Friday, September 13, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 57

திருப்பெருந்துறை புராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட இறுதி நாட்களில் உ.வே.சா மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களுடன் உடன் இருக்க வில்லை. திருப்பெருந்துறையில் ஆசிரியருடனும் ஏனைய மாணவர்களுடனும் தங்கியிருந்து ஒவ்வொரு நாளும் அரங்கேற்றம் செய்து வரும் வேளையில் இடையே உடல் நலக் குறைவு ஏற்பட திருப்பெருந்துறையில் இருந்து தேக ஆரோக்கியத்தைச் சரி செய்வதற்கும் உதவிக்கு ஏற்ற துணை இல்லாத நிலையில் ஆசிரியரிடம் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து தனது உத்தமதானபுரத்தில் பெற்றோர் இல்லத்திற்கு உ.வே.சா அவர்கள் திரும்பி விடுகின்றார்கள். அறங்கேற்றத்தின் இறுதி நாட்களில் அங்கிலாது போன நாட்கள் அவர் மனதில் பதிந்து ஆழமான வருத்ததை ஏற்படுத்தியிருக்கின்றது. உடல் நலம் தேறி ஓரளவு சரியான பிறகு உடனே அவர் ஆசிரியரிடம் திரும்பவில்லை. வீட்டில் குடும்பத்தில் ஏற்பட்ட கடன் தொல்லைகளை உடனே சீர் செய்ய வேண்டிய நிலையில் பெரம்பலூர் (இந்த நகரம் முன்னர் பெரும்புலியூர்  என அழைக்கப்பட்டது) தாலுகாவிலுள்ள காரை என்ற ஓர் ஊரில் சின்னப்பண்ணை கிருஷ்ணசாமி ரெட்டியார் மற்றும் அவர் நண்பர்களின் விருப்பத்தின்படி தங்கியிருந்து திருவிளையாடற் புராணத்தை பாடம் நடத்தி பொருளீட்டிக் கொண்டிருந்தார். பாடம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஆசிரியை மீண்டும் காணும் ஆவலில் ஓரிருமுறை திருவாவடுதுறைக்குச் சென்றும் வந்திருக்கின்றார்.

இன்றும் கூட கல்வி கற்கும் வேளையிலேயே மாணவர்கள் உழைத்து தமது தேவைகளுக்கும் குடும்பத்தார் தேவைகளுக்கும் பொருளீட்டும் நிலையைக் காண்கின்றோம். இவ்வகை முயற்சிகள் மாணவ்ர்களுக்கு நல்ல வாழ்க்கை பாடத்தையும் அளிக்கக் கூடியது என்பதை அனுபவத்தில் நானும் உணர்ந்திருக்கின்றேன். மாணவர்கள் ஏதாகிலும் ஒரு வகையில் கல்வியைக் கைவிடாது பொருளீட்டுதலையும் மேற்கொள்ளும் போது சம்பாதிக்கும் பணத்தின் அருமையை உணர்ந்தவர்களாக நிச்சயமாக இருப்போம். ஒவ்வொரு சிறு தொகையும் எத்தகைய கடின உழைப்பின் அடிப்படையில் நமக்குக் கிடைத்தது என்பதை நினைக்கும் போது அது நமக்குத் தரும் சுய நம்பிக்கைக்கு ஈடு இணை இல்லை.

திருப்பெருந்துறைப் புராணத்தின் இறுதி நாள் அரங்கேற்றம் ஒரு சுபதினத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றிருக்கின்றது. இக்குறிப்புக்களை ஸ்ரீ மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் வரலாறு முதலாம் பாகத்தில் விரிவாகக் காணமுடிகின்றது.  இந்த அறங்கேற்ற நிகழ்வுக்காகப் பட்டுக்கோட்டைத் தாலூகாவிலிருந்த பாலைவனம், நகரம் ஆகிய ஜமீன்களிலிருந்து பிரதிநிதிகளும், பல உத்தியோகஸ்தர்களும், நாட்டுக் கோட்டைத் தனவைசியப்பிரபுக்கள் பலரும், ஏனைய பொது மக்களும் கலந்து சிறப்பித்திருக்கின்றனர்.

புராண நூலை ஒரு தேரில் வைத்து ஊர்வலமாகக் கொண்டுவர சுப்பிரமணியத்தம்பிரான் ஏற்பாடு செய்திருந்த செய்தியையும் அறிகின்றோம். இந்தத் தேர் ஊர்வலம் ஒரு அரச குடும்பத்து திருமண வைபவம் போன்று நடைபெற்றதாம். அக்கால கட்டத்தில் ஒரு நூலுக்கு எத்தகைய மதிப்பு இருந்தது என அறிய வரும் போது அக்கால கல்விகற்றோரின் சிந்தனையை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிகின்றது.

