Sunday, July 5, 2020

ஐரோப்பாவில் கொள்ளை நோய் சிறப்புத் தொடர்-9

முனைவர்.க.சுபாஷிணி

கொரோனா கொள்ளை நோயின் தாக்கம் பெருமளவிற்கு மேற்கு ஐரோப்பிய நாடுகளில் குறையத் தொடங்கிவிட்டது. ஜெர்மனியிலிருந்து 15 ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த வாரம், அதாவது ஜூலை 1ஆம் தேதி தொடக்கம் விமானச் சேவைகள் தொடங்கிவிட்டன. நீண்டகாலம் தனது தாயாரைப் பார்க்க முடியாமல் வருந்திக் கொண்டிருந்த எனது அண்டை வீட்டுக்காரர் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் ஸ்டுட்கார்ட் விமான நிலையத்திலிருந்து ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட் புறப்பட்டுவிட்டார். ஓரளவுக்கு மக்கள் கோடைக்கால விடுமுறையைத் திட்டமிடத் தொடங்கியிருப்பதைக் காணமுடிகின்றது. ஐரோப்பாவைத் தவிர்த்து ஏனைய நாடுகள் எனும் போது சீனாவிற்கு விமானச் சேவை அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது என்பது ஆச்சரியமளிக்கின்றது. அதற்கு எதிர்மாறாக ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவிற்கு விமானச் சேவை இப்போது சாத்தியமில்லை என்பதையே  இருநாடுகளும் உறுதி செய்திருக்கின்றன. வருகின்ற நாட்களில் கொரோனா தொற்றுப் பரவலின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிய நாடுகள் சிலவற்றிற்கும் ஜெர்மனிக்குமான விமானச் சேவைகள் தொடங்கப்படும் என நம்பலாம்.

கொரோனா ஏற்படுத்திய அச்சத்தையும் ஒதுக்கிவிட்டுக் கடந்த சில வாரங்களாக ஐரோப்பாவில் பெருமளவிற்கு நிறவெறிக்கு எதிரான கண்டனக்குரல்களும் இனவாதத்திற்கு எதிரான எதிர்ப்புக்குரல்களும் தொடர்கின்றன. இந்த வாரம் பெல்ஜியத்தில் இனவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் சட்டரீதியான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ள நிகழ்வு செய்தியாகப் பேசப்பட்டது.

ஆப்பிரிக்காவின் கோங்கோ நாடு பெல்ஜியத்தின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த காலகட்டத்தில் ஆண்களும் பெண்களும் அனுபவித்தஇன்னல்களுக்கு அளவில்லை. கோங்குகோ நாட்டில் வியாபாரம் செய்வதற்காகச் சென்றவர்களும் அங்குள்ள கோங்கோ நாட்டு கறுப்பின பெண்களை மணந்தோ அல்லது அவர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதன் வழியாகப் பெற்ற குழந்தைகளை அப்போதைய பெல்ஜிய அரசு கத்தோலிக்க சமய நிறுவனங்களில் சேர்த்திருக்கிறது.  அப்போதைய பெல்ஜிய அரசின் கருத்துப்படி வெள்ளை நிற தந்தைக்கும் கருப்பு இன பெண்ணுக்கும் பிறந்த குழந்தை பாவத்தின் சின்னம் எனக் கருதப்பட்டதால் அத்தகைய குழந்தைகள் பாவமன்னிப்புக்காகத் தேவாலயங்களின் அனாதை ஆசிரமங்களில் பராமரிக்கப் பட்டிருக்கின்றனர். அவர்களில் பெண் குழந்தைகள் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளின் பாதுகாப்பில் அப்போது விடப்பட்டனர்.
1960ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த  பின்னர் தேவாலயத்தில் வசித்து வந்த பெண்கள்  கைவிடப்பட்ட நிலையில், கோங்கோவில் ஏற்பட்ட மிகக்கொடூரமான வன்முறை காலத்தில் அத்தகைய பெண்கள் பலர் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு  துன்பத்திற்குள்ளாயினர். அத்தகைய பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள் சிலர் இப்போது பெல்ஜியம் நாட்டில் வாழ்கின்றனர். அவர்களில் சிலர் பெல்ஜியம் அரசு தங்களுக்கும் தங்கள் பெற்றோருக்கும் இழைத்த கொடுமைகளுக்கு எதிராக சட்டப்படி தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றார்கள். இதற்கு உடனடியாக பெல்ஜியம் அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றாலும், செப்டம்பர் 10-ஆம் தேதி இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வருவதாக இதுபற்றிய அண்மைய செய்தி குறிப்பிடுகின்றது (https://www.euronews.com/2020/07/03/mixed-race-women-sue-belgian-state-over-colonial-era-kidnapping).

