Monday, July 25, 2016

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 98

பல சுவடிக்கட்டுக்களை வைத்துக் கொண்டு தொடர்ந்து உ.வே.சா சீவக சிந்தாமணி ஆய்வுகளைச் செய்து வந்தார். இப்படியே தொடர்ந்து பாட பேத ஆய்விலேயே வாழ்நாள் முழுதும் இதிலேயே நாட்கள் செல்வாகிவிடும். இதுவரை செய்த ஆய்வுகளில் செய்துள்ள தயாரிப்புக்களைக் கொண்டு முதல் பதிப்பினைக் கொண்டு வருவோம். அதன் பின்னர் மேலும் திருத்தங்கள் செய்து அடுத்த பதிப்பை பின்னர் வெளியிட முயற்சிக்கலாம் என அவருக்குத் தோன்றியது. இதனையே அவரது நண்பர்களும் ஆலோசனையாகச் சொல்லிக் கொண்டிருந்தனர். 

உண்மைதானே! 
ஆய்வு என எடுத்துக் கொண்டு ஒரு விசயத்தில் இறங்கினால் ஒரு நூலைத் தொட்டால் அது அடுத்த ஒன்றைக் காட்டுகின்றது. அதில் நம் கவனத்தைச் செலுத்தினால் அடுத்த சில நூற்களை அதுகாட்டுகின்றது. ஒரு விசயத்தை நோக்கி நம் ஆய்வு நோக்கம் இருக்கும் போது புதிய புதிய விசயங்கள் வந்து நமக்கு மேலும் பல ஆய்வுச் சிந்தனைகளை வழங்குகின்றன. ஆக இப்படியே சென்று கொண்டிருந்தால் ஆய்வுக்கு என்று தான் முடிவு என்று தோன்றுவதும் இயல்புதானே. 

சரி. பதிப்புப்பணியைத் தொடங்கலாம் என முடிவாயிற்று. ஆனால் ஒரு நூலைப் பதிப்பிப்பது என்பது சாதாரண காரியம் அல்லவே. அதிலும் இன்றைக்கு 150 ஆண்டுக் காலத்திற்கு முன்னர் உள்ள நிலையில் அச்சுப்பதிப்பிற்கு முயற்சித்தவர்கள் பெரும்பாலும் செல்வந்தர்களாகவோ அல்லது செல்வந்தர்களிடம் பொருளாதார உதவி பெற்றோ தான் இவ்வகை பணிகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள். அச்சுக்கூடங்கள் பல வந்து விட்டன இக்காலத்தில். ஆயினும் கூட இன்னமும் எழுத்தாளர்களுக்குப் பொருளாதார பலமும் தேவையாகத்தான் இருக்கின்றது. ஆயினும் சில பதிப்பகங்கள் எழுத்தாளர்களின் படைப்புக்களை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு வகை வெளியீட்டு முயற்சிகளில் இறங்கி உள்ளமையும் இன்று நடப்பில் இருப்பதுதான். இவையனைத்தையும் விட இணைய வழி மின்னூல் பதிப்பு என்பது எழுதுபவருக்கு எந்தச் சிரமமுமின்றி முழு நூலை இணணையத்திலேயே முழு நூலாக வாசகர்களுக்கு வழங்கும் வகையை இன்று தந்திருக்கின்றது. இது நூல் பதிப்பாக்கத்தில் ஒரு புரட்சி என்றால் மிகையில்லை, 

ஆக, பொருளாதார உதவி வேண்டுமே என நண்பர்கள் அவருக்கு யோசனை சொல்லியிருக்கின்றனர். அதாவது புத்தகங்களை வாங்கிக் கொள்கின்றோம் எனச் சொல்லி முன்பணம்  வாங்கிக் கொண்டு அந்தப் பணத்தைக் கொண்டு அச்சுப்பதிப்பைத் தொடங்குவது. பின்னர் நூல் தயாரானது பணம் கொடுத்தோருக்கு நூலைக் கொடுத்து விடலாம் என்பது தான் அந்த யோசனை. முதல் நபராக திருவாவடுதுறை ஆதீனகர்த்தரைச் சென்று சந்தித்து தன் விண்ணப்பத்தை வைத்து விட்டார். உ.வே.சா. அவர் மகிழ்ச்சியுடன், சில நூற்களுக்கான பணத்தை முன்பணமாகக் கொடுக்க இப்படியே பல நண்பர்களையும் அணுகி ஒரு வழியாக ஓரளவு பணம் சேர்ந்தது. 