இந்த நூல் பூர்த்தியாகியமையால் முன்னர் வாக்குறுதி அளித்திருந்தபடியே சுப்பிரமணியத் தம்பிரான் அவர்களும் ரூபாய் இரண்டாயிரத்தைப் பிள்ளையவர்களுக்குக் கொடுத்திருக்கின்றார்கள். அத்துடன் இருந்து விடாமல் பிள்ளையவர்களின்  மாணாக்கர்கள் ஒவ்வொருவருக்கும் தனிச் சன்மானமும் மரியாதையும் செய்து அனுப்பி வைத்திருக்கின்றார். இந்தப் பணம் அனைத்தும் தம்பிரானின் சொந்தச் சம்பளத்திலிருந்து கொடுக்கப்பட்ட தொகை என்பதையும் உ.வே.சா குறிப்பிடுகின்றார்.

இவ்வளவு அன்பும் பரிவும் காட்டிய சுப்பிரமணிய தம்பிரான் அரங்கேற்றத்திற்கு முன்னர் பிள்ளையவர்களுடன் ஒரு சிறிய விஷயத்திற்காகப் பிணக்குடன் இருந்திருக்கின்றார். அதனைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே!

நாள்தோறும் பகல் மூன்று தொடங்கி ஐந்து வரை அரங்கேற்றம் நடைபெறுமாம். ஒரு நாள் அப்படி இருக்கையிலே தம்பிரான் வந்து காத்திருக்க வேறு ஒரு சிலர் இன்னும் வராது இருப்பதைப் பார்த்த பிள்ளையவர்கள் அவர்களும் வந்து விடட்டுமே. சற்று பொறுத்து தொடங்கலாம் எனச் சொல்ல இது தம்பிரானை வறுத்தப் படுத்தி விட்டதாம். அதனால் அடுத்த நாட்கள் அரங்கேற்றத்திற்கு வராமல் இருந்திருக்கின்றார். எல்லோரும் வந்து காத்திருக்க தம்பிரான் வரவில்லையென்றால் தொடங்க முடியாதல்லவா? ஆக தம்பிரனைத் தேடிக் கொண்டு பிள்ளையவர்களும் உ.வே.சாவும் சென்றிருக்கின்றார்கள்.

தோட்டத்தில் பின்புறத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த திருப்பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்த  தம்பிரானிடம் சென்ற இவர்களை அவர் ஏறெடுத்தும் பார்க்காமல் வேறொரு இடத்திற்குச் சென்று விட்டாராம். இதனால் மனம் உடைந்து போன பிள்ளையவர்கள் அங்கிருந்து நகர மனமில்லாமல் அங்கேயே நின்று விட்டார்களாம். ஆசிரியரின் மன நிலையை அறிந்த உ.வே.சா தம்பிரானிடம் சென்று முகத்தை வாட்டத்துடன் வைத்துக் கொண்டு பேசாமல் நின்று கொண்டிருந்திருக்கின்றார். இதனைக் கண்ட தம்பிரான்,
என்ன ஐயா? உங்கள் பிள்ளைக்கு மரியாதையே தெரியவில்ல. நான் வந்து காத்திருக்கையில் யாரோ சிலபேர்கள் வரும் வரையில் பொறுத்திருமென்று சொன்னாரே. அப்படிச் சொல்லலாமா? ஊரார் என்னை என்ன நினைப்பார்கள்? என்னை மதிப்பார்களா? அவர் செய்தது என் முகத்திற் கரியைத் தீற்றியது போல இருந்தது. அவரை புராணம் பாடும்படி செய்து அரங்கேற்றத்திற்கு வருவித்து உபசரிக்கின்றவன் நானா அவர்களா? என்று சொல்லி மண்டபத்திற்கு வராமல் நின்று விட்டாரம். இதனால் அடுத்த சில நாட்கள் திருப்பெருந்துறை புராண அரங்கேற்றம்  தடைபட்டுப் போயிருக்கின்றது. அதற்குப் பின்னர் சிலர் பேசி தம்பிரானைச் சமாதானம் செய்து பின்னர் அவர் வர எல்லாம் இனிதே நடைபெற்றிருக்கின்றது.

இறுதியில் திருப்பெருந்துறையை விட்டு பிரியும் போது இந்த பிணக்குகள் எல்லாம் மறைந்து ஆரத்தழுவி பிரியமனமில்லாமல் பிள்ளையவர்கள் சுப்பிரமணியத் தம்பிரானிடமிருந்து விடைபெற்றிருக்கின்றார்கள்.

இவ்வளவு சிறப்புக்களுடன் அரங்கேற்றம் கண்ட இத்திருப்பெருந்துறை புராண அமைப்பை பற்றிய சில தகவல்கள் கிடைக்கின்றன. முதலில் கடவுள் வாழ்த்தும் அதன் பின்னர் அவையடக்கமும் அதனை அடுத்து திருநாட்டுப் படலம் என பிள்ளையவர்கள் எழுதியிருக்கின்றார்கள். உருவம், அருவம், அருவுருவமென்னும் மூவகைத் திருமேனிகளிலே சிவபெருமானே எழுந்தருளி விளங்கும் இடமாகத் திகழ்வது திருப்பெருந்துறை.  இதனை விரிவாக்கி புராணமெங்கும் பல இடங்களில் இவ்விஷயங்கள் வரும் வகையில் இப்புராணத்தை பிள்ளையவர்கள் அமைத்தார் என்பதை உ.வே.சாவின் குறிப்புக்களிலிருந்து காண்கின்றோம்.

தொடரும்...

சுபா

No comments:

Post a Comment