Saturday, February 23, 2013

கணையாழி விருது விழா


கணையாழி கலை இலக்கிய மாதாந்திர இதழின் சார்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கணையாழி நிர்வாகக்குழு உறுப்பினர் தமனி பிரகாஷ், கவிதைக்கான "ஆண்டாள் விருது' பெற்ற கவிஞர் தீபச்செல்வன், கட்டுரைக்கான "சிவத்தம்பி விருது' பெற்ற பேராசிரியர் க.பஞ்சாங்கம், கணையாழி நிர்வாகக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், விருது வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு, சிறுகதைக்கான "ஜெயகாந்தன் விருது'க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட செங்கை ஆழியானுக்குப் பதிலாக விருதினைப் பெற்ற பத்மநாபன், எழுத்தாளர் ஜெயகாந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கணையாழி நிர்வாகக்குழு உறுப்பினர் சுபாஷிணி டிரெம்மல்.

தமிழனின் வீரத்துக்கும் உறுதிக்கும் பெருமைக்கும் எடுத்துக்காட்டு புலம்பெயர்ந்த தமிழர்கள் என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறினார்.

கணையாழி இதழின் சார்பில் கணையாழி விருதுகள் வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் தீபச்செல்வன் (கவிதை) ஆண்டாள் விருதையும் பேராசிரியர் க. பஞ்சாங்கம் (கட்டுரை) கா. சிவத்தம்பி விருதையும் பெற்றனர். ஜெயகாந்தன் விருது செங்கை ஆழியானுக்கு (சிறுகதை) வழங்கப்பட்டது. விருதுகளை நீதிபதி கே. சந்துரு வழங்கினார்.

இந்த விழாவுக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். விழாவில் அவர் பேசியது:-

புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்பான படைப்புகள் விருது பெற்றுள்ளன. புலம்பெயர்ந்த தமிழர்களால்தான் தமிழ் மொழி உலகுக்கு அறிமுகமாகியுள்ளது. தமிழ், தமிழனின் வீரம், உறுதி, பெருமை ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டு புலம்பெயர்ந்த தமிழர்கள்தான் என்பதில் சந்தேகம் இல்லை.

கணையாழி விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயகாந்தன்.

வாழ்த்துரை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தன் வாழ்க்கையை பற்றி எழுதுவதுதான் உண்மையான கவிதை, பிறர் உணர்வை தன் உணர்வாக கருதி எழுதுவது சிறந்ததாக இருக்காது. உணர்வுகளுக்கு அருகில் உள்ள படைப்புகளைத்தான் விருதுகளுக்கு தேர்வு செய்ய தூண்டும்.

இலங்கைப் பிரச்னையை பல அரசியல் கோணங்களில் பார்க்கிறோம். அது பல்வேறு தளங்களில் அரசியல் ஆக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் உணர்வுகளை உணரவேண்டும் என்றார்.

நீதிபதி கே. சந்துரு: விருது பெற்றவர்களை வாழ்த்திய நீதிபதி கே. சந்துரு, ஃபேஸ்புக்கில் விமர்சனம் எழுதினால்கூட கை விலங்கு மாட்டப்படுகிறது. இப்போது உள்ள சூழ்நிலையில் மாற்றுக் கருத்துகூட கூறமுடியாது. கருத்துச் சுதந்திரத்தை அரசு மட்டுமல்லாமல் சில குழுக்களும் பறிக்கின்றன என்றார்.

விருது பெற்றவர்களை சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறை பேராசிரியர் வீ. அரசு, எழுத்தாளர்கள் பி. லெனின், கி.அ. சச்சிதானந்தம், கணையாழி நிர்வாகக் குழு உறுப்பினர் சுபாஷிணி டிரெம்மல், பத்திரிகையாளர் ரங்கஸ்ரீ ஸ்ரீநிவாஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

முன்னதாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் கணையாழி இதழை நடத்துபவருமான ம. ராஜேந்திரன் வரவேற்றார். இந்த விழாவில் பல்வேறு எழுத்தாளர்களும் அறிஞர்களும் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.

நன்றி:- தினமணி

No comments:

Post a Comment