இது இப்படியிருக்க, கொரோனா கொள்ளை நோய் ஏற்படுத்தி இருக்கின்ற மிகப் பெரிய சவாலாக உலக நாடுகள் தற்சமயம் எதிர்நோக்குவது பொருளாதார பிரச்சனைகள் தான். இந்த இக்கட்டான காலத்தில் ஐரோப்பாவின் பொருளாதார பலம் பொருந்திய நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் பிரான்சில் அரசு தலைமைப்பதிவியில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. நடப்பு பிரதமரான எடுவாட் ஃபிலிப்பே (Edouard Philippe) தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஒரு மாவட்டத்தின் மேயராக பதவி ஏற்றுக் கொண்டதும், பிரனேஷ் மாவட்டத்தின் மேயராக தற்சமயம் பதவி வகிக்கும் ஷோன் காடெக்ஸ் (Jean Castex) பிரான்சின் பிரதமராக இவ்வாரம் பதவி ஏற்றுக் கொண்டதும் நடந்திருக்கின்றது. புதிய பிரதமருக்கு பிரான்சின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் மிகப்பெரிய சவால் காத்துக் கொண்டிருக்கின்றது என்பது உண்மை.

ஐரோப்பாவின் பல நாடுகளில் கோடைகால சுற்றுலா பற்றிய சிந்தனை மக்களின் சிந்தனையை ஆக்கிரமித்திருக்கிறது. ஜெர்மனியை எடுத்துக்கொண்டால் மக்கள் வெகுவாக பொது உணவகங்களுக்குச் செல்வதும், வெளியே கடைவீதிகளில் உலாவுவதும் இப்போது சர்வ சாதாரணமாகக் காட்சியளிப்பது பார்ப்பதற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கிறது. கொரோணா வைரஸ் தொற்றினால் மிகப்பெரிய அளவில் உயிர்ச் சேதத்தை அனுபவித்த இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்ட இந்தச் சூழலில் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் கொரோனா கொள்ளை நோய் தொற்றுப் பரவலைக் கடுமையாக எதிர்கொள்ள வேண்டிய நிலை தொடங்கிவிட்டது. உதாரணமாக மொண்டெனேகிரோ, புல்காரியா ஆகிய நாடுகளில் கொரோனா நோயினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் வகையில் எண்ணிக்கைகள் அமைகின்றன. ஆயினும், ஒட்டு மொத்த ஐரோப்பாவில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் கற்ற பாடங்களின் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் துணையுடன் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் கொரோனா கொள்ளை நோய்த் தொற்றுகளிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று நம்பலாம்.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் அண்மைய அறிக்கையின் அடிப்படையில் இன்று மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவிக் கொண்டிருக்கும் நாடுகளாக அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் பட்டியலில் அமைகின்றன. இந்நோய் பரவுவதிலிருந்து தடுக்கும் வகையில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் ஐரோப்பா, அமெரிக்கா சீனா ஆகிய நாடுகள் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றன. இன்றைய நிலவரப்படி கொரோனாவுக்கு எதிரான மிக அதிகமான எண்ணிக்கையில் மருத்துவ சோதனைகளை மேற்கொள்ளும் நாடுகளின் வரிசையில் சீனா, அதனையடுத்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் அமைகின்றன.ஜூன் 16-ஆம் தேதி யூரோநியூஸ் பத்திரிகையின் அறிவிப்பின்படி 13 மருந்துகள் கொரோனா வைரஸ்க்கு எதிராக அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் அல்லது மனித உடலில் கொரோனா வைரஸ் தாக்கத்தை முற்றிலும் தடுக்கும் வகையில் மருத்துவச் சோதனைக்குத் தயாராக இருப்பதை வெளியிட்டது (https://www.who.int/docs/default-source/coronaviruse/novel-coronavirus-landscape-covid-19f65d59aff81049f5a50d37bebf0caf93.pdf?sfvrsn=394d10c9_2%26download) . இந்தப் பட்டியலில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்து மற்றும் சுவீடன் கூட்டு முயற்சியில் செயல்படும் மருத்துவ நிறுவனமான AstraZeneca அறிவித்த மருந்துகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயைக் குணப்படுத்தக்கூடிய ஆற்றலுடன் இருப்பதை அறிவித்தது.


