Thursday, September 25, 2003

செடிகள்..!



எனக்குக் காரணம் புரியாமலேயே செடிகளை பிடிக்கும். எவ்வளவு நேரமானாலும் செடிகளை அதுவும் விதம் விதமான அழகிய செடிகளைப், பூச்செடிகளை மரங்களை பார்த்துக் கொண்டே இருக்கப் பிடிக்கும். நல்ல பூங்காக்கள் எனது மனதை ஈர்த்து விடும். எவ்வளவு அலுப்பாக இருந்தாலும், கவலையாக இருந்தாலும் கூட செடிகளைப் பார்த்து அவற்றோடு உறவாடும் போது அந்த அலுப்பெல்லாம் பறந்து விடும்.




முன்பு பினாங்கில் (மலேசியாவில்) ஒருக்கும் போது எனது இல்லத்தில் பெரிய தோட்டம் இருந்ததால் அது முழுதும் நிறைய செடிகளை நட்டு வைத்திருந்தேன். பூச்செடிகள் அழகிய மரங்கள் மட்டுமன்றி காய்கறிச் செடிகளும் எனக்குப் பிடிக்கும். வெண்டைக்காய், கத்தரிக்காய், மிளகாய் பாகற்காய் கீறை வகைகள், மற்றும் முருங்கை மரம் கறிவேப்பிலை மரம் இப்படி விதம் விதமான செடிகளை வைத்திருந்தேன். பச்சை மிளகாய் செடியில் பூவாகி பின்னர் பெரிதாக வளரும் போது பார்க்க கொள்ளை அழகாக எனக்குத் தோன்றும். அதே போலத்தான் பாகற்காயைப் பார்க்கும் போதும் தோன்றும். இயற்கையில் எத்தனை அழகு மறைந்து இருக்கின்றது.


ஒவ்வொரு நாளும் மாலையில் வேலை முடிந்து வந்தது குறைந்தது 1 மணி நேரம் எனது தோட்டத்தில் முன்பெல்லாம் செலவிடுவேன். புற்களை நீக்குவது, மற்றும் உரம் சேர்ப்பது, சுத்தம் செய்வது நீர் விடுவது என்று செடிகளுடன் நேரத்தைச் செலவிடும் போது அன்றைய களைப்பு முற்றிலும் நீங்கி மனமெல்லம் உற்சாகம் வந்து விடும். இது ஏன் என்று தெரிவதில்லை. எனது நண்பர்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். ஆனால் ஜெர்மனிக்கு வந்து அடுக்கு மாடி வீட்டில் இப்போது இருக்கும் போது அப்படி செய்ய முடிவதில்லை. வருத்தமாகத்தான் இருக்கின்றது.

ஆனாலும் சில பூச்செடிகளை வீட்டில் வைத்திருக்கிறேன். எனது அலுவலக மேசையிலும் பூச்செடிகளை அதுவும் இங்கே கிடைக்கக்கூடிய வகைச் செடிகளை வைத்திருக்கின்றேன். காலையில் வேலையத் தொடங்கும் முன் அவை சிரித்துக் கொண்டுப்பதைப் பார்க்க மனதிற்கு சந்தோஷமாகத்தான் இருக்கின்றது.

No comments:

Post a Comment