1886ம் ஆண்டு கல்லூரி கோடை விடுமுறையின் போது அச்சுப்பணியை நிறைவேற்றும் எண்ணத்துடன் சென்னைக்குப் புறப்பட்டார் உ.வே.சா. இராமசாமி முதலியார் சென்னையில் இல்லாமையால் சோடாவதானம் சுப்பராய செட்டியார் இல்லத்திற்குச் சென்று அங்குத் தங்கிக்கொண்டு ஒரு உணவு விடுதியில் உணவுக்கு ஏற்பாடு செய்து கொண்டு அச்சுப்பதிப்புப் பணியைத் தொடங்கினார். சோடாவதானம் சுப்பராய செட்டியார் அச்சுப்பதிப்புப்பணியில் நல்ல அனுபவம் கொண்ட சக்கரவர்த்தி ராஜ கோபாலாச்சாரியார் என்பவரை அறிமுகப்படுத்தினார். 

சுவடி நூல்களை வைத்து அப்படியே பதிப்பிக்கப்போகிறோம் என நினைத்திருந்த உ.வே.சாவிற்கு இவர்தான் சில பகுதிகளைப் பெரிய எழுத்திலும், சில பகுதிகளை சிறிய எழுத்திலும் எப்படிப் பிரித்து அமைப்பது, விசேட உரை, பொழிப்புரை போன்றவற்றை ஒரே தொடர் வரிகளில் புகுத்தாமல் தனித்தனி பாராவாக எப்படி அமைப்பது என்றெல்லாம் விளக்க,  உ.வே.சாவிற்குப் புத்துணர்ச்சி கிட்டியது. 

அவரே சூளை அவதானம் பாப்பையர் வீதியில் உள்ள திராவிட ரத்னாகரம் என்ற அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கலாம் என்று ஆலோசனையும் கூறினார். திராவிட ரத்னாகரம் என்பது தமிழ்க்கடல் என்ற பொருளைத்தருவதால் இதுவே நல்ல சகுனமாக ஒலிக்கின்றது. அங்கேயே சிந்தாமணியைப் பதிப்பிப்பது பொருந்தும் என உ.வே.சா முடிவு செய்தார். "சிந்தாமணி ஒரு கடலில் தானே தோன்றியது. தமிழ்ச்சிந்தாமணி தமிழ்க்கடலிலிருந்து வெளிவருவது நன்மையே" என உ.வே.சாவின் உள்ளம் நினைத்து மகிழ்ந்தது. 

ஒரு உழைப்பாளிக்கு தன் உழைப்பின் பலன் கிட்டும் நேரம் என்பது அளவில்லாத ஆனந்தத்தை தருவது என்பதோடு எவ்வாறு தன் உழைப்பு பலன் தருமோ என தவித்துக் கொண்டிருந்த மனதிற்கு அது ஆறுதலையும் நிம்மதியும் தரும் நேரம் அல்லவா? 95ம்  அத்தியாயத்தில் இந்த நிகழ்வுகளை மிக விரிவாகவே உ.வே.சா விவரிக்கின்றார். 


தொடரும்
சுபா

1 comment:

  1. சக்கரவர்த்தி ராஜ கோபாலாச்சாரியார் -இவர்தான் ராஜாஜி என்று நினைக்கிறேன். (முதல் இந்திய கவர்னர் ஜெனெரல்).

    ReplyDelete