கடந்த வாரத்தில் remdesivir என்ற மருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் உடலில் செலுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இது குறிப்பாக 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படக் கூடிய ஒரு மருந்தாகவும் அதிலும் குறிப்பாக நிமோனியா நோய் வந்த நோயாளிகள் ஆக்சிஜன் அதிக அளவில் மூச்சுவிடத் தேவைப்படும் நிலையில் இருப்பவர்களுக்கு இந்த மருந்து நல்ல பலன் அளிப்பதாகவும் கூறப்பட்டது.

மருத்துவ ஆய்வுகளுக்கு ஏராளமான பொருட் செலவு என்பது தவிர்க்கப்பட முடியாத ஒன்று என்ற சூழலில் ஐரோப்பிய ஒன்றியம் "Global Goal: Unite For Our Future" என்ற பொருளில் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்த வகையில் நன்கொடை திரட்டும் ஒரு முயற்சியை மேற்கொண்டது. வெற்றிகரமாக நிகழ்ந்தேறிய இந்த நிகழ்ச்சியில் 6 பில்லியன் யூரோ பணம் சேர்க்கப்பட்டு மேலும் கூடுதலாக நன்கொடைகள் பெறப்பட்டு ஆக மொத்தம் 16 பில்லியன் யூரோ திரட்டப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கொரோனா கொள்ளை நோய்க்கு எதிரான மருந்துகள் உருவாக்கும் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் என்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா ஃபோன் டெர் லையன் ஜூன் மாதம் 27ஆம் தேதி தெரிவித்திருந்தார். தன் மனதை நெகிழ வைத்த இந்த செயல்பாட்டில் உதவிய அனைவருக்கும் தனது நன்றிகளையும் அவர் தொலைக்காட்சி வழியாகத் தெரிவித்துக் கொண்டார். இத்தகைய நடவடிக்கைகளின் வழி மிக அதிகமான ஆய்வுகளுக்கு, அதிலும் குறிப்பாக மருத்துவ ஆய்வுகளுக்குப் பொருளாதார பலம் கிடைப்பது கொரோனா வைரஸ் எதிர்ப்பு தொடர்பான பல்வேறு வகை ஆய்வுகளைச் சாத்தியப்படுத்த இந்தக் காலகட்டத்தில் அத்தியாவசிய தேவையாகின்றது.

ஜூலை மாதம் நம்பிக்கை அளிக்கும் வகையில் தொடங்கியிருக்கின்றது என்றே சொல்லலாம். அமெரிக்காவில் BNT162b1 vaccine என்று அழைக்கப்படும் ஆய்வின் வழி 45 நோயாளிகளுக்கு, அதிலும் குறிப்பாக 18லிருந்து 55 வயது உள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பு மருந்து நல்ல பலனைக் கொடுத்திருப்பதை அமெரிக்க மருத்துவ அமைப்பு வெளியிட்டது (https://www.pfizer.com/news/press-release/press-release-detail/pfizer-and-biontech-announce-early-positive-data-ongoing-0). இந்தச் செய்தி நம்பிக்கையளிக்கும் ஒரு செய்தியாக அமைகின்றது. இனி அடுத்தடுத்த நாட்களில் மேலும் பல கண்டுபிடிப்புகள் மற்றும் சோதனை முடிவுகள் வெளி வரலாம் என்ற நம்பிக்கை அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன. நம்பிக்கையுடன் இருப்போம்!





தொடரும்..

No comments:

Post a Comment