Sunday, August 31, 2014

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 71

என் சரித்திரம் நூலின் வழியாக உ.வே.சா தனது சொந்த வாழ்க்கைக் குறிப்பை மட்டும் பதிந்தார் என்று நாம் இதன் பரப்பை சுருக்கி காண முயற்சித்தல் இன்னூலைப் பற்றிய சரியான புரிதலைத் தராது. பல சமகாலத்து செய்திகளையும் நடைபெற்ற விஷயங்களையும் நிகழ்வுகளையும் மனிதர்களையும் இவர் இன்னூலில் பதிவதையே பெரும் ஆர்வத்தோடு செய்திருக்கின்றார்.

அந்த ஆண்டு தமிழகத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டிருக்கின்றது. 

பஞ்சம் மக்களின் வாழ்க்கையை நிலை குலையச் செய்யும் இயற்கை பேரிடர் தானே. வாழும் இடத்தில் உணவுக்கு வழியில்லை என்றால் பிழைக்க புதிய இடம் தேடிச் செல்வது தானே வாழ்க்கையைத் தொடர வழிகொடுக்கும். பஞ்சத்தால் இருந்த இடத்திலேயே இருந்து மடிவதை விட பிழைக்க புதிய வழி தேடி மக்கள் புதிய பகுதிகளுக்குச் செல்வது மனித நாகரிகத்தின் தொடக்க காலத்திலிருந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகவியல் நிகழ்வு. 

அந்த ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தில் அல்லலுற்ற பலர் தாம் வசிக்கும் இடங்களிலிருந்து பெயர்ந்து திருவாவடுதுறை பகுதிக்கும் பயணித்திருக்கின்றனர் என்பதை என் சரித்திரக் குறிப்புக்களில் காண்கின்றோம். அப்படி பஞ்சம் பிழைக்க வந்த மக்கள் உணவிண்றி வாடும் நிலை ஏற்படாமல் இருக்க அவர்களுக்குத் தொழிலை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றது திருவாவடுதுறை மடம். 

மடாதிபதி சுப்ரமணிய தேசிகரின் செயல்பாட்டை வாசித்து அறியும் போது ஆச்சரியப்படுகின்றேன். ஏழைகள் வருகின்றார்களே என்பதற்காக தொடர்ந்து இலவசமாக உணவு கொடுப்பது என்ற போக்கை விடுத்து அவர்களுக்குத் தொழில் செய்து முன்னேற வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார் தேசிகர். அம்மக்களுக்குக்  கஞ்சித் தொட்டிகளை வைத்து மக்களுக்கு கஞ்சி கொடுத்து பசியைப் போக்கியதோடு சுற்று வட்டாரத்தில் இருந்த புன்செய் நிலங்களை அதன் தன்மை மாற்றி நன்செய் நிலங்களாக ஆக்க வைத்து அதில் விவசாயத்தைச் செய்து மக்கள் ஜீவனத்துக்குப் புதிய வழியைக் காண உதவியிருக்கின்றார். 

உண்மையான ஒரு உதவி என்பது தொடர்ந்து மனிதர்கள் ஏதாவது ஒரு வகையில் தம் பிழைப்பை தாமே பார்த்துக் கொள்ளும் வகையில் வேலை வாய்ப்பை உருவாக்குவதுதான். இலவச உணவு, இலவச வாழ்க்கை நிலை என இருக்கும் சூழலை உருவாக்குவது சமூகத்தில் கொடிய   பின்விளைவுகளைத் தான் உருவாக்கும். காரணம் இலவசத்துக்குப் பழகிப் போன மக்களின் மனம் உழைப்பை நாடாது. உண்ணும் ஒரு பிடி உணவும் தன் சொந்த உழைப்பில் வந்ததுதான் என்ற எண்ணம் கொண்டவருக்கே தொடர்ந்து தன் வாழ்க்கையின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு படிப்படியாக முன்னேறும் அறிவும் திறனும் ஆர்வமும் இருக்கும். 

அந்த வகையில் மடத்தில் நிகழ்ந்த இந்தச் செயல்பாட்டை நான் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகவே கருதுகின்றேன். 

இச்செய்தியை வாசிக்கும் நமக்கு மட்டும் இப்படி ஒரு சிந்தனை  தோன்றுகின்றது என்பது ஒரு புறமிருக்க, இச்செய்தி அறிந்த வேதநாயகம் பிள்ளையவர்கள் தேசிகரை இச்செயலுக்காகப் பாராட்டி ஒரு செய்யுளும் எழுதியிருக்கின்றார். இதனை உ.வே.சா தன் சரிதத்தில் குறித்து வைக்கின்றார்.

“எரியொத்த பஞ்ச மிடங்கரை யொத்த திடங்கர்பற்றும் 
கரியொத் தனபல் லுயிர்களப் பஞ்சக் கராமடிக்க 
அரியொத் தனன்சுப் பிரமணி யைய னரிசக்கரம் 
சரியொத் தனவவ னீந்திடும் பொன்வெள்ளிச் சக்கரமே.” 

[இடங்கர் - முதலை. கரா - முதலை. அரி - திருமால். பொன் சக்கரம்
- பவுன். வெள்ளிச் சக்கரம் - ரூபாய்.] 

வேதநாயகம் பிள்ளையின் இறுதி காலம் வரை உ.வே.சாவிற்கு அவருடன் மிக நல்ல தொடர்பு இருந்திருக்கின்றது. மடத்தின் பல முக்கிய எழுத்துப் பணிகள், அரசாங்கப் பணிகள், ஆங்கிலத்தில் எழுத வேண்டிய  கடிதங்கள், சட்ட விஷயங்கள் ஆகியற்றில் வேதநாயகம் பிள்ளையவர்கள் துணையிருந்து உதவியிருக்கின்றார் என்பதையும் அறிய முடிகின்றது.

தொடரும்...

No comments:

Post a Comment