Sunday, April 28, 2013

என் சரித்திரம் - உ.வே.சா வுடன் ஒரு உலா - 48


சைவத் திருமடங்களில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது குருபூஜை. மடத்தை ஸ்தாபித்த குருவின் சிறப்புக்களை மடத்திலுள்ளோர் மட்டுமன்றி பொதுமக்களும் அறிந்து அந்த விழாவில் பங்கெடுத்துக் கொள்ளும் வகையில் இப்பூஜை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது.

திருவாவடுதுறை மடத்தின் குருபூஜைகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உ.வே.சாவிற்குக் கிடைத்தமையால் அந்த விஷேஷ தினத்தின் சிறப்புக்களை என் சரித்திரம் நூலில் குறிப்பிடுகின்றார். இது அக்காலத்தில் குருபூஜை எவ்வகையில் நடத்தப்பட்டது என்பதைப் பதியும் ஆவணமாக இன்று நமக்கு அமைந்திருக்கின்றது. அத்தியாயம் 44ல் வருகின்ற குருபூஜை பற்றிய விரிவான விளக்கங்களிலிருந்து இப்பூஜை எவ்வாறு கொண்டாடப்பட்டது என்பதை வாசிப்போர் அறிந்து கொள்ள முடிகின்றது.

திருவாவடுதுறை ஆதீனத்தை ஸ்தாபித்து வைத்த குருவானவர் ஸ்ரீநமசிவாய மூர்த்திகளாவார். இவரது நினைவாக தை மாதத்தில் அசுவதி நட்சத்திரத்தில் மடத்தின்  குருபூஜை நடைபெறுகின்றது. அக்காலத்தில் இவ்விழாவின் போது உள்ளூர் வாசிகள் மட்டுமன்றி அயலூர் மக்களும் இந்த விழாவில் கலந்து பங்கு கொள்ளும் நிமித்தம் திருவாவடுதுறை வந்து தங்கியிருந்துச் செல்வது வழக்கமாக இருந்திருக்கின்றது. மக்களில் ஜாதி பேதமின்றி அனைவரும் வந்து கலந்து கொள்ளும் வகையிலும் தூரத்திலிருந்தும் மக்கள் வந்திருந்து கலந்து கொண்டனர் என்றும் எங்கு நோக்கினாலும் மக்கள் பெருங்கூட்டமாக இருந்ததைக் தாம் கண்டதையும் உ.வே.சா.குறிப்பிடுகின்றார்.

பூஜை மட்டுமல்லாது இசைக்கச்சேரிகளும் இத்திருவிழாவின் போது தொடர்ந்து நிகழுமாம். நூற்றுக்கணக்கான சங்கீத வித்வான்களும் வந்து கலந்து சிறப்புச் செய்வார்களாம். அவர்களில் கதை சொல்பவர்கள், வாய்ப்பாட்டு கச்சேரி செய்பவர்கள், வீணை, புல்லாங்குழல், கோட்டு வாத்தியம், பிடில் போன்ற இசைக்கருவிகளை வாசிக்கும் கலைஞர்களும் இடம்பெற்றிருந்தனர் என்றும் சமஸ்கிருத வித்துவான்கள், வேத பாராயணம் செய்யும் வித்திவான்களும் தேவார திருப்பாடல்களை இன்னிசையுடன் பாடும் ஓதுவார்களும் தங்கள் தங்கள் கலைத்திறமைகளைக் காட்டி மகிழ்விப்பர் என்றும் குறிப்பிடுகின்றார்.

திருவாடுதுறை மடத்தைச் சார்ந்த கோயில்களிலிருந்தும் மடங்களிலிருந்தும் தம்பிரான்களும் இந்தக் குருபூஜையில் கலந்து கொள்ள வந்து விடுவார்கள். அதோடு இம்மடத்திற்கு அவ்வப்போது வந்து செல்லும் கனவான்களும் இந்த நாளில் குடும்பத்தினருடன்  வந்திருந்து செல்வார்களாம்.

கண்களுக்கும் கருத்துக்கும் விருந்தளிப்பது போலவே வயிற்றுப் பசிக்கும் விருந்தளிக்கும் நிகழ்வும் தவறாமல் நடைபெறுமாம். அக்காலத்தில் குருபூஜை விழாவில் கலந்து கொள்ள வருபவர் யாராகினும் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. உணவு தயாரக உள்ளது என்பதை குறிப்பிட மடத்தில் அன்னக்கொடி ஏற்றப்படுமாம். இக்கொடி ஏற்றப்படும் போது திருவிழாவில் கலந்து  கொள்ள வந்த மக்களோடு, ஏழை எளியோர், வருமையில் வாடுபவர்கள், பரதேசிகள் அனைவருக்கும் பாரபட்ஷமின்றி உணவு வழங்க திருமடம் ஏற்பாடு செய்திருந்ததையும் இக்குறிப்புக்களால் அறிகின்றோம்.

அக்காலத்தில் திருவாவடுதுறை மடத்தில் நடைபெறும் இக்குருபூஜையை மக்கள் அனைவரும் தங்கள் தங்கள் இல்லங்களில் நடைபெறும் ஒரு பெரிய விஷேஷமாக நினைத்துக் கொண்டாடினார்கள். தங்கள் இல்லங்களையும் தெருக்களையும் மாவிலைத் தோரணங்களால் அலங்கரித்து  அச்சமயத்தில் வருகின்ற விருந்தினர்களை உபசரித்து விருந்தளித்து மகிழ்வித்தனர் என்பதையும் வாசிக்கும் போது இது அவ்வூர் மக்களுக்கு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததொரு திருவிழாவாக அமைந்திருந்தது என்பதனையும் உணர முடிகின்றது.

திருவாவடுதுறை மடத்தில் மட்டும் நிகழும் ஒரு நிகழ்வு என்பது அல்லாமல் திருவாவடுதுறை நகருக்கே சொந்தமான ஒரு பெருநாளாக இத்தினம் கொண்டாடப்பட்டிருக்கின்றது. "இத்திருவிழா ஒரு வகையில் தமிழ்நாட்டுக்கே உரியதென்றும் சொல்லலாம்.தமிழ் நாட்டிலுள்ள பலரும் அத்திருநாளில் அங்கே ஒன்று கூடி ஆனந்தமுற்றார்கள்" என்று உ.வே.சா குறிப்பிடுவதைக் காண்கின்றோம்.

இத்தகு நிலையில் விஷேஷம் என்ற அளவில் குருபூஜை விழா தற்சமயம் இல்லையென்றாலும் இன்றளவும் திருவாவடுதுறை நகருக்கான சிறப்பான ஒரு  திருநாளாகக் குருபூஜை அமைந்திருக்கின்றது. கால ஓட்டத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும் கூட திருவாவடுதுறை திருமடம் இன்றளவும் அதன் முக்கியத்துவமும் சிறப்புக்களும் மறைந்தும் அழிந்தும் விடாமல் போற்றிப் பாதுகாத்து வைத்திருப்பதில் பெரும் கடமை ஆற்றுகின்றது என்பதோடு தங்கள் சேவையைத் தங்கள் சொந்த ஊரில் மட்டுமன்றி கடல் கடந்தும் பிற நாடுகளில் சைவ நெறியைத் தொடர்பவர்கள்  பயனுறும் பொருட்டு தொடர்ந்து தத்துவ வகுப்புக்கள் நடத்துவதன் வழியும் நூல்கள் பிரசுரிப்பதன் வழியும் செய்து வருகின்றனர் என்பதை பதிய வேண்டியதும் அவசியமாகின்றது.

சுபா

No comments:

Post a Comment