Sunday, May 3, 2015

சாக்ரடீஸ் - ப்ளேட்டோவின் அரசியல் வழி.....! - 6

வாசிப்பின் பதிவு 6

மூன்றாம் நூலிலே சாக்ரடீஸ் தனது நண்பர்களுடன் உரையாடுவதாக வரும் பகுதிகளில் அலசும் விஷயங்களைப்  பார்க்கும் போது நுணுக்கமாக ஒரு ராஜ்ஜியத்தில் யார் யார் எப்படி எப்படியான வாழ்க்கை முறை நியமங்களைக் கையாள வேண்டும் என அவர் கருத்தை முன்வைப்பதை ப்ளேட்டோவின் இந்த நூல் வழி தெரிந்து கொள்ள முடிகின்றது.  மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய மன்னர் மற்றும் அவரது படையினர் ஆகியோர் கட்டுப்பாடுகளையும் விதிகளையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என உறுதியாகச் சொல்வதாகவும் இப்பகுதி அமைகின்றது.

மது மனிதரை மயக்கத்தில் ஆழ்த்தும் திறன் கொண்டது. மது அருந்துதல் ஒரு மனிதரை அவர்தம் இயல்பான சிந்தனையிலிருந்து தள்ளி, மயக்க நிலையில் வைக்கும் தன்மை கொண்டது.  இதனால் மது அருந்துவோருக்கு தெளிவற்ற நிலையே ஏற்படும். ஒரு சாதாரண மனிதர் மதுவினால் அடையும் நன்மை என ஒன்றும் கிடையாது. அது தேக ஆரோக்கியத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக சீர்குலைப்பதில் எவ்வகையில் பங்கு வகிக்கின்றதோ அதே வகையில் மனத்தின் ஆரோக்கியத்தைத் தெளிவற்றதாக்குவதிலும் பங்கு வகிக்கும் தன்மை கொண்டது.

மது அருந்துவதைத் தடுக்க பல உத்திகள் கையாளப்படுகின்ற வேளையில், ஒரு தனி மனிதர் தானே மதுவினால் உண்டாகின்ற வினையை அறிந்தால் ஒழிய அதிலிருந்து வெளிவருவது என்பது சாத்தியமல்ல. மதுவினால் சீர்கெட்ட குடும்பங்கள் பற்றி தினம் தினம் அறிந்தாலும் கூட, மது அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு மனிதர்கள் இறக்கின்றார்கள் என செய்தியை அறிந்தாலும் கூட மதுவிற்குத் தன்னை பழக்கிக் கொண்ட பலர் அதிலிருந்து விடுபட முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக பல பாசாங்குத் தனமான காரணங்களாகவே அமைகின்றன.

சோகத்தை மறக்க மது  அருந்துவதாகச் சிலரும்..
துன்பத்திலிருந்து மீள அருந்துவதாகச் சிலரும்..
வீரத்தைக் காட்ட அருந்துவதாகச் சிலரும்..
பண பலத்தைக் காட்ட அருந்துவதாகச் சிலரும்..
என மதுவிற்கு அடிமையானோர் காரணம் கற்பிக்கத் தவருவதில்லை.

மதுவினால் அழிவது பிறரல்ல.. தானும் தன் குடும்பமும் தான் என ஒருவர் உணர்ந்தால் வேறு எந்த சட்டமும் தேவையில்லை .. மதுவை அறவே ஒழிக்க.
ஆனால் அந்தத் தெளிவு வராத காரணத்தினால் தான் புறத்தே சில காரணங்களைக் கற்பித்துக் கொண்டு  மது அருந்தும் பழக்கத்தை காரணங்களை உருவாக்கிக் கொண்டு தொடர்கின்றனர்.

இதில் தமிழ் சினிமா ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் பெரிது என்பதை ஒதுக்கித் தள்ள முடியாது.

ஒரு  இளைஞன் என்றால் அவன் நண்பர்களைச் சந்திக்கும் போது மது அருந்துவான். அது நாகரிகம் என்ற வகையிலோ.. ஹீரோயிசத்தைக் காட்டும் ஒரு வழியாகவோ மது அருந்துவது தமிழ் நாடகங்களிலும் சினிமாக்களிலும் காட்டப்படுகின்றது. சுயமாகச் சிந்திக்கும் தன்மையையே இழந்து நிற்கும் பலருக்கு இவ்வகை விஷயங்கள் தவறான பாதையக் காட்டுவனவாக அமைந்துவிடுகின்றன. ஆக இவ்வகை தவறான வழிகாட்டுதல்களைத் தரும் போக்கு தடுக்கப்பட வேண்டியது மிக அவசியமாகின்றது. வழிகாட்ட வேண்டியவர்களே தவறான பாதையை அமைத்துக் கொடுக்கும் போது ராஜ்ஜியத்தில் எப்படி உடல்ஆரோக்கியமும், உள ஆரோக்கியமும் கொண்ட மக்கள் இருப்பார்கள்.

சாக்ரடீஸ் தம் சகாக்களுடன் உரையாடுவதைக் காண்போம்.

சாக்: தேகப் பாதுகாப்பு சம்பந்தமாக, சில பொதுவான விதிகளை மட்டும்  நாம் இங்கு சொல்லிக் கொண்டு போவோம். ஏற்கனவே நாம் குடிப்பழக்கம் கூடாதென்ற முடிவுக்கு வந்திருக்கின்றோம். ஒரு தேசத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கின்றவன், குடித்துவிட்டு இந்த  உலகத்திலே நாம் எங்கே இருக்கின்றொமென்று தெரியாத நிலையில்  கிடந்தால் அதனை நாம் அனுமதிக்கலாமா?

கிளா: கூடவே கூடாது. அவன் மற்றவர்களைப் பாதுகாப்பது போய், மற்றவர்கள் அவனைப் பாதுகாக்க வேண்டிய நிலைமை ஏற்படுவது மகா கேவலமல்லவா?

தொடரும்..

No comments:

Post a Comment