றான புறநானூற்றுப் பதிப்பை உ.வே.சா தொடங்கினார். சிலப்பதிகாரப் பணி முடிவுற்ற பின்னரும் கூட உடனே இந்த நூலை அவரால் வெளியிட இயலாத சூழல் இருந்தது. இடையில் 1893ம் ஆண்டு அவரது தந்தையாரின் இழப்பு அவருக்குப் பணிச்சுமையை மேலும் அதிகரித்தது. ஆகவே அந்த ஆண்டு புறநானூற்றுப் பதிப்பை முழுமைப்படுத்த முடியாத சூழலே தொடர்ந்தது. 

புறநானூறு என்பது சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை எனப்படும் தொகுப்பில் அமைகின்ற ஒரு தொகுப்பாகும் 

புறநானூற்றுப்  பாடல் தொகுப்பில் இடம்பெறும் பாடல்களை எழுதிய புலவர்களின் பெயர் பட்டியல் நீளமானது. நூற்றைம்பத்தாறு புலவர்கள் எழுதிய பாடல்களின் தொகுப்பு இது என அறியப்படுகின்றது. இவர்களுள் பதினைந்து பெண்பார்புலவர்களும் அடங்குவர். புறநானூற்றுப்பாடல்கள் பண்டைய சங்ககால வரலாற்றுச் செய்திகளும் சமூக வழக்குகளையும் இன்று நாம் ஆராய்ந்து அறிந்து கொள்ள உதவும் சான்றுகளுள் ஒன்றாக அமைகின்றது. 

உ.வே.சாவின் பதிப்புப்பணி 1894ம் ஆண்டு மீண்டும் முனைப்புடன் தொடங்கியது. புறநானூற்றுப் பாடல்களை ஆராய்ந்ததில் அவருக்குக் கிடைத்த பல தகவல்களைத் தொகுத்து நூலில் ஒரு அகவலாக இணைத்தார். தனது ஆய்வு எவ்வகையில் நிகழ்ந்தது என்பதையும் தாம் ஆராய்ந்த சுவடிகளில் பல சேதமுற்றிருந்த நிலையையும் வாசிப்போர் உணர்வதற்காக  அறிமுகமாக நூலில் இணைத்தார். அகம் புறம் என்னும் இருவகைப் பொருளின் தன்மையையும் வாசிப்போர் புரிந்து கொள்ளும் வகையில் நூலின் முகவுரையில் இதனை விளக்கி எழுதி இணைத்தார். 

புறநானூற்றுப் பாடல்களில் வருகின்ற செய்திகளைக் கொண்ட பண்டைய தமிழகத்தின் சரித்திரத்தை அறிந்து கொள்ளவும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு உதவும் எனக் கருதி பாடல்களில் வருகின்ற நாடுகள், கூற்றங்கள், ஊர்கள், மலைகள், ஆறுகள் ஆகியவற்றின் பெயர்களை அகராதி வரிசையில் தொகுத்து அமைத்து நூலில் இடம்பெறச் செய்தார். அத்துடன் தனது உரையில் மேலும் இவ்வாறு குறிப்பிடுகின்றார். 
"இத் தமிழ் நாட்டின் பழைய சரித்திரங்களைத் தெரிந்து கொள்ளுதலிலும் தெரிவித்தலிலுமே பெரும்பாலும் காலம் கழித்து உழைத்து வரும் உபகாரிகளாகிய விவேகிகள், இந்நூலை நன்கு ஆராய்ச்சி செய்வார்களாயின் இதனால் பலர் வரலாறுகள் முதலியன தெரிந்து கொள்ளுதல் கூடும்", என்கின்றார். 

புறநானூற்று அச்சுப் பதிப்புப் பணிகள் நிறைவடைந்தன புறம் நானூற்றில் 267ம் பாடலும் 269ம் பாடலும் முற்றிலுமாக கிடைக்கவில்லை. இலங்கையின் யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் சென்னையில்  ஒரு அச்சுக்கூடத்தை வைத்திருந்தார்.   அந்த அச்சுக்கூடத்தைச் சதாசிவ பிள்ளை பாதுகாத்து வந்தார். அவர் ஒரு புறநானூற்றுப் பிரதி  ஒன்றினை பிரதி எடுத்து இவருக்குத் தபாலில் அனுப்பி வைத்தார்.   உ.வே.சா பெற்றுக் கொண்ட பதிப்பில் ​267ம் செய்யும் முதல் 369ம் செய்யுள் வரை கிடைத்தவற்றை உ.வே.சா  என் சரித்திரம் நூலில் குறிப்பிடுகின்றார். ஆயினும் அவரது பதிப்பில் பாடல் எண் 267, 268 ஆகியன விடுபட்டே இருந்திருக்கின்றன. மேலும் 282ல் சில சொற்கள், 283ல் சில சொற்கள் 284ல் சில சொற்கள்285ல் சில சொற்கள் என மேலும் சில செய்யுட்களிலும் முழுமையான பாடல்கள் கிடைக்கவில்லை.  328ல் முதல் சில வரிகள் கிட்டவில்லை. இப்படி சில் சொற்கள் கிடைக்காத நிலையிலேயேதான் இப்பதிப்பு வெளிவந்துள்ளது 328ம் பாடலின் தொடக்கம் கிடைக்கவில்லை. இவை மூன்று முழுமை பெறா பாடல்கள் என்ற நிலையில் புறநானூறு அச்சுப்பதிப்பாகத் தயாராகியிருந்தது. 1894ம் ஆண்டு செப்டம்பர் மாதம் புறநானூற்றுப் பதிப்பு நிறைவேறியது. உ-வே-சா பதிப்பித்த எட்டுத் தொகை நூல்களுள் இதுவே முதன்மையானது. நூல் வெளிவந்தது. அப்போதைய தன் மன நிலையை உ.வே.சா இப்படித்தான் குறிப்பிடுகின்றார். 

"புத்தகம் முடிந்து பார்க்கும்பொழுது, ‘நானா இவ்வளவும் செய்தேன்!’ என்று எனக்கே பிரமிப்பாக இருந்தது. இறைவன் திருவருளை வழுத்தினேன். புத்தகத்தின் அமைப்பைப் பார்த்து நண்பர்களெல்லாம் பாராட்டி எழுதினர். சேலம் இராமசுவாமி முதலியாரும், பூண்டி அரங்கநாத முதலியாரும் பார்த்து இன்புறுவதற்கில்லையே என்ற வருத்தம் மாத்திரம் எனக்கு ஏற்பட்டது."

புறநானூற்றுப் பதிப்பு  123 ஆண்டுகளுக்கு முன்னர் இதே செப்டம்பர் மாதம் தான் நிகழ்ந்திருக்கின்றது என்பது  இந்தப் பதிவை நான் எழுதும் போது எனக்கு வியப்பளித்தது. 

தொடரும்...

சுபா

No comments:

Post a